மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஹபிப் நகரப் பிரதேசம் தற்போது கடுமையான கடல் அரிப்புக்குள்ளாகி வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக, மீனவர்கள் தமது படகுகளை பாதுகாப்பாக நிறுத்தி வைக்கும் முக்கிய இடமே இப்போது கடல் அரிப்பால் பாதிக்கப்பட்டுள்ளமை பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.இந்த கடல் அரிப்பு காரணமாக, பொதுமக்கள் அன்றாட போக்குவரத்துக்காக பயன்படுத்தி வந்த பாதை தற்போது கடலுக்குள் உள்வாங்கப்பட்டுள்ளதுடன், மக்கள் பயணிக்க முடியாத நிலை உருவாகியுள்ளது. இதனால் பாடசாலை மாணவர்கள், வயோதிபர்கள் மற்றும் வேலைக்குச் செல்வோர் பெரிதும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.மேலும், கரையோரமாக காணப்பட்டு வந்த பல மரங்கள் கடல் அரிப்பு காரணமாக வேரோடு சாய்ந்து விழும் அபாயத்தில் உள்ளன. கடல் அரிப்பு ஏற்பட்டுள்ள இந்தப் பகுதி, உள்ளூர் சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வந்து செல்லும் இடமாகவும் காணப்படுகிறது.இந்நிலையில், உரிய அதிகாரிகள் உடனடியாக இப்பிரச்சினையில் தலையிட்டு, கடலோரப் பகுதிகளில் கற்கள் நிரப்பி தடுப்புச் சுவர் அமைத்து கடல் அரிப்பை கட்டுப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.பாதுகாப்பு வேலிகள் நிறுவுவதன் மூலம் எதிர்காலத்தில் மேலும் கடல் அரிப்பு ஏற்படுவதைத் தடுக்க முடியும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.எனவே, சம்பந்தப்பட்ட அரச அதிகாரிகள் மற்றும் கடலோர பாதுகாப்புத் துறைகள் இந்த விடயத்தை தீவிரமாக கவனத்தில் கொண்டு, உடனடி மற்றும் நீண்டகால தீர்வுகளை வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என ஹபிப் நகர மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மூதூர் – ஹபிப் நகர்ப் பகுதியில் கடும் கடலரிப்பு
7