மாநகர சபையினால் சீல் வைத்த கடையை திறந்து வியாபாரம் செய்த வியாபாரி – Global Tamil News

by ilankai

யாழ்ப்பாண மாநகர சபையினால் சீல் வைத்து பூட்டப்பட்ட  கடையில் வியாபார நடவடிக்கையில் ஈடுபட்ட நபர் அத்துமீறி கடையினை திறந்து வியாபார நடவடிக்கை மேற்கொண்டமையினால்   குறித்த கடையினை மாநகர சபை முழுமையாக பொறுப்பேற்றுள்ளது. யாழ் . மாநகர் பகுதியில் உள்ள மாநகர சபைக்கு சொந்தமான சிற்றாங்காடி கடைத்தொகுதியில் , கடை ஒன்றில் வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த நபர் ஒருவர் , மாநகர சபையின் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் மாநகர சபையினால் , அக்கடை சீல் வைத்து மூடப்பட்டது. அந்நிலையில் , குறித்த கடையில் வியாபார நடவடிக்கையில் ஈடுபட்ட நபர் , சீல் வைத்த கடையினை அத்துமீறி திறந்து , வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். இது தொடர்பில் மாநகர சபை முதல்வருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து, மாநகர சபை வருமான வரி பரிசோதகர்கள் உள்ளிட்ட குழுவினரை கடைக்கு அனுப்பி , கடைக்கு மறுபடியும் சீல் வைக்குமாறு முதல்வர் பணித்துள்ளார். அவர்கள் அங்கு சென்ற வேளை கடையில் வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த நபர் , உத்தியோகஸ்தர்களுக்கு ஒத்துழைக்காது முரண்பட்டமையால் , அது தொடர்பில் அறிந்து முதல்வர் , யாழ்ப்பாணம் காவல்துறையினருக்கு அறிவித்து ,  காவல்துறையினருடன் சம்பவ இடத்திற்கு சென்று , வியாபார நடவடிக்கைகளை உடன் நிறுத்தி கடைக்கு சீல் வைத்ததுடன் , கடையினை மாநகர சபையினர் மீள பாரமெடுப்பதாக அறிவித்தலையும் ஒட்டி சென்றுள்ளனர்.

Related Posts