வடக்கு முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றத்தில் தமிழ் சமூகம் ஆதரவளிக்க வேண்டும்

by ilankai

வடக்கில் இருந்து முஸ்லீம் மக்கள் வெளியேற்றப்பட்ட 35ஆவது வருட நினைவுகூறல் யாழ்ப்பாணம் முஸ்லிம் சமூகத்தின் ஏற்பாட்டில் “எங்கள் நிலம், எங்கள் வாழ்வாதாரம் – எங்கள் அடிப்படை உரிமைகள்”எனும் தொனிப்பொருளில் நேற்றைய தினம் வியாழக்கிழமை யாழ்ப்பாணம் ஒஸ்மானியாக் கல்லூரி கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. அதனை தொடர்ந்து நடைபெற்ற ஊடக சந்திப்பில், கடந்த 35 வருடங்களாக வடக்கு முஸ்லிம் மக்களின் விவகாரங்கள் போதுமான அளவிற்கு கருத்தில் எடுத்துக் கொள்ளப்படவோ அல்லது அவர்களுக்கான போதுமான தீர்வுகள் கிடைத்து விட்டதாகவோ வடக்கு முஸ்லிம்கள் இன்று வரை கருதவில்லை. தமக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு இதுவரை நீதி வழங்கப்படவில்லை என்றே வடக்கு முஸ்லிம் மக்கள் உறுதியாகத் தெரிவிக்கின்றார்கள். இவ் விடயத்தில் உரிய முன்னேற்றங்கள் ஏற்படுவதற்கு இலங்கை முஸ்லிம் மக்கள் சார்பிலும், தமிழ் மக்கள் சார்பிலும் உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட வேண்டியது அவசியமாகும். வடக்கிலே ஒரு பலமான சமூகமாக “தமிழ் முஸ்லிம்” மக்கள் “வடக்கு மக்கள்” என்ற அடையாளத்தோடு ஐக்கியமாக ஒன்றினைவதற்கான முன்னெடுப்புக்களை இரு தரப்பினரும் ஆரம்பிக்க வேண்டும் என்பது எமது எதிர்பார்ப்பாக இருக்கின்றது. வடக்கு கிழக்கு வாழ் தமிழ் மக்களும், தமிழ் அரசியல் பிரதிநிதிகளும் வடக்கு முஸ்லிம் மக்களை அரவணைத்து ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதுடன், எமது மீள்குடியேற்ற நடவடிக்கைகளில் அரச அதிகாரிகளும், அரச நிறுவனங்களும் மென்போக்கை கடைபிடிக்க வேண்டும் என்பதும் எமது உள்ளார்ந்த எதிர்பார்ப்பாக காணப்படுகின்றது. வடக்கு முஸ்லிம் மக்கள் 1990 ஆம் ஆண்டு வெளியேற்றப்பட்டமையானது “இனச்சுத்திரிப்பு நடவடிக்கை என்பதுடன் முஸ்லிம் சமூகத்தின் மீது நிகழ்த்தப்பட்ட மனித உரிமை மீறல் நடவடிக்கை” என்பதை ஏற்று இதுவரை முழுமைப்படுத்தப்படாமல் இருக்கின்ற எமது மீள்குடியேற்ற நடவடிக்கைகளை மீள ஒழுங்கமைத்துத்தரும் வகையில் 1990ஆம் ஆண்டு வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்களின் எதிர்பார்ப்புக்களை ஈடுசெய்யும் வகையிலும், எமது மீள்குடியேற்றத்தில் உள்ள தடைகளை கண்டறிந்து அவற்றுக்கான தீர்வுகளைப் பெற்றுக் கொடுக்கும் வகையிலும் அமையக் கூடிய “ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்றை நிறுவ வேண்டும்” என்றும் வடக்கு முஸ்லிம் மக்கள் நீண்டகாலமா எதிர்பார்த்திருக்கும் விடயமாகும். வடக்குமாகாண முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றத்தில் தமிழ் மக்களினதும், தமிழ் அரசியல் தலைவர்களினதும் ஈடுபாடும், பங்களிப்பும் எதிர்காலத்தில் முழுமையாகக் கிடைக்கப்பெற வேண்டும் என்றும், அதனை பெரிதும் எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தனர். 

Related Posts