யாழ்ப்பாணம் கோண்டாவில் கட்டையாலடி இந்து மயானத்திற்கு அருகில் , கழிவுகளை வீசி செல்பவர்களால் , அவ்வீதியூடாக பயணிக்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் , அது தொடர்பில் நல்லூர் பிரதேச சபை அசண்டையீனமாக உள்ளதாகவும் குற்றம் சாட்டப்படுகிறது. குறித்த இந்து மயானத்திற்கு அருகாமையில் , யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் விடுதி , யாழ்ப்பாண நகருக்கு குடிநீரை வழங்கும் கிணறுகள் காணப்படுவதுடன் , அவ்வீதியூடாக பெருமளவானோர் தமது பயணத்தினையும் மேற்கொண்டு வருகின்றனர். அத்துடன் , இந்து மயானத்திற்கு தகன கிரியைகளுக்கு வருவோரும் பல்வேறு இன்னல்களை சந்திக்கின்றனர். இந்நிலையில் அப்பகுதிகளில் உணவு கழிவுகள் , கோழி இறைச்சி கழிவுகள் உள்ளிட்ட கழிவுகளை வீசி செல்வதனால் , அப்பகுதிகளில் துர்நாற்றம் வீசுவதுடன் , அவற்றின் கழிவுகளை நாய்கள் வீதியில் இழுத்து விடுவதால் , வீதியில் பயணிப்போரும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். அத்துடன் , அவற்றை காகங்கள் உள்ளிட்டவை எடுத்து சென்று அயல்களில் போடுவதனால் ,அப்பகுதிகளிலும் சுகாதார சீர்கேடுகளும் இடம்பெறுகின்றன. எனவே குறித்த பகுதிகளில் கொட்டப்பட்டுள்ள கழிவுகளை அகற்ற நல்லூர் பிரதேச சபை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுடன் . அப்பகுதிகளில் கண்காணிப்பு கமராக்களை பொருத்தி கழிவுகளை வீசி செல்வோரை இனம் கண்டு , அவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரியுள்ளனர்.
கட்டையாலடி இந்து மயானத்திற்கு அருகில் வீசப்படும் கழிவுகள் – நல்லூர் பிரதேச சபை பாராமுகம் என குற்றச்சாட்டு
4