வரலாற்று படங்களை தொடர்ந்து எடுப்பேன்! இயக்குநர் மோகன் !

by ilankai

 இயக்குநர் மோகன் ஜி இயக்கத்தில், நடிகர் ரிச்சர்ட் ரிஷி நடிப்பில் வெளியான திரௌபதி திரைப்படம் சமூக ரீதியாக பெரும் விவாதங்களை ஏற்படுத்தியதோடு, வணிக ரீதியாகவும் குறிப்பிடத்தக்க வெற்றியை பெற்றது. அந்த வெற்றியைத் தொடர்ந்து, மோகன் ஜி உருவாக்கிய அடுத்த படமாக திரௌபதி 2 உருவானது. இப்படம் ஜனவரி 23ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.திரௌபதி 2 படத்திலும் கதாநாயகனாக ரிச்சர்ட் ரிஷி நடித்திருந்தார். முதல் பாகத்தின் தொடர்ச்சியாக சமூக நீதி, பண்பாட்டு அடையாளம் போன்ற கருத்துகளை மையமாக கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டதாக கூறப்பட்டது. எனினும், படம் வெளியான அதே நாளில் நடிகர் அஜித்தின் மங்காத்தா திரைப்படம் ரீ-ரிலீஸாக திரையரங்குகளில் வெளியானது. இதன் காரணமாக திரௌபதி 2 படத்திற்கு எதிர்பார்த்த அளவிலான திரையரங்கு வசூல் கிடைக்கவில்லை என்ற தகவல்கள் வெளியாகின.இந்த சூழ்நிலையில், சேலம் மாவட்டம் எடப்பாடியில் உள்ள ஒரு திரையரங்கில், திரௌபதி 2 படத்தை மக்கள் இலவசமாக பார்க்கும் வகையில் திரையிட ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த முயற்சி நேற்று மற்றும் இன்று நடைபெற்று வருகிறது. வசூல் குறைவு என்ற விமர்சனங்களுக்கு மத்தியில், படத்தை நேரடியாக மக்களிடம் கொண்டு சேர்க்கும் முயற்சியாக இந்த இலவச திரையிடல் அமைந்தது.இந்த நிகழ்வின் போது, இயக்குநர் மோகன் ஜி தானும் பொதுமக்களுடன் அமர்ந்து திரௌபதி 2 படத்தை பார்த்தார். மக்களோடு மக்களாக படம் பார்த்த அவரது செயல்பாடு, அங்கிருந்தவர்களிடையே கவனத்தை ஈர்த்தது. படம் முடிந்த பின் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.அந்த பேட்டியில், திரௌபதி 2 திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. சுதந்திரப் போராட்ட வீரர்கள் மருது பாண்டியர்கள், வீர மங்கை வேலுநாச்சியார் , தீரன் சின்னமலை தஞ்சை பெரிய கோவிலின் வரலாறு திரைப்படமாக எடுக்க உள்ளதாக கூறியிருந்தார்.

Related Posts