படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிமலராஜன் உள்ளிட்ட 39 தமிழ் ஊடகவியலாளர்களிற்கும் நீதி கோரி நிமலராஜனின் மகள்மார் மற்றும் மாமனிதர் தராகி சிவராமின் மகள்மார் இணைந்து விசாரணை அறிக்கைகளை கனடாவில் வெளியிட்டுள்ளனர்.படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் 25ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை கனடாவிலும் யாழ்.ஊடக அமையத்திலும் முன்னெடுக்கப்பட்டிருந்தது. யாழ்ப்பாணத்தில் நிமலராஜனின் திருவுரு படத்திற்கு குரல் அற்றவர்களின் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முருகையா கோமகன் மற்றும் செயற்பாட்டாளரும் ஊடகவியலாளருமான பெடி கமகே மலர் மாலை அணிவித்தனர். தென்னிலங்கை ஊடகவியலாளர் அஜித் பொது சுடரேற்றியதை தொடர்ந்து, ஊடகவியலாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் மலரஞ்சலி செலுத்தினர்.கனடாவில் நடைபெற்ற நினைவேந்தலில் நிமலரா ஜனை ஊடகத்துறை க்கு அறிமுகம் செய்த மூத்த ஊடக ஆசிரியர் திருச்செல்வம்,நிமலராஜனோடு நெருங்கிப்பழகிய மூத்த ஊடகவியலாளர், எழுத்தாளர் வாசகன் இரட்ணதுரை ,சமகாலத்தில் பணியாற்றிய முன்னாள் வீரகேசரி மூத்த ஆசிரியர் வீ.தேவராஜ் மற்றும் சுயாதீன ஊடகவியலாளர் உதயன் எஸ்.பிள்ளை,நிமலராஜனின் சகோதரி செல்வராணி நிரஞ்சன் ஆகியோர் நேரடி உரைகளை ஆற்றியிருந்தனர்.அதேவேளை நிமலராஜனது நண்பரும் ஊடகவியலாளரும், யாழ்.ஊடக அமைய நிறுவகருமான இரத்தினம் தயாபரன் ,நிமலராஜனுடன் நெருங்கிப் பணியாற்றிய முன்னாள் பிபிசி சந்தேசிய மூத்த தயாரிப்பாளர் சந்தன கீர்த்தி பண்டார மற்றும் முன்னாள் பிபிசி சர்வதேச நிருபரும் தற்போது மனித உரிமைச்செயற்பாட்டாளருமான பிரான்சிஸ் ஹரிசன் உள்ளிட்டோர் காணொளி வழியேயும் உரைகளை ஆற்றியிருந்தனர்.நிகழ்வில், இலங்கைத்தீவில் மறுக்கப்பட்ட உள்ளக நீதி பற்றியும், கொலையா ளிகளைப்பாதுகாத்த அரசு தொடர்பாகவும், சர்வதேச நீதியின் முக்கியத்துவம் குறித்தும், நிமலராஜனின் கொலையைத் தொடர்ந்து கொல்லப்பட்ட ஊடகவியலாளர்கள் பற்றிய விபரங்களை உள்ளடக்கியதுமாக, சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான செயற்திட்டம் – இலங்கை என்ற அமைப்பு வெளியிட்டுள்ள நூல் வடிவிலான அறிக்கையும் வெளியிடப்பட்டிருந்தது.கனடா நிகழ்வில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிமலராஜன் உள்ளிட்ட 39தமிழ் ஊடகவியலாளர்களிற்கும் நீதி கோரி நிமலராஜனின் மகள்மார் மற்றும் மாமனிதர் தராகி சிவராமின் மகள்மார் இணைந்து விசாரணை அறிக்கைகளை வெளியிட்டிருந்தனர்.போர் சூழலில் யாழில் இருந்து ஊடகப்பணியாற்றிய மயில்வாகனம் நிமலராஜன். பி.பி.சி.யின் தமிழ் மற்றும் சிங்கள சேவை , வீரகேசரி , ராவய , ஜபிசி வானொலி சூரியன் உள்ளிட்ட பல ஊடகங்களில்; பணியாற்றி இருந்தார்.அந்நிலையில் 2000ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 19ம் திகதி யாழ்.மாவட்டத்தில் ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்த வேளை இவரது வீட்டு வளவினுள் புகுந்த ஆயுததாரிகள், அவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டனர். அதன் போது அவர் எழுதிக்கொண்டு இருந்த கட்டுரை மீது வீழ்ந்தே உயிர் துறந்தார்.கொலையாளிகள் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு நிமலராஜனை படுகொலை செய்த பின்னர் , வீட்டின் மீது கைக்குண்டு தாக்குதலையும் மேற்கொண்டனர். அதன் போது வீட்டில் இருந்த நிலமராஜனின் தந்தை சங்கரப்பிள்ளை மயில்வாகனம் , தாய் லில்லி மயில்வாகனம் மற்றும் மருமகன் ஜெகதாஸ் பிரசன்னா ஆகியோர் படுகாயமடைந்து இருந்தனர். இந்த படுகொலை சம்பவம் நடைபெற்று 25ஆண்டுகள் கடந்துள்ள போதிலும் , இதுவரையில் குற்றவாளிகள் கண்டறியப்படவில்லை. நிமலராஜன் படுகொலைக்கு நீதி கோரி யாழ் . ஊடக அமையம் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் தொடர்ச்சியாக குரல் கொடுத்தே வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நினைவழியா நிமல் 25 கனடாவிலும்!
2
previous post