முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் காணாமல் போன இளைஞரின் சடலம் விளையாட்டு மைதான கிணற்றில் இருந்து இன்று பிற்பகல் மீட்கப்பட்டுள்ளது.புதுக்குடியிருப்பு 10ம் வட்டாரம் பகுதியில் வசித்து வரும் 24 வயதுடைய பாலசுப்பிரமணியம் சாம்சன் என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நேற்றையதினம் இரவு சுமார் 7.30 மணியளவில், குறித்த இளைஞன் வீட்டிற்கு வந்த நபர் ஒருவர் வீட்டிலிருந்து மோட்டார் சைக்கிளில் குறித்த இளைஞனை ஏற்றி சென்றதாகவும், அதன் பின்னர் அவர் தொடர்பில் எந்த தகவலும் கிடைக்கவில்லை என்றும், இதுவரை வீடு திரும்பவில்லை என்றும் அவரது அம்மா, புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் இன்று காலை முறைப்பாடு பதிவு செய்திருந்தார்.குறித்த முறைப்பாட்டையடுத்து சம்பவம் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் காணாமல் போன குறித்த இளைஞனின் வீட்டிற்கு அருகாமை உள்ள விடியல் விளையாட்டு மைதானத்தில் உள்ள கிணற்று கட்டில் குறித்த இளைஞனின் தொலைபேசி கண்டுபிடிக்கப்பட்டதுடன், கிணற்றுக்குள் குறித்த இளைஞருடையதாக கருதப்படும் காலணி ஒன்று காணப்பட்டது.அதனையடுத்து குறித்த கிணற்று நீரினை வெளியேற்றி தேடுதல் மேற்கொண்டபோது குறித்த இளைஞன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.இது கொலையா என்ற கோணத்தில் மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
0
previous post