சுதந்திரத்துக்கு பின்னரான இலங்கை அரசியல் வரலாற்றில் ஆளும், எதிர்க்கட்சி தலைவர்கள் அகால மரணமடைந்தவர்களாக அல்லது கொலை முயற்சியிலிருந்து தப்பியவர்களாகவே உள்ளனர் என ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.காலியில் நேற்று ஐக்கிய தேசிய கட்சியின் தொகுதி அமைப்பாளர்களை சந்தித்த பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.மேலும் தெரிவிக்கையில், எமது நாட்டின் அரசியலமைப்பிற்கமைய ஜனாதிபதியின் பதவிக் காலத்திற்குப் பிறகு அவர்களின் வாழ்வு பாதுகாக்கப்பட வேண்டும், ஏனெனில் அவர்கள் நாட்டுக்காக முக்கியமான முடிவுகளை எடுத்துள்ளனர். உதாரணமாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ யுத்தத்தை நிறைவு செய்வதற்கு இறுதியாக தலைமை வகித்த அரச தலைவர் என்ற ரீதியில் உலகின் சில நாடுகளுக்குச் சென்று அவரால் தனித்து நாடு திரும்ப முடியாது. ஒரு சில குழுக்களால் கைகளிலுள்ள ஆயுதங்களைக் கொண்டு கொல்லப்படக் கூடிய அச்சுறுத்தலுடைய தலைவர் ஆவார். சுதந்திரத்தின் பின்னர் இலங்கையின் அரசியல் வரலாற்றில் ஆளும், எதிர்க்கட்சி தலைவர்கள் அனைவருமே அகால மரணமடைந்தவர்களாவர். அவ்வாறில்லை எனில் அவர் தம்மீதான கொலை முயற்சியிலிருந்து தப்பியவர்களாகவுள்ளனர்.எனவே இந்தச் செயல்கள் மூலம் சமூகத்தில் வெறுப்பையும் விரோதத்தையும் உருவாக்குவது இலங்கைக்கு நன்மை அளிக்காது. ஜனநாயக நாடுகள் என்றும் முன்னோக்கியே பயணித்திருக்கின்றன. நேபாளம் போன்ற நாடுகள் இந்த வரலாறுகளை கற்றால் தற்போதைய நிலைமைக்கு உகந்ததாக இருக்கும். இலங்கையில் அரசியல் கலவரம் வெடித்த போது முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரதமராக பதவி வகித்தார்.அவரது வீட்டுக்கு தீ வைக்கப்பட்ட போதிலும், அவர் பயந்து ஓடவில்லை. மாறாக ஏனையோரது வீடுகள் எரிக்கப்படுவதை தடுப்பதற்கு நடவடிக்கை எடுத்தார். ஆனால் நேபாள பிரதமர் அந்த சந்தர்ப்பத்தில் தப்பிச் சென்றதாலேயே ஏனையோர் பாதிக்கப்பட்டனர் என்பதே எனது நிலைப்பாடாகும். எனவே தேசிய தலைவர் என்ற ரீதியில் முன்னாள் ஜனாதிபதி ரணிலுக்கு அந்த கௌரவம் வழங்கப்பட வேண்டும் என்றார்.
இலங்கையில் அரசியல் தலைவர்களும் உயிர் அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ளனர்
8