திருமலையில் ஒருநாளில் மூவரை காணவில்லை – பீதியடைய வேண்டாம் என பிரதி அமைச்சர் தெரிவிப்பு

by ilankai

திருகோணமலையில் நேற்றைய தினம் திங்கட்கிழமை மூவர் காணாமல் போனமை தொடர்பில் பொலிஸார் துரித விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும், இது குறித்து பொதுமக்கள் தேவையற்ற அச்சம் கொள்ளத் தேவையில்லை என பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா தெரிவித்துள்ளார்.​மாவட்ட பொது வைத்தியசாலை முச்சக்கர வண்டித் தரிப்பிடத்திலிருந்து நேற்றைய தினம் காணாமல் போயிருந்த சாரதி, இன்று படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.​நீதிமன்ற வீதியைச் சேர்ந்த 17 வயதுடைய எம்.எல்.எம்.எம். முன்சித் எனும் மாணவன் நேற்றைய தினம் திங்கட்கிழமை பாடசாலைக்கு சென்ற சமயம் காணாமல் போயுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.​திருகோணமலை கடற்படைத் தளத்தில் கடமையாற்றும் மட்டக்களப்பைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் நேற்றைய தினம் விடுமுறையில் சென்ற நிலையில் காணாமல் போயுள்ளார்.​இந்தச் சம்பவங்கள் தொடர்பில் பொலிஸ் உயர்மட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடிய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா,​இந்த மூன்று சம்பவங்கள் தொடர்பாகவும் பொலிஸார் தனித்தனியாக விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். விசாரணைகளில் கணிசமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதுடன், பல முக்கிய தகவல்கள் திரட்டப்பட்டுள்ளன. சட்டம் ஒழுங்கும் நிலைநாட்டப்படுவதை அரசாங்கம் உறுதிப்படுத்தும்.  இச்சம்பவங்களுக்குப் பின்னால் உள்ள உண்மைகள் விரைவில் வெளிக்கொண்டு வரப்படும் ​பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு நீதி கிடைக்கவும், மாயமான ஏனைய இருவரையும் பாதுகாப்பாக மீட்க சகல பாதுகாப்புப் பிரிவினரும் ஒருங்கிணைந்து செயற்பட்டு வருவதாக மேலும் தெரிவித்தார்.

Related Posts