யாழ்ப்பாணத்திலிருந்து கடல் வழியாக சட்ட விரோதமான முறையில் படகில் புறப்பட்டு வேதாரண்யம் கடற்கரையில் இறங்கி அங்கிருந்து பேருந்து மூலம் ராமேஸ்வரம் சென்ற இலங்கை சேர்ந்த நபர் ஒருவரை கியூ பிரிவு காவல்துறையினா் கைது செய்து பரமக்குடி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய நிலையில் அவா் புழல் சிறையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.சட்ட விரோதமான முறையில் தமிழகத்திற்குள் சென்ற இலங்கை நபர் ஒருவர் ராமேஸ்வரம் பகுதியில் பதுங்கி இருப்பதாக ராமநாதபுரம் கியூ பிரிவு ஆய்வாளர் ஜானகிக்கு கிடைத்த தகவல் அடிப்படையில் இன்று (8) அதிகாலை ராமேஸ்வரம் பேருந்து நிலையம் பகுதியில் கியூ பிரிவு காவல்துறையினா் திடீர் சோதனை நடத்தினா். இதன் போது அருகே இருந்த பூங்காவில் சந்தேகத்துக்கிடமாக அமர்ந்திருந்த நபர் ஒருவரை பிடித்து சோதனை செய்த போது அவரிடம் இலங்கை பணம், இலங்கை கடவுச்சீட்டு, இலங்கை தேசிய அடையாள அட்டை ஆகியவை அவரது உடமையில் இருந்து கண்டு பிடிக்கப்பட்டது. இதனையடுத்து அவரிடம் நடத்திய தீவிர விசாரணையில் இலங்கை யாழ்ப்பாணம் மாவட்டம் வல்வெட்டித்துறை நடராஜன் வீதியைச் சேர்ந்த கண்ணன் ( வயது-34) என்பது தெரிய வந்தது . கண்ணன் கடந்த 6 ந் தேதி இரவு இலங்கை யாழ்ப்பாணத்தில் இருந்து சட்ட விரோதமான முறையில் படகில் புறப்பட்டு நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் வந்து இறங்கியுள்ளார்.பின்னர் மண்டபம் இலங்கை அகதிகள் முகாமில் தங்கி உள்ள கண்ணனின் மனைவியை பார்ப்பதற்காக வேதாரணியத்தில் இருந்து பேருந்தில் புறப்பட்டு ராமேஸ்வரம் பேருந்து நிலையம் வந்து இறங்கி மண்டபம் அகதிகள் முகாமிற்கு செல்வதற்காக பூங்காவில் அமர்ந்திருந்த போதே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளாா். இதையடுத்து கைது செய்யப்பட்ட கண்ணனை காவல்துறையினா் ராமேஸ்வரம் நகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். கண்ணன் மீது கடவுச்சீட்டு இன்றி சட்ட விரோதமான முறையில் தமிழகத்திற்குள் ஊடுருவியதாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினா் அவரை பரமக்குடி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய நிலையில், அவரை எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
சட்ட விரோதமாக தமிழகத்திற்கு சென்ற நபர் கைது – Global Tamil News
5