இலங்கை தமிழரசுக் கட்சியால் எதிர்வரும் திங்கள் கிழமை (17) அழைப்பு விடுக்கப்பட்டுள்ள ஹர்த்தாலுக்கு ஆதரவு வழங்க முடியாதென பலதரப்புக்களும் அறிவித்துவருகின்றன.

இதனிடையே நல்லூர் ஆலய சூழலில் உற்சவங்கள் நடந்துவருகின்ற நிலையில் கடையடைப்பு போராட்டம் தேவையற்றதென ஈழம் சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்புலோ சச்சிதானந்தன் தெரிவித்துள்ளார்.யாழ்.ஊடக அமையத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே கடையடைப்பினை புறக்கணிக்க அவர் அழைப்புவிடுத்துள்ளார்.

இந்நிலையில் வவுனியா வர்த்தகர் சங்கமும் கடையடைப்பினை புறக்கணிக்க தீர்மானித்துள்ளதாக அதன் தலைவர் கே.கிருஸ்ணமூர்த்தி  தெரிவித்துள்ளார்.

வடக்கு, கிழக்கில் அதிகரித்துள்ள இராணுவ பிரசன்னம் மற்றும் முல்லைத்தீவு முத்தையன் கட்டில் இடம்பெற்ற சம்பவங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வடக்கு, கிழக்கு தழுவிய ரீதியில் எதிர்வரும் திங்கட்கிழமை (17) ஹர்த்தால்   மேற்கொள்வதற்கு இலங்கை தமிழரசு கட்சியின் செயலாளர் எம்.எ.சுமந்திரன் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஹர்த்தாலுக்கு வவுனியா மாவட்ட வர்த்தகர் சங்கம் தமது ஆதரவினை வழங்க வேண்டும் என வர்த்தகர் சங்கத்தின் பிரதிநிதிகளுடன் தமிழரசுக் கட்சியின் செயலாளர் எம்.எ.சுமந்திரன் இரு தினங்களுக்கு முன்பு நேரடியாக சந்தித்து ஆதரவு கோரியிருந்தார்.

இந்நிலையில் எதிர்வரும் திங்கட்கிழமை (17) வியாபார செயற்பாடுகள் வழமை போன்று நடைபெறும் என்றும் வவுனியா வர்த்தகர் சங்கம் கடையடைப்பிற்கு ஆதரவு வழங்குவதில்லை என்ற தீர்மானத்தை எடுத்துள்ளது .

ஏற்கனவே கிளிநொச்சி மற்றும் யாழ்.மாவட்ட வர்த்தக சங்கங்களும் கடையடைப்பிற்கு ஆதரவளிக்க போவதில்லையென அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.