வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் ஆலய வருடாந்திர மகோற்சவ  விசேட திருவிழாக்கள் நடைபெறவுள்ள நிலையில் ஆலய சூழலில் , கொழும்பில் இருந்து அழைக்கப்பட்டுள்ள காவல்துறை விசேட அணி உள்ளிட்ட 60 காவல்துறையினர்  பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட சிரேஸ்ட காவல்துறை  அத்தியட்சகர் ஏ.பி.எஸ். ஜெயமகா தெரிவித்துள்ளார்.   மேலும் தெரிவிக்கையில்.

நல்லூர் ஆலய மகோற்சவம் தற்போது இடம்பெற்று வருகிறது. ஆலயத்திற்கு , வெளிநாடுகளில் இருந்தும் , வடமாகாணத்திற்கு வெளியில் இருந்தும் கூட ஏராளமானவர்கள் வருகை தந்துள்ளனர்.

எதிர்வரும் வாரம் ஆலயத்தில் விசேட திருவிழாக்கள் நடைபெறவுள்ளதால் , ஆலயத்திற்கு வருவோரின் எண்னிக்கை மேலும் அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அந்நிலையில் ஆலய சூழலில் திருடர்களின் நடமாட்டங்களும் அதிகரித்து காணப்படுகிறது. திருட்டுக்கள் ,மற்றும் குற்றச்செயல்கள் ஆலய சூழலில் நடைபெறாது தடுப்பதற்காக ஆலய சூழலில் சிவில் மற்றும் சீருடையுடன் 600க்கும் மேற்பட்ட காவல்துறையினர்    கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

நாட்டின் பிற பகுதிகளில் இருந்தும் திருட்டு கும்பல்கள் நல்லூர் திருவிழாவிற்கு வருகை தந்துள்ளதாக கிடைக்கப்பெற்றுள்ள புலனாய்வு தகவல்களின் அடிப்படையில் , திருட்டு சந்தேக நபர்களை அடையாளம் காண கூடிய விசேட காவல்துறை  அணியினரை வர வழைத்து கடமையில் ஈடுபடுத்தியுள்ளோம்.

எனவே ஆலய சூழலில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடுபவர்கள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறும் , அவர்கள் தொடர்பில் சீருடையில் கடமையில் இருக்கும் காவல்துறையினருக்கு உடனடியாக தெரியப்படுத்துமாறும் மேலும் கேட்டுக்கொண்டார்.

அதேவேளை எதிர்வரும் வியாழக்கிழமை தேர் திருவிழாவும் , மறுநாள் வெள்ளிக்கிழமை தீர்த்த திருவிழாவும் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.