2011 ஆம் ஆண்டு கிவுல் ஓயாத் திட்டம் தயாரித்ததிலிருந்து இன்று வரை வெளிப்படைத்தன்மை இல்லாமல் மிக இரகசியமாகவே அனைத்து ஏற்பாடுகளும் நடைபெறுகின்றன. இந்தப் போக்கு ஏன் என்று கிவுல் ஓயாத் திட்டம் தொடர்பில் நாடாளுமன்றத் தொகுதியில் நேற்று நடைபெற்ற விசேட கலந்துரையாடலில் சீற்றத்துடன் கேள்வி எழுப்பினார் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ப.சத்தியலிங்கம்.இந்தக் கூட்டத்தில் பங்குபற்றிய இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் து.ரவிகரனும் இந்தத் திட்டத்துக்குக் கடும் எதிர்ப்பை வெளியிட்டார்.கிவுல் ஓயா நீர்ப்பாசனத் திட்டம் தொடர்பான விசேட கூட்டமொன்று நேற்று நாடாளுமன்ற வளாகத்தில் துறைசார் அமைச்சர் கே.டி.லால்காந்த தலைமையில் நடைபெற்றுள்ளது. இது தொடர்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ப.சத்தியலிங்கம் ஊடகங்களுக்கு விசேட செய்திக்குறிப்பு ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு:-“கிவுல் ஓயா நீர்ப்பாசன திட்டம் தொடர்பான விசேட கூட்டமொன்று இன்று (நேற்று) நாடாளுமன்ற வளாகத்தில் துறைசார் அமைச்சர் கே.டி.லால்காந்த தலைமையில் இடம்பெற்றது.இக்கூட்டத்தில் அமைச்சர் பிமல் ரத்நாயக்க மற்றும் துறைசார் அமைச்சின் பிரதி அமைச்சர்கள், கூட்டுறவு பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க, அமைச்சின் அதிகாரிகள் மற்றும் மகாவலி – எல் வலய விவசாய அமைப்புகளின் பிரதிநிகள் எனப் பலர் கலந்துகொண்டிருந்தனர்.இவ்வாறான ஒருகூட்டம் நடைபெற இருப்பதாகவும் அதில் கலந்துகொள்ளுமாறும் ஒருசில தினங்களுக்கு முன் பிறிதொரு நிகழ்வில் தெரிவித்த அமைச்சர் கே.டி.லால்காந்த அதற்கான அழைப்பு எங்களுக்கு அனுப்பப்படும் என அப்போது தெரிவித்தார்.ஆனால் இன்றைய (நேற்றைய) கூட்டம் தொடர்பாக எமக்கு அறிவிக்கப்படாத நிலையில் நானும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் அவர்களும் கலந்துகொண்டோம்.அமைச்சர் லால்காந்த இதன்போது எமது கருத்தை அறிய ஆவலாக உள்ளார் எனத் தெரிவித்தார்.மகாவலி – எல் வலய குடியேற்றம் தொடர்பான விடயங்களிலும் அங்கு இப்போது நடைபெறும் கிவுல் ஓயா நீர்ப்பாசன திட்டம் தொடர்பிலும் கசப்பான கடந்தகால அனுபவங்களும் கரிசனையும் எமக்கு உள்ளன என்பதை அச்சபைக்கு தெரியப்படுத்தினோம்.2011ஆம் ஆண்டு கிவுல் ஓயாத் திட்டம் தயாரித்ததிலிருந்து இன்றுவரை வெளிப்படைத்தன்மை இல்லாமல் மிக இரகசியமாகவே அனைத்து ஏற்பாடுகளும் நடைபெறுவதாக சபைக்கு சுட்டிக்காட்டினோம்.இவ்வாறே செட்டிகுளத்தில் நடைபெறும் கீழ்மல்வத்து ஓயா நீர்ப்பாசனத் திட்டம் இரகசியமாகச் சம்பந்தப்பட்ட மாவட்ட மக்களுக்குத் தெரியாமல், அத்திட்டத்துக்கான காரியாலயத்தை இரகசியமாக அனுராதபுரத்தில் அமைத்து வேலைகளை முன்னெடுத்தமை தொடர்பிலும் தெரியப்படுத்தினோம்.இறுதியாக நடைபெற்ற வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கிவுல் ஓயாத் திட்டம் தொடர்பான திட்ட முன்மொழிவை எமது மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் ஆராய்ந்து பொருத்தமான அனுமதியை பெறவேண்டும் என்று நான் முன்மொழிந்திருந்தேன். அவ்வாறு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதை அமைச்சருக்குச் சுட்டிக்காட்டினேன்.மகாவலி – எல் வலய அபிவிருத்தி என்ற பெயரில் அங்கிருந்த பூர்வீக குடிமக்களின் காணிகள் அபகரிக்கப்பட்டு 1983இல் குடியேற்றம் செய்யப்பட்டாலும் இதுவரை மகாவலி நீர் அங்கு கொண்டுவரப்படவில்லை. கிவுல் ஓயாத் திட்ட முன்மொழிவில் மகாவலி நீரை கொண்டுவரும் சாத்தியக்கூறுகள் இல்லாததாலேயே மாற்றீடாக இந்தத் திட்டம் கொண்டுவரப்படுவதாக இருப்பதையும் மேற்படி திட்ட நோக்கத்தில் புதிதாக அபிவிருத்தி செய்யும் இடத்தில் புதிய குடியேற்றவாசிகள் குடியமர்த்தப்படுவார்கள் என்று குறிப்பிடப்பட்டதையும் தெளிவுபடுத்துமாறு கோரினோம்.எமது கருத்தைக் கேட்டறிந்த அமைச்சர் உட்பட்ட குழுவினர் பின்வரும் உறுதிமொழிகளை எமக்கு வழங்கினர்:-* திட்டப் பிரதேசத்துடன் தொடர்புடைய அனைத்து மக்கள் பிரதிநிகளுடனும் பிரதேச மக்களுடனும் பெப்ரவரி மாத முற்பகுதியில் தெளிவுபடுத்தும் கலந்துரையாடல் நடைபெறும்.* புதிய குடியேற்றவாசிகள் வெளிமாவட்டங்களில் இருந்து கொண்டுவரப்படமாட்டர்கள்.சம்பந்தப்பட்டவர்களுடன் கலந்துரையாடாது திட்டத்தைத் தயாரித்து நடைமுறைப்படுத்தும் தறுவாயில் எமது தலையீட்டையடுத்து தெளிவுபடுத்தல் செய்ய ஆயத்தமாகும் செயற்பாடு ஆபத்தானது, கண்டிக்கப்பட வேண்டியது.மேற்படி திட்டத்தால் நாம் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் மற்றும் சவால்கள் தொடர்பாக அனைத்துத் தரப்பினருடனும் ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுக்கும் செயற்பாட்டில் அனைவரும் இணைந்து செயற்பட நடவடிக்கை எடுத்துள்ளோம். அனைவரையும் இந்தச் செயற்பாட்டில் இணைந்து பணியாற்ற முன்வருமாறு வேண்டுகின்றேன்.” – என்று சத்தியலிங்கத்தின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில் கூறியவை வருமாறு:-“தமிழ் மக்களுக்குப் பல்வறேு வழிகளிலும் பாதகமாக இருக்கின்ற கிவுல் ஓயாத் திட்டம் தொடர்பான கலந்துரையாடல் விவசாய அமைச்சர் கே.டி.லால்காந்த மற்றும் சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க ஆகியோரின் பிரசன்னத்துடன் இடம்பெற்றது.இந்தக் கலந்துரையாடலில் கிவுல் ஓயாத் திட்டம் தொடர்பில் தெளிவூட்டுகின்ற வகையிலும், திட்டம் தொடர்பான ஆலோசனைகள் மற்றும் கருத்துக்களைக் கேட்டறியும் கலந்துரையாடலாக இது அமைந்திருந்தது.இந்த கிவுல் ஓயாத் திட்டத்தின் பாதகத் தன்மைகள் தொடர்பில் எடுத்துக்கூறி நானும், வைத்தியர் சத்தியலிங்கமும் இந்தத் திட்டத்தை மிகக் கடுமையாக எதிர்த்தோம்.இந்தத் திட்டம் செயற்படுத்தப்பட்டால் தமிழர்களது இனப்பரம்பல் கோலம் மற்றியமைக்கப்படுவதுடன், தமிழர்களது பூர்வீகத் தொல்லியல் சான்றுகளும் அழிக்கப்படும் என்பதைச் சுட்டிக்காட்டினோம்.இது தவிர சுற்றுச்சூழல் பாதிப்பு நிலைகள் ஏற்படும் அபாய நிலைகள் இருப்பதையும் இதன்போது மிகத் தெளிவாகச் சுட்டிக்காட்டியிருந்தோம்.இனப்பரம்பல் கோலத்தை மாற்றியமைக்கும் கிவுல் ஓயாகுறிப்பாக இந்தக் கிவுல் ஓயா நீர்த்தேக்கத் திட்டத்தைச் செயற்படுத்தினால் வவுனியா வடக்கில் இருக்கின்ற தமிழ் மக்களின் பூர்வீக இராமன்குளம், கொட்டோடைக்குளம், ஒயாமடுக்குளம், வெள்ளான்குளம், பெரியகட்டுக்குளம், பனிக்கல்மடுக்குளம், சன்னமுற்றமடுக்குளம், கம்மாஞ்சிக்குளம், குறிஞ்சாக்குளம், புலிக்குட்டிக்குளம், திரிவைச்சகுளம் முதலான சிறியநீர்ப்பாசனக்குளங்களும், அவற்றின் கீழான வயல்காணிகளும், வெடிவைச்சகல்லு குளத்தின்கீழ்வரும் வயல்காணிகள் பகுதியளவிலும், நாவலர்பாம், கல்லாற்றுக்குளம், ஈச்சன்குளம், கூழாங்குளம் வயற்காணிகளும் வவுனியா வடக்கிலுள்ள பழந்தமிழ் கிராமங்களான காட்டுப்பூவரசங்குளம் கிராமம், காஞ்சூரமோட்டை கிராமம், மருதோடைக் கிராமத்தின் ஒருபகுதி போன்ற தமிழ் மக்களின் பூர்வீகக் குளங்களும், வயல்நிலங்களும், கிராமங்களும் நீரேந்துப்பகுதிகளுக்குள் மூழ்கிப்போகும் என்பதைச் சுட்டிக்காட்டினோம்.இவ்வாறாக தமிழ் மக்களை அவர்களுடைய பூர்வீக இடங்களிலிருந்து வெளியேற்றிவிட்டு, குடியேற்றப்பட்ட 6 ஆயிரம் பெரும்பான்மையினக் குடும்பங்களை வலுப்படுத்தி தமிழ் மக்களின் இனப்பரம்பல் கோலத்தை மாற்றியமைக்கும் இவ்வாறான திட்டங்களை ஒருபோதும் எம்மால் அனுமதிக்க முடியாது என்று எம்மால் தெரிவிக்கப்பட்டிருந்தது.கருத்திலெடுக்கப்படாத சுற்றுச்சூழல்பாதிப்புஇந்தக் கிவுல் ஓயாத் திட்டத்துக்காக வவுனியா பெரிய கட்டுக்குளம் பகுதியிலுள்ள பாரிய ஒதுக்கக் காடுகள் அழிக்கப்படவுள்ளன. அத்தோடு கொக்குத்தொடுவாயிலுள்ள கிரிபன்வெவ என்று பெயர் மாற்றப்பட்டுள்ள தமிழர்களின் பூர்வீக ஆமையன் குளத்துக்கு நீரை நகர்த்துகின்றபோது 2 ஆயிரத்து 500 ஹெக்டெயர் காடுகள் அழிந்துவிடும் என்று சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீட்டு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.அதேவேளை, இந்தத் திட்டத்தை அண்மித்த புதிய குடியேற்றங்களுக்காக 1,500 ஹெக்டெயர் அளவிலான வாழ்விடத்தை வனஜீவராசிகள் இழப்பதால் மனித – யானை மோதல்கள் மற்றும் ஏனைய வனஜீவராசிகளுக்கிடையிலான மோதல்கள் தீவிரமடையும் என்று வனஜீவராசிகள் திணைக்களம் கவலை தெரிவித்துள்ளதாக இந்தக் கிவுல் ஓயாத் திட்டத்தின் சுற்றுச் சூழல் பாதுகாப்பு மதிப்பீட்டு அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.இந்தத் திட்டத்தால் மேம்படுத்தப்படவுள்ள விவசாய நிலங்களைப் பாதுகாப்பதற்காக மின்சார வேலிகள் அமைக்கப்பட்டால் காட்டுயானைகள் மற்றும் ஏனைய வனஜீவராசிகளின் நடமாட்டம் கேள்விக்குறியாகும். இதனால் வனஜீவராசிகளின் உயிரவாழ்வு தொடர்பான பிரச்சினை உருவாகும்.காட்டு யானை உள்ளிட்ட வனஜீவராசிகள் புதிய வழித்தடங்களை நாடினால் மின்சார வேலிகளை மேலும் 50 கிலோமீற்றருக்கு அதிகரிக்கும் நிலை ஏற்படும் எனவும், எனவே அதற்கு மேலதிக நிதி தேவைப்படும் எனவும் வன ஜீவராசிகள் திணைக்களம் கரிசனை வெளியிட்டுள்ளது.எதிர்காலத்தில் ஒதுக்கக் காடுகளை அழிக்கும் நில மேலும் தீவிரமடைந்தால் நீண்டகாலத்தில் மழைவீழ்ச்சி குறைவடைவதற்கான நிலைமை ஏற்படலாம் எனக் கண்டறியப்பட்டுள்ளது.குறித்த கிவுல் ஓயாத் திட்டப் பகுதியில் மொத்தம் 88 தாவர இனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவற்றில் 2 தாவர இனங்கள் தேசிய அளவில் அச்சுறுத்தலுக்கு உள்ளானவையாகக் காணப்படுவதுடன், முக்கியமான 7 தாவர இனங்களும் அடையாளம் காணப்பட்டுள்ளன.அதேவேளை, இந்தப் பகுதியில் 214 விலங்கு இனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவற்றில் 14 விலங்கு இனங்கள் உள்ளூரைச் சேர்ந்தவையாகக் காணப்படுகின்றன. மேலும் இங்கு காணப்படும் 4 விலங்கு இனங்கள் உலக அளவில் ஆபத்துக்கு உள்ளானவையாகக் காணப்படுவதுடன், 8 விலங்கு இனங்கள் தேசிய அளவில் அழிந்து வருபவையாகவும் உள்ளன.அதேவேளை பறவைகளில் புலம்பெயர்ந்த இனங்களும் இந்தப் பகுதியில் அடையாளம் காணப்பட்டுள்ளன.ஆகவே சுற்றுச்சூழல் பாதுகாப்புத் தொடர்பில் அவதானம் செலுத்திகின்றபோது இந்தத் திட்டத்தின் நேர்மைமறையான முடிவுகளை விடவும் எதிர்மறையான தாக்கங்களே அதிகமாக இருக்கின்றன என்பதையும் இதன்போது சுட்டிக்காட்டியிருந்தோம்.வன்னிக்கும் தமிழர்களுக்குமான வரலாற்றுத் தொடர்பு விழுங்கப்படும்மேலும் கிவுல் ஓயாத் திட்டத்தைச் செயற்படுத்தினால் நீரேந்துப் பகுதிக்குள் 47 தொல்லியல் இடங்கள் மூழ்கிப் போகும் அபாய நிலை ஏற்படும்.தமிழர்களின் பூர்வீகத்தைப் பறைசாற்றும் வன்னி இராச்சியத்துடன் தொடர்புடைய வரலாற்றுத் தொன்மங்களே இவ்வாறு கிவுல் ஓயாத் திட்டத்தில் மூழ்கிப் போகும் நிலையில் காணப்படுகின்றன என்பதும் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது.எனவே, தமிழர்களுக்கும் வன்னிக்கும் இடையிலான நீண்டகால வரலாற்றுத் தொடர்பை நீரில் மூழ்கச் செய்கின்ற இந்தத் திட்டத்தை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்ற எமது கருத்துக்களை இதன்போது தெரிவித்திருந்தோம்.இந்நிலையில் குறித்த திட்டத்தால் பாதிப்புக்கள் எவையும் இடம்பெறாது என்று தெரிவித்த மகாவலி அதிகார சபையினர், கிவுல் ஓயாத் திட்டம் தொடர்பாக வவுனியாவில் தெளிவூட்டல் கலந்துரையாடல் ஒன்றை நடத்துவர் எனத் தெரிவித்தனர்.” – என்றார்.
கிவுல் ஓயாத் திட்டம்; இரகசிய நகர்வு ஏன்? சத்தியலிங்கம் பாய்ச்சல்! ரவிகரனும் கடும் எதிர்ப்பு
2
previous post