கடந்த 2019-ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட வீட்டுத் திட்டங்களுக்கான நிலுவைக் கொடுப்பனவுகளை உடனடியாக வழங்கக் கோரி, யாழ் மாவட்ட பயனாளிகள் இன்று வட மாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாகக் கவனயீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்தனர். 2019-ஆம் ஆண்டு தற்போதைய ஆளுநர் நா. வேதநாயகன் யாழ் மாவட்ட செயலாளராக இருந்தபோது வழங்கப்பட்ட வீட்டுத் திட்டங்களுக்கான பணம் இன்றுவரை முழுமையாக வழங்கப்படவில்லை. இதனால் பயனாளிகள் அரைகுறை வீடுகளில், குறிப்பாக மழைக்காலங்களில் சொல்லொணாத் துயரங்களைச் சந்தித்து வருவதாக போராட்டக்காரர்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளனா். மேலும் “பாரபட்சமற்ற அரசாங்கம்” என கூறி ஆட்சிக்கு வந்த தற்போதைய அரசு, கடந்த கால நிலுவைகளை வழங்காமல், தனது புதிய திட்டங்களுக்கு மட்டும் முன்னுரிமை அளிப்பதாகப் போராட்டக்காரர்கள் அதிருப்தி வெளியிட்டனர். இந்தத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டபோது அதிகாரியாக இருந்த தற்போதைய ஆளுநர், இப்போது இக்கட்டான சூழலில் மௌனம் காப்பது தமக்கு வேதனையளிப்பதாக மக்கள் தெரிவித்தனர். அண்மையில் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, மக்களின் இயல்பு நிலையை அறிய வீதிகளில் நடந்தார். ஆனால், வீடுகள் இன்றி அவதியுறும் தங்களைச் சந்திக்க அவர் நேரம் ஒதுக்கவில்லை என அவர்கள் ஆதங்கம் தெரிவித்தனர். Tag Words: #JaffnaProtest #NorthernGovernor #HousingGrants #Vethanayahan #AnuraKumara #JaffnaNews2026 #SriLankaPolitics #HumanRights #HousingCrisis
🏛️ வீதியில் நடக்கும் ஜனாதிபதிக்கு எங்கள் வீடுகள் கண்களுக்கு தெரியவில்லையா ? – Global Tamil News
10