கந்தளாய் பகுதிகளில் நிலவும் ஒருவித மர்ம நோய்த் தாக்கத்தினால் பல ஏக்கர் கணக்கான நெற்பயிர்கள் மிக வேகமாக அழிவடைந்து வருவதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.குறிப்பாக பரட்டைக்காடு, எரிக்கிலம்காடு, செட்டிக்காடு, ஏலாம் வாய்க்கால், வட்டுக்கச்சி மற்றும் வான் எல போன்ற பகுதிகளில் இந்தப் பாதிப்பு மிகத் தீவிரமாக உள்ளது.அண்மையில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்திலிருந்து மீண்டு, தற்போது கதிர் விடும் நிலையில் இருந்த பயிர்கள், திடீரென மஞ்சள் நிறமாக மாறிப் பின்னர் கருகி வருவதால் விவசாயிகளின் பெரும்போகச் செய்கை கேள்விக்குறியாகியுள்ளது.இந்த நோய்த் தாக்கம் குறித்து விவசாயத் திணைக்கள அதிகாரிகளுக்கு முன்கூட்டியே தகவல் வழங்கப்பட்ட போதிலும், அவர்களால் நோயைக் கண்டறியவோ அல்லது விஞ்ஞான ரீதியான தீர்வுகளை வழங்கவோ முடியவில்லை என விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.அதிகாரிகளின் முறையான வழிகாட்டல் இல்லாத காரணத்தினால், விவசாயிகள் தமது ‘கேள்வி ஞானத்தின்’ அடிப்படையிலும், கிருமிநாசினி விற்பனை நிலைய உரிமையாளர்களின் பரிந்துரையிலும் பல்வேறு மருந்துகளைப் பயன்படுத்தி வருகின்றனர். இவ்வாறான தெளிவற்ற முறைகளால் பயிர்கள் மேலும் பாதிக்கப்பட்டு, விவசாயிகளுக்குப் பாரிய பொருளாதார நஷ்டம் ஏற்பட்டுள்ளது.விவசாய அதிகாரிகளின் நேரடிப் பங்களிப்பு இல்லாத நிலையில், தமக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை என கவலை வெளியிட்டுள்ள விவசாயிகள், நோய் என்னவென்று தெரியாமல் கண்ட கண்ட மருந்துகளைத் தெளிப்பதாலேயே பாதிப்பு இரட்டிப்பாவதாகத் தெரிவிக்கின்றனர்.பல வகையான மருந்துகளைத் தெளித்தும் இந்த நோயைக் கட்டுப்படுத்த முடியாமல் போனது விவசாயிகளிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
கந்தளாயில் நோயால் கருகும் நெற்பயிர்கள் – கவலையில் விவசாயிகள்!
2