மீசாலை தட்டாங்குளம் வீதியை புனரமைக்காமல் 60 வருடங்களாக புறக்கணிப்பு செய்யப்பட்டமை தொடர்பான வழக்கில் முன்னிலையாகுமாறு சாவகச்சேரி பிரதேச சபை செயலாளர், உள்ளூராட்சி ஆணையாளர் ஆகியோருக்கு கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றம் அழைப்பாணை அனுப்பியுள்ளது. 60 வருடங்களாக புனரமைக்காமல் அரசாங்கத்தினால் புறக்கணிக்கப்பட்டுவரும் மீசாலை தட்டாங்குளம் வீதியை புனரமைக்குமாறு உத்தரவிடக்கோரி கொழும்பு மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் கடந்த ஓகஸ்ட் மாதம் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. குறித்த வீதி புனரமைக்கப்படாமல் 60 வருடங்களுக்கு மேல் தொடர்ச்சியாக புறக்கணிக்கப்பட்டு வருவதால் பாதிக்கப்படுபவர்கள் சார்பில் குறித்த வீதியில் வசித்துவரும் வி.வாகீசன் என்பவரால் தாக்கல் செய்யப்பட்ட இவ்வழக்கின் பிரதிவாதிகளான சாவகச்சேரி பிரதேச சபை செயலாளர், உள்ளுராட்சி ஆணையாளர் ஆகியோருடை பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்நிலையில் குறித்த வழக்கு நேற்றைய தினம் வியாழக்கிழமை கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவரும், சிரேஷ்ட மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஜனாதிபதி சட்டத்தரணி, நீதியரசர் நளின் ரொஹாந்த அபேசூரிய, நீதியரசர் பிரயந்த பொர்ணான்டோ ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன் போது மனுதாரர் சார்பில் மன்றில் முன்னிலையாகியிருந்த சிரேஷ்ட சட்டத்தரணிகளான பிரவின் பிரேமதிலக, தனுங்க ராகுமதத், நிசித் அபேசூரிய ஆகியோர் நீண்ட சமர்பணத்தை செய்திருந்தனர். இருப்பினும் பிரதிவாதிகள் மேலும் கால அவகாசத்தை மன்றில் கோரியிருந்தனர். நீண்ட நேர விவாதத்திற்க்கும் பின் இவ்வழக்கில் வழக்காளிக்கு நியாயமான, சட்டரீதியான எதிர்பார்ப்பு உண்டு என நீதியரசர்கள் ஏற்றுக் கொண்டனர். இதன்படி குறித்த வழக்கில் பிரதிவாதிகளாக பெயர் குறிப்பிடப்பட்ட சாவகச்சேரி பிரதேச சபை செயலாளர் மற்றும் உள்ளூராட்சி ஆணையாளர் ஆகியோரை எதிர்வரும் டிசம்பர் மாதம் 19 ஆம் திகதி மன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை அனுப்ப உத்தரவிட்டனர்
சாவகச்சேரி பிரதேச சபை செயலாளர் உள்ளிட்டோருக்கு அழைப்பாணை – Global Tamil News
5