வெளியேற்றப்பட்ட காவல்துறையினா் – Global Tamil News

by ilankai

கோப்பாய்  காவல்துறையினா்  நீதிமன்ற உத்தரவில் வெளியேற்றப்பட்டமையால் கோப்பாய் காவல்   நிலையம் தற்காலிகமாக யாழ்ப்பாண காவல்  நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. கோப்பாய் காவல் நிலையம் , இராச பாதை வீதியில் தனியாருக்கு சொந்தமான காணிகள் மற்றும் வீடுகளை அடாத்தாக கைப்பற்றி அமைக்கப்பட்டருந்தது. தமது காணிகள் , வீடுகளை விட்டு காவல்துறையினா் வெளியேற்றப்பட்டு, தமது காணிகள் மற்றும் வீடுகளை தம்மிடம் ஒப்படைக்குமாறு, யாழ் மாவட்ட நீதிமன்றில் கடந்த 2019ஆம் ஆண்டு கால பகுதியில் 07 உரிமையாளர் வழக்கு தொடர்ந்தனர். வழக்கு விசாரணைகள் கடந்த 06 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் 27ஆம் திகதி காவல்துறையினா் தனியார் காணிகள் வீடுகளை உரிமையாளர்களிடம் மீள ஒப்படைத்து விட்டு, வெளியேற வேண்டும் என தீர்ப்பளிக்கப்பட்டது. நீதிமன்றம் தீர்ப்பளித்து 2 மாதங்களுக்கு மேலாகியும், காவல்துறையினா் காணிகள், வீடுகளை ஒப்படைக்காத நிலையில், இன்றைய தினம் புதன்கிழமை நீதிமன்ற பதிவாளரின் முன்னிலையில் காவல்துறையினா் அவ்விடத்தில் இருந்து வெளியேற்றப்பட்டு, உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டன. கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக தமது காணிகள் , வீடுகளை இழந்து வாடகை வீடுகளில் தங்கியிருந்தவர்களுக்கு தற்போது சொந்த காணிகள் , வீடுகள் கிடைத்தமை பெரும் மகிழ்ச்சி அடைந்திருந்தனர். கோப்பாய் பொலிஸ் நிலையம் தற்காலிகமாக யாழ்ப்பாண காவல்  நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

Related Posts