சட்டவிரோத மண் அகழ்வுக்கு எதிராக போராடி வந்தவர், சட்டவிரோத மண் ஏற்றி வந்த டிப்பர் வாகனத்தால் மோதப்பட்டு , மனைவியின் கண் முன்னே உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் திட்டமிட்ட கொலை என உறவினர்கள் குற்றம் சாட்டி வரும் நிலையில் , சம்பவம் தொடர்பில் போலீசார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். சம்பவத்தில் திருவையாறு பகுதியை சேர்ந்த செல்வரத்தினம் சோபனாத் (வயது 35) என்பவரே உயிரிழந்துள்ளார். குறித்த நபர் ,கிளிநொச்சி மாவட்டத்தில் இடம்பெற்று வரும் சட்டவிரோத மணல் அகழ்வுகளுக்கு எதிராக தொடர்ச்சியாக குரல் கொடுத்து வந்த நிலையில் , நேற்றைய தினம் புதன் கிழமை மனைவியுடன் , இரணைமடு பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் பயணித்த வேளை , வீதி ஓரமாக மோட்டார் சைக்கிளை நிறுத்தியவேளை பின்னால் மிக வேகமாக வந்த டிப்பர் வாகனம் , மோட்டார் சைக்கிளை மோதி தள்ளியது. அதன் போது மோட்டார் சைக்கிளில் அமர்ந்திருந்தவர் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார். மனைவி டிப்பர் வாகனத்தை கண்ணுற்று மோட்டார் சைக்கிளில் இருந்து இறங்கியதால் அவர் தப்பித்து கொண்டார். சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் டிப்பர் சாரதியை கைது செய்துள்ளனர்.
கிளிநொச்சியில் சட்டவிரோத மண் அகழ்வுக்கு எதிராக போராடியவரை மோதிய டிப்பர் – திட்டமிட்ட கொலை என உறவினர்கள் சந்தேகம்
3