வடக்கு கிழக்கில் உள்ள தேவையற்ற இராணுவ முகாம்கள் அகற்றப்பட்டு , மக்களின் காணிகளை மக்களுக்கே வழங்க வேண்டும் என்ற நிலைப்பாட்டிலையே ஜனாதிபதி இருக்கின்றார். அத்துடன் தையிட்டி விகாரைப் பிரச்சினைக்கும் சுமூகமான தீர்வு காணப்படும் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்
தேசிய மக்கள் சக்தியின் யாழ்.மாவட்ட அலுவலகத்தில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விசேட ஊடக சந்திப்பின் போதே, இவ்வாறு கூறினார்.
மேலும் தெரிவிக்கையில்,
“ ரணில் விக்கிரமசிங்கவை நெருங்க முடியாது, அவர்மீது கை வைக்க முடியாது, அவர் சர்வதேச இராஜந்திரம் தெரிந்தவர், நரித்தனமானவர், அவரோடு விளையாட முற்பட வேண்டாம் என எதிரணியினர் கூறி வந்தனர்.
இந்நிலையில் அவர்மீது சட்டம் பாய்ந்துள்ளதால் ராஜபக்சக்கள் ஆட்டம் கண்டுள்ளனர்.
நாட்டுக்கு தீங்கு, இழப்பு ஏற்படுத்தியது ரணிலா, ராஜபக்சவா என்பது எமக்கு முக்கியம் அல்ல. எவராக இருந்தாலும் ஊழல், மோசடிகளில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக சட்டம் தனக்குரிய கடமையை செய்யும்.
ஒரு சில வாரங்களில் வடக்கில் உள்ள அரசியல்வாதிகள் வாழ்விலும் வசந்தம் பிறக்கும் என நினைக்கின்றோம்.
மக்களுக்கு சொந்தமான அனைத்து காணிகளும் விடுவிக்கப்படும். இந்த நிலைப்பாட்டில் ஜனாதிபதி உறுதியாக இருக்கின்றார்.
தையிட்டி விகாரைப் பிரச்சினையும் தீர்க்கப்படும். வடக்குக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் முதலீடுகள் தொடர்பில் சில அதிகாரிகள் இழுத்தடிப்பு செய்து வருகின்றனர்.
அவர்கள் பற்றியும் எமக்கு தெரியும். அவர்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.