தையிட்டியில் நிறுவ கொண்டுவரப்பட்ட புத்தர் சிலை இராணுவத்தின் சிற்றுண்டி சாலையில் இருந்து மீட்பு

by ilankai

தையிட்டி விகாரையில் பிரதிஷ்டை செய்யும் நோக்குடன் கொண்டு வரப்பட்ட புத்தர் சிலை இராணுவத்தினரின் சிற்றுண்டி சாலையில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. தையிட்டி விகாரையில் இன்றைய தினம் சனிக்கிழமை பௌர்ணமி தினத்தினை முன்னிட்டு புதிதாக புத்தர் சிலை ஒன்றினை நிறுவும் நோக்குடன் சிகிரியா பகுதியில் இருந்து புத்தர் சிலை ஒன்று கொண்டு வர முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன. அதற்கு தமிழ் தரப்பினர் மத்தியில் கடும் எதிர்ப்புக்கள் கிளம்பிய நிலையில், கடந்த 30ஆம் திகதி தையிட்டி விகாராதிபதி , தமது விகாரைக்குள் எவ்வித புதிய கட்டுமானங்களையும் தான் செய்ய மாட்டேன் என்றும் , விசேட பூஜைகளுக்கோ பெரஹரா போன்ற எதற்கும் தான் அனுமதி கொடுக்க வில்லை எனவும் ஊடகங்கள் ஊடாக அறிவித்திருந்தார். இந்நிலையில் இன்றைய தினம் புத்தர் சிலையுடன் பௌத்த பிக்கு ஒருவரின் தலைமையிலான குழு ஒன்று , காங்கேசன்துறை பகுதியில் உள்ள இராணுவத்தினரின் சிற்றுண்டி சாலையில் காத்திருக்கின்றனர் என காங்கேசன்துறை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் சிற்றுண்டி சாலைக்கு விரைந்த பொலிஸார் . புத்தர் சிலையை மீட்டதுடன் , புத்தர் சிலையை எடுத்து வந்த பௌத்த பிக்கு தலைமையிலான குழுவினரையும் பொலிஸ் நிலையம் அழைத்து சென்று மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

Related Posts