நினைவேந்தல்களை வைத்து தேர்தல் அரசியல் செய்யும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயற்பாடு நிறுத்தப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் கருணைநாதன் இளங்குமரன் தெரிவித்துள்ளார். தியாக தீபத்தின் நினைவிடத்திற்கு நேற்றைய தினம் புதன்கிழமை அஞ்சலி செலுத்த சென்ற கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தலைமையிலான குழுவினரை , நினைவிடத்தில் நின்ற தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள் அஞ்சலி செலுத்த விடாது தடுத்து நிறுத்தி அனுப்பியிருந்தனர்.குறித்த சம்பவம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் தனது கண்டனத்தை தெரிவித்து, ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள செய்தி குறிப்பில்லையே அவ்வாறு தெரிவித்தார். குறித்த செய்தி குறிப்பில், தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வில் பங்கேற்க வந்த அமைச்சர் சந்திரசேகருக்கு அஞ்சலி செலுத்தும் உரிமையைத் தடுப்பது, அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயல் எனில், அது அயோக்கியத்தனத்தின் உச்சமே ஆகும்.யாரும் யாரையும் அஞ்சலிக்கலாம்; அதுதான் மனித மாண்பு. திலீபன் அண்ணன் போராடிய காலத்தில் அவருக்கு எதிராக நின்ற பலர் இன்று நினைவேந்தல்களில் பங்கேற்கின்றனர். அவர்களை முன்னணியே தேர்தல் அரசியலுக்காக அருகில் நிறுத்திக் கொள்கிறது. ஆனால், மற்றவர்களை அனுமதிக்க மறுப்பது எத்தகைய முரண்பாடு?ஒரு மாவீரனின் – தியாகியின் நினைவேந்தலை வாக்குக் கணக்குப் பொருட்டு அரசியல் ஆக்கிரமிப்பு செய்வது ஒருபோதும் மன்னிக்க முடியாத குற்றமாகும். இது மனித மாண்புகளை மீறிய காட்டுமிராண்டித்தனமே தவிர வேறில்லை என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தியாக தீபத்திற்கு அஞ்சலி செலுத்த விடாது தடுத்தது , முன்னணியின் உச்சக்கட்ட அயோக்கியத்தனம்
1