யாழில். 100 மில்லி மீற்றர் மழை பெய்யவே வாய்ப்பு – மக்கள் பீதியடைய தேவையில்லை

by ilankai

யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் நாட்களில் சுமார் 100 மில்லி மீட்டர் மழை பெய்யவே வாய்ப்புள்ளதாகவும் அதனால் மக்கள் தேவையற்ற விதத்தில் பீதியடைய வேண்டாம் என மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.யாழ் மாவட்ட செயலகத்தில் இன்றைய தினம் வியாழக்கிழமை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில்,வங்களா விரிகுடாவின் தென்கிழக்கு பகுதியில் ஏற்பட்ட தாழமுக்கம் காரணமாக யாழ்ப்பாண மாவட்டத்தில் சீரற்ற காலநிலை தொடர்ச்சியாக காணப்படுகிறது.அதனால் தீவக கடல் போக்குவரத்துகளும் இன்றிலிருந்து மறு அறிவித்தல் வரை நிறுத்தப்பட்டுள்ளது. மீனவர்களை கடற்றொழிலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிக்கையின் பிரகாரம் யாழ் மாவட்டத்திற்கு ஒன்பதாம் மற்றும் பத்தாம் திகதிகளில் 100 மில்லி மீற்றர் அளவில் கிடைப்பதற்கான அறிகுறி காணப்படுகிறது.யாழ்ப்பாணம் மாவட்ட செயலரின் தலைமையில் கீழ் அனைவரையும் உள்ளடக்கி அனர்த்த முகாமைத்துவம் தொடர்பான கூட்டம் நடத்தப்பட்டுள்ளது.அதில் சகல பிரதேச செயலர்களுக்கும் தேவையான அறிவுறுத்தல் வழங்கப்பட்டதுடன் குறிப்பாக சகல கிராமமட்ட அலுவலர்களுக்கும் பிரதேச செயலாளர்களுக்கும் அனர்த்த நிலைமைகள் தொடர்பான அறிவித்தல்கள் வழங்கப்பட்டது.வளிமண்டலவியல் திணைக்களத்தினால் பகிரப்படும் தகவல்கள் உடனடியாகவே எமது பங்குதாரர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது .சகல கிராமமட்ட உத்தியோகத்தர்களும் இது சம்பந்தமாக அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருப்பதால் மக்கள் தேவையற்ற விதத்தில் பீதியடைய தேவையில்லை என மேலும் தெரிவித்தார்.

Related Posts