விசா மோசடி: நண்பரை இங்கிலாந்துக்கு அனுப்ப முயன்ற இலங்கை நபர் கைது!

by ilankai

தனது விசா மற்றும் போர்டிங் பாஸைப் பயன்படுத்தி மற்றொரு நபருக்கு இங்கிலாந்து பயணத்தை ஏற்பாடு செய்ததாகக் கூறி, இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த இங்கிலாந்து நாட்டவரை கெம்பேகவுடா சர்வதேச விமான நிலைய (KIA) பொலிஸார் கைது செய்துள்ளனர்.கைது செய்யப்பட்டவர் கண்டியா ராஜகோபால் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர், தனது நண்பர் சருஷன் குணசேகரன் என்பவருக்கு தனது விசா மற்றும் போர்டிங் பாஸை வழங்கியுள்ளார். அந்த ஆவணங்களைப் பயன்படுத்தியே சருஷன் இங்கிலாந்துக்குப் பயணம் செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.பயணிகள் பரிமாற்றப் பகுதியில் விமானத்திற்காகக் காத்திருந்த ராஜகோபால், தனது ஆவணங்களைத் தொலைத்துவிட்டதாக கூறி, மாற்று ஆவணங்களைப் பெற முயன்றுள்ளார். ஆனால், பொலிஸார் நடத்திய விசாரணையில் அவரது நடவடிக்கைகள் சந்தேகத்தை ஏற்படுத்தியதால், மேலதிக விசாரணை மேற்கொள்ளப்பட்டது.விசாரணையில், ராஜகோபால் முன்கூட்டியே தனது நண்பரை விமான நிலையத்தில் சந்திக்கச் சொல்லி, தனது ஆவணங்களை ஒப்படைத்து அவரை இங்கிலாந்துக்கு அனுப்பி வைத்திருந்தது தெரியவந்தது. நண்பர் வெளிநாடு சென்ற பிறகு, ராஜகோபால் தனது ஆவணங்கள் காணாமல் போய்விட்டதாகப் புகார் அளித்து, அவற்றின் மாற்றுப் பிரதிகளைப் பெற முயன்றதாகவும் போலீசார் கூறினர்.இருவரும் இங்கிலாந்தில் அகதி அந்தஸ்தைப் பெற முயற்சித்திருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ராஜகோபால் பாதுகாப்புச் சோதனைகளை எவ்வாறு கடந்து சென்றார், அவரது நண்பர் ஆவணங்களை எவ்வாறு பயணத்திற்கு பயன்படுத்தினார் என்பது குறித்தும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.”விமான நிலையத்திற்கு முன்பு அழைத்த தனது நண்பருக்கு தனது விசா மற்றும் விமான டிக்கெட்டை வழங்கியதற்காக இலங்கையர் ஒருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த விசா மற்றும் போர்டிங் பாஸைப் பயன்படுத்தி அந்த நண்பர் வெளிநாட்டுக்கு பறந்து சென்றார்” என்று பொலிஸ் துணை ஆணையர் (வடகிழக்கு) ஜி.கே. மிதுன் குமார் தெரிவித்தார்.மேலும்,”பின்னர் குற்றம் சாட்டப்பட்டவர் விமான நிலையத்தில் மற்றொரு டிக்கெட்டை முன்பதிவு செய்ய முயன்றபோது, விமான நிலைய அதிகாரிகள் இந்த விஷயத்தை எங்கள் கவனத்திற்குக் கொண்டு வந்தனர். அவரை காவலில் எடுத்து மேலும் விசாரணை நடத்தி வருகிறோம்,” என்றும் அவர் தெரிவித்தார்.BIAL பொலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணையை தீவிரப்படுத்தியுள்ள நிலையில், ராஜகோபால் தற்போது காவலில் உள்ளார். அவரது ஆவணங்களைப் பயன்படுத்தி இங்கிலாந்துக்குச் சென்ற அவரது கூட்டாளி பற்றிய கூடுதல் தகவல்களைச் சேகரிக்க பொலிஸார் முயற்சித்து வருகின்றனர்.

Related Posts