அம்பாறையில வலிந்து காணாமலாக்கப்பட்டோர் உறவுகளின் போராட்டம்

by ilankai

அம்பாறை மாவட்ட வலிந்து காணமலாக்கப்பட்டோர் உறவுகள் சங்கத்தின் ஏற்பாட்டில் திருக்கோவில், தம்பிலுவில் பொதுச்சந்தை முன்பாக சர்வதேச மனித உரிமைகள் தினமான இன்று புதன்கிழமை (10)  கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டது.அம்பாறை மாவட்ட வலிந்து காணமலாக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின்  உப-தலைவி கலைவாணி, செயலாளர் ரஞ்சனா தேவி, பொருளாளர் சுனித்திரா தேவி மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளரும், அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் ஆலோசகருமான தாமோதரம் பிரதீபன் உள்ளிட்டவர்களும் பல பொதுமக்களும் கலந்துகொண்டனர்.இங்கு கருத்து வெளியிட்ட மனித உரிமை செயற்பாட்டாளர் தாமோதரம் பிரதீபன் உள்ளிட்டோர் தமது உரிமைகள் தொடர்ந்தும் மறுக்கப்படுவதாகவும், மாறி மாறி வருகின்ற ஒவ்வோர் அரசாங்கங்களும் வலிந்து காணாமலாக்கப்பட்ட தமது உறவுகளுக்கான நீதியை மறுப்பதாகவும், மனித உரிமைகளை மதிக்கவுமில்லை எனவும், தொடர்ந்தும் வீதி வீதியாகத் தாம் தமக்கான நீதிக்காகப் போராடுவதாகவும் கூறினர்.  ஊடகவியலாளர்கள், செயற்பாட்டாளர்கள் அச்சுறுத்தப்படுவதாகவும் அண்மையில் ஊடகவியலாளர்கள் குமணன் மற்றும் கஜகிரீவன் ஆகியோர் அச்சுறுத்தப்பட்டனர் எனவும் தம்மைப் போன்ற செயற்பாட்டாளர்கள் அச்சுறுத்தப்படுவதாகவும் தெரிவித்தனர்.மேலும், வடக்கு, கிழக்கின் பல இடங்களிலும் தொல்லியல் எனும் போர்வையில் காணி அபகரிப்புகள், புத்தர் சிலை நிறுவுதல் எனும் போர்வையில் அபகரிப்புகள் தொடர்ந்த வண்ணமே காணப்படுவதாகவும் கூறினர்.தமிழர்களுடைய உரிமை, இனப்படுகொலை விவகாரங்களிலும் மற்றும் விசேடமாக செம்மணி போன்ற வடக்கு, கிழக்கிலே காணப்படும் மனிதப் புதைகுழிகள் விவகாரம் போன்றவற்றிலும் சர்வதேச தலையீட்டுடனான விசாரணை பொறிமுறைகள் உருவாக்கப்படவேண்டும்  எனவும்,  காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்திலும் மனித உரிமை விடயங்களிலும் சர்வதேசத்தினுடைய மேற்பார்வையும் தலையீடும் வேண்டும் எனவும் இந்த மனித உரிமைகள் தினத்திலும் சர்வதேசத்திடம் தமது கோரிக்கைகளை முன்வைப்பதாகவும் அவர்கள் கருத்து தெரிவித்தனர்.

Related Posts