ஐக்கிய தேசியக் கட்சி – ஐக்கிய மக்கள் சக்தி இணைந்த கூட்டணியை அமைப்பதற்கான முயற்சிகள் 99.99 சதவீதம் வெற்றியடைந்துள்ளது என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதி பொதுச்செயலாளர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார்.இது தொடர்பில் ஊடகங்களுக்கு அவர் மேலும் கூறுகையில்,புதிய ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தா பெப்ரவரி 4ஆம் திகதி முழுமையாக டிஜிட்டல் மயப்படுத்தப்பட்ட ஒரு தளமாக பரிணமிக்கவுள்ளது. அதற்கான செயற்றிட்டங்கள் நிறைவடைந்துள்ளன.ஐ.தே.க.வின் உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்களுக்குப் புத்துயிரூட்டும் வகையில் கட்சி மீளக் கட்டியெழுப்பப்படும். ஐக்கிய மக்கள் சக்தியுடனான பேச்சுவார்த்தைகளும் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.ஐ.தே.க. செயற்குழுவில் இதுகுறித்த யோசனைகளை நாம் முன்வைத்துள்ளோம். ஐக்கிய மக்கள் சக்தியின் யோசனைகளையும் பெற்றுக்கொள்ள வேண்டியுள்ளது.இந்தப் பேச்சுவார்த்தைகள் முழுமையாக நிறைவடைந்த பின்னர் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விரைவில் ஐக்கிய மக்கள் சக்தி தலைமையகத்துக்குச் செல்வார். அத்தோடு இரு கட்சிகளினதும் செயற்குழுக்களை ஒன்றிணைத்து கூட்டு செயற்குழு கூட்டமொன்றை சிறிகொத்தாவில் நடத்த எதிர்பார்த்துள்ளோம்.எனவே, எம்மில் இருந்து பிரிந்து சென்ற நண்பர்களுடன் மீண்டும் இணைவதற்காக சிறிகொத்தாவைத் தூய்மைப்படுத்தி அழகுபடுத்தியுள்ளோம். ஐக்கிய தேசியக் கட்சி – ஐக்கிய மக்கள் சக்தி இணைந்த கூட்டணியை அமைப்பதற்கான முயற்சிகள் 99.99 சதவீதம் வெற்றியடைந்துள்ளது.கூட்டணியின் தலைமைத்துவம் தொடர்பில் இரு தலைவர்களுக்கும் இடையிலான தனிப்பட்ட சந்திப்பின் போது தீர்மானிக்கப்படும். அண்மையில் முன்னாள் ஜனாதிபதி ரணில், தான் தற்போது செயற்பாட்டு அரசியலில் இல்லை என்று தெரிவித்திருந்தார்.அந்தவகையில் அவர் ஓர் ஆலோசகராகச் செயற்பட்டு இக்கட்சியை மீண்டும் சரியான பாதையில் கொண்டு செல்வதற்கு வழிநடத்துவார். அது மாத்திரமின்றி இருதரப்பு இணக்கப்பாட்டுடன் தலைமைத்துவக் குழுவொன்றும் நியமிக்கப்படும். எது எவ்வாறிருப்பினும் இரு கட்சிகளும் இணைய வேண்டும் என்பதே தற்போதைய அத்தியாவசிய தேவையாகும். அதற்கமைய நிபந்தனையின்றி நாம் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைவோம். அதன் பின்னர் பாரிய பயணமொன்றை ஆரம்பிப்போம் என்றார்.
ரணில் விரைவில் ஐக்கிய மக்கள் சக்தி தலைமையகத்துக்குச் செல்வார்! ஹரின் பெர்னாண்டோ தகவல்
7