தற்போதைய அரசியல் சூழலில், விகாரைகளின் சொத்துக்கள் மற்றும் மத விவகாரங்களில் அரசாங்கத்தின் தலையீடு குறித்து ரணில் விக்ரமசிங்க கருத்து தொிவித்துள்ளாா். காலி பிரதேசத்தில் நடைபெற்ற சமய நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ரணில் விக்ரமசிங்க இது குறித்த கருத்துக்களை வெளியிட்டார். 1815-ஆம் ஆண்டு கண்டி ஒப்பந்தத்தின்போது, பிரித்தானியாவின் மூன்றாம் ஜோர்ஜ் மன்னர் பௌத்த மதத்தைப் பாதுகாப்பதாக உறுதியளித்ததை நினைவு கூர்ந்த அவர் அந்நியர் ஆட்சியிலேயே அது பாதுகாக்கப்பட்டபோது, தற்போதைய ஆட்சியாளர்கள் அந்தப் பொறுப்பிலிருந்து விலக முடியாது எனச் சுட்டிக்காட்டினார். ‘விகாரைகள் மற்றும் தேவாலயங்கள் சட்டம்’ ஏற்கனவே நடைமுறையில் இருப்பதை நினைவூட்டிய அவர், விகாரைகளுக்குப் பக்தர்கள் வழங்கும் தங்க நகைகள் உள்ளிட்ட காணிக்கைகள் அந்தந்த மத நிறுவனங்களுக்கே சொந்தமானவை எனவும் குறிப்பிட்டுள்ளாா். மேலும் மத நிறுவனங்களுக்குச் சொந்தமான சொத்துக்களில் கைவைப்பது நாட்டுக்கு நற்பலனைத் தராது என மறைமுகமாக எச்சரித்துள்ள அவர் மகா சங்கத்தினருடன் இணைந்து பௌத்த மதத்தைப் பாதுகாப்பது அனைத்து அரசியல் கட்சிகளினதும் பொதுவான கடமை என வலியுறுத்தினார். 1815 கண்டி ஒப்பந்தத்தில் (Kandyan Convention) “பௌத்த மதம், அதன் வழிபாட்டு முறைகள் மற்றும் மகா சங்கத்தினர் ஆகியவற்றை மீற முடியாத வகையில் பாதுகாப்பதற்கும் பராமரிப்பதற்கும் அரசாங்கம் கடமைப்பட்டுள்ளது.” எனக் குறிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது Tag Words: #RanilWickremesinghe #BuddhismInSriLanka #KandyanConvention #GalleNews #ReligiousFreedom #SriLankaPolitics2026 #MahaSangha #CulturalHeritage
🪷 விகாரைகளின் சொத்துக்கள் – மத விவகாரங்களில் அரசின் தலையீடு ஆபத்தானது – Global Tamil News
8