பட மூலாதாரம், Prabhat Kumar/BBC

படக்குறிப்பு, உலகிலேயே மிகவும் அரிதான கர்ப்பம் இன்ட்ராஹெபடிக் எக்டோபிக் கர்ப்பம். எழுதியவர், பிரேர்னா பதவி, பிபிசி செய்தியாளர் 12 ஆகஸ்ட் 2025, 09:30 GMT

புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர்

மேற்கு உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சியூட்டும் வகையில் ஒரு பெண்ணின் கர்ப்பம் குறித்த செய்தி சமீபத்தில் வெளிச்சத்திற்கு வந்தது.

இந்தத் தகவல் மிகவும் வித்தியாசமானது, ஏனென்றால் அந்தப் பெண்ணின் கருப்பையில் இல்லாமல், கல்லீரலில் கரு வளர்ச்சியடைந்தது.

புலந்த்சாஹர் மாவட்டத்திலுள்ள தஸ்துரா கிராமத்தைச் சேர்ந்த 35 வயதான சர்வேஷ், தற்போது பல முக்கிய மருத்துவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

இது எப்படி நடந்தது? சர்வேஷ் இப்போது எப்படி இருக்கிறார்? சாதாரண மக்கள் மட்டுமல்ல, நிபுணர்களும் இந்தக் கேள்விக்கான பதிலைத் தெரிந்து கொள்ள விரும்புகிறார்கள்.

இந்த கேள்விகளுக்குப் பதில் தேடி, நானும் தஸ்துரா கிராமத்துக்குச் சென்றேன்.

Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

End of அதிகம் படிக்கப்பட்டது

நாங்கள் சர்வேஷின் வீட்டை அடைந்தபோது, அவர் ஒரு கட்டிலில் படுத்திருந்தார். அவரது வயிற்றில் அகலமான பெல்ட் ஒன்று கட்டப்பட்டிருந்தது, அதனால் அவர் திரும்புவதற்கு கூட சிரமப்பட்டார் .

வயிற்றின் மேல் வலது பக்கத்தில் இருபத்தி ஒரு தையல்கள் இருப்பதாக கூறிய அவர், கனமான எதையும் தூக்குவதைத் தவிர்க்கவும், மிகவும் லேசான உணவை உண்ணவும், நன்றாக ஓய்வு எடுக்கவும் மருத்துவர் அறிவுறுத்தியுள்ளதாக என்னிடம் தெரிவித்தார்.

கட்டிலில் அமர்வதில் இருந்து குளியலறைக்குச் சென்று திரும்ப, உடை மாற்றுவது வரை சர்வேஷ் தனது கணவர் பரம்வீரின் உதவியை நாட வேண்டியுள்ளது.

மூன்று மாதங்கள் எங்கள் குடும்பத்திற்கு ஒரு புதிராகவே இருந்தன என்று கூறுகிறார்கள் சர்வேஷும் அவரது கணவர் பரம்வீரும்.

பட மூலாதாரம், Prabhat Kumar/BBC

படக்குறிப்பு, விரைவில் அறுவை சிகிச்சை செய்யுமாறு மருத்துவர் அறிவுறுத்தினார் என்று கூறுகிறார் சர்வேஷின் கணவர் பர்வமீர்.”எனக்கு நிறைய வாந்தி வந்தது. நான் எப்போதும் சோர்வாகவும் வலியுடனும் இருந்தேன். எனக்கு என்ன நடக்கிறது என்பதைப் புரிந்துகொள்வது கடினமாக இருந்தது” என்று சர்வேஷ் பிபிசியிடம் கூறினார்.

அவரது உடல்நிலை மோசமடையத் தொடங்கிய போது, மருத்துவர் அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் செய்யச் சொன்னதாக அவர் கூறுகிறார். ஆனால் அல்ட்ராசவுண்ட் ரிப்போர்ட்டிலும் எதுவும் தெரியவில்லை, வயிற்று தொற்றுக்கு மருந்துகளை தொடர்ந்து எடுத்துக்கொண்டார் சர்வேஷ்.

ஆனால் ஒரு மாதம் மருந்துகள் எடுத்துக்கொண்ட பிறகும் அவரது உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படாததால், அவர் மீண்டும் அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் எடுக்கச் சென்றுள்ளார்.

அப்போது, மிகவும் அரிதான தகவல் ஒன்று வெளிவந்துள்ளது. மருத்துவர்களுக்குக் கூட, நம்புவதற்கு கடினமான செய்தியாக அது இருந்தது.

“உங்கள் கல்லீரலில் ஒரு குழந்தை இருக்கிறது”

பட மூலாதாரம், Prabhat Kumar/BBC

படக்குறிப்பு, கதிரியக்க நிபுணர் மருத்துவர் கே.கே. குப்தா, தனது இருபது வருட வாழ்க்கையில் இப்படி ஒன்றை பார்த்ததில்லை என்று கூறுகிறார்.அல்ட்ராசவுண்ட் செய்த மருத்துவர் சானியா ஜெஹ்ரா, சர்வேஷின் கல்லீரலில் ஒரு குழந்தை இருப்பதாகக் கூறினார். இது சர்வேஷுக்கும் அவரது கணவர் பரம்வீருக்கும் மிகுந்த குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தத் தகவலை உறுதிப்படுத்த, புலந்த்சாஹரிலிருந்து மீரட்டுக்குச் சென்று மீண்டும் அல்ட்ராசவுண்ட் மற்றும் எம்ஆர்ஐ ஸ்கேன் செய்து கொண்டார் சர்வேஷ்.

அங்கு கிடைத்த அறிக்கையும் அதை உறுதிப்படுத்தியுள்ளது.

சர்வேஷின் மாதவிடாய் சுழற்சி, எப்போதும் போல சாதாரணமாக இருந்ததால், இந்தத் தகவலை நம்புவது அவருக்கு கடினமாக இருந்தது.

எம்ஆர்ஐ ஸ்கேன் செய்த கதிரியக்க நிபுணர் மருத்துவர் கே.கே. குப்தா, தனது 20 ஆண்டுகால வாழ்க்கையில் இதுபோன்ற ஒரு சம்பவத்தைப் பார்த்ததில்லை என்று பிபிசியிடம் தெரிவித்தார்.

ஒரு முடிவுக்கு வருவதற்கு முன்பு, அவர் அந்த மருத்துவ அறிக்கையை பலமுறை படித்து, மாதவிடாய் சாதாரணமாக இருக்கிறதா இல்லையா என்பதை சர்வேஷிடம் அவர் திரும்பத் திரும்பக் கேட்டுள்ளார்.

“அந்தப் பெண்ணுக்கு கல்லீரலின் வலது புறம் 12 வார கரு இருந்தது, அதில் இதயத் துடிப்பும் தெளிவாகத் தெரிந்தது. இந்த நிலை ‘இன்ட்ராஹெபடிக் எக்டோபிக் கர்ப்பம்’ என்று அழைக்கப்படுகிறது.

இது மிகவும் அரிதானது.

இதுபோன்ற சூழ்நிலையில், பெண்களுக்கு அதிக இரத்தப்போக்கு ஏற்படுகிறது, இதனை அவர்கள் சாதாரண மாதவிடாய் என்று கருதுகிறார்கள். இவ்வகையான கர்ப்பத்தைக் கண்டறிய நேரம் எடுக்கும்” என்று அவர் கூறுகிறார்.

“அறுவை சிகிச்சை தவிர வேறு வழியில்லை”

பட மூலாதாரம், Prabhat Kumar/BBC

படக்குறிப்பு, சர்வேஷின் அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள் குழுவில் மருத்துவர் பருல் தஹியாவும் இருந்தார்.கரு பெரிதாக இருந்தால், கல்லீரல் வெடிக்கும் அபாயம் இருப்பதாக அந்த தம்பதியரிடம் மருத்துவர் கூறியுள்ளார். இந்த சூழ்நிலையில், குழந்தையோ அல்லது தாயோ உயிர் பிழைக்க மாட்டார்கள். எனவே, அறுவை சிகிச்சையைத் தவிர வேறு வழியில்லை.

புலந்த்ஷாஹரில் உள்ள எந்த மருத்துவரும் சர்வேஷுக்கு மருத்துவம் அளிக்க தயாராக இல்லை என்று பரம்வீர் கூறுகிறார். அதன் பிறகு அவர் மீரட்டுக்குச் சென்றுள்ளார், ஆனால் அங்கும் ஏமாற்றமே மிஞ்சியது.

இது ஒரு கடினமான நிகழ்வு என்றும், தாய் மற்றும் குழந்தையின் உயிருக்கும் ஆபத்து இருப்பதாகவும் மருத்துவர்கள் கூறினர். அதேபோல் அனைவரும் அவரை டெல்லிக்குச் செல்லும்படி அறிவுறுத்தியுள்ளனர்.

“நாங்கள் ஏழைகள், டெல்லிக்குச் சென்று அங்குள்ள செலவுகளைச் சமாளிக்க எங்களுக்கு வசதி இல்லை. பல முறை யோசித்த பிறகு, இங்கேயே சிகிச்சை பெறுவது என்று முடிவு செய்தோம்” என்று சர்வேஷ் கூறினார்.

இறுதியாக, மீரட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையின் மருத்துவர்கள் குழு சர்வேஷுக்கு அறுவை சிகிச்சை செய்ய ஒப்புக்கொண்டது.

பட மூலாதாரம், Prabhat Kumar/BBC

படக்குறிப்பு, சர்வேஷின் கணவர் பரம்வீர் பிபிசி குழுவிடம் மருத்துவ அறிக்கைகளைக் காட்டுகிறார்.”நோயாளி என்னிடம் வந்தபோது, மூன்று மாதங்களாக அவதிப்பட்டு வந்தார். அவர் அல்ட்ராசோனோ மற்றும் எம்ஆர்ஐ பரிசோதனை முடிவுகளை கொண்டு வந்திருந்தார். அதில் இது ‘ஹெபடிக் எக்டோபிக்’ கர்ப்பம். (அதாவது கல்லீரலில் கரு வளர்ந்துள்ள நிலை) என்பது தெளிவாக தெரிந்தது.

இதுகுறித்து மூத்த அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் சுனில் கன்வாலுடன் பேசினோம். ஏனெனில் இதுபோன்ற சந்தர்ப்பங்களில் உங்களுக்கு ஒரு அறுவை சிகிச்சை நிபுணர் தேவை. அவரும் ஒப்புக்கொண்டார், அதன் பிறகு நோயாளி அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார்”என மருத்துவக் குழுவில் இடம் பெற்றிருந்த மருத்துவர் பருல் தஹியா கூறினார்.

இந்த அறுவை சிகிச்சை ஒன்றரை மணி நேரம் நீடித்தது எனக் கூறுகிறார்கள் மருத்துவர்கள்.

அறுவை சிகிச்சையின் காணொளியையும் கருவின் படங்களையும் மருத்துவர் கே.கே. குப்தா பிபிசிக்குக் காட்டினார்.

‘இன்ட்ராஹெபடிக் எக்டோபிக் கர்ப்பம்’ என்றால் என்ன?

பொதுவாக ஒரு பெண்ணின் கருப்பையில் இருந்து வெளியாகும் கருமுட்டை, விந்தணுவுடன் இணைந்தால், அப்பெண் கர்ப்பமாகிறார்.

இந்த கருவுற்ற முட்டை ஃபெலோபியன் குழாய் வழியாக கருப்பையை நோக்கி நகர்கிறது, பின்னர் கருப்பையிலேயே கரு வளர்கிறது.

சில சந்தர்ப்பங்களில், கருவுற்ற முட்டை கருப்பையை அடைவதற்குப் பதிலாக, ஃபெலோபியன் குழாயிலேயே இருக்கும் அல்லது வேறு சில உறுப்பின் மேற்பரப்பில் ஒட்டிக்கொண்டிருக்கும் என்று பிஎச்யு மருத்துவ அறிவியல் நிறுவனத்தின் பேராசிரியர் மருத்துவர் மம்தா கூறுகிறார்.

“உதாரணமாக, சர்வேஷ் விஷயத்தில் கரு கல்லீரலில் சிக்கிக் கொண்டது. கல்லீரலுக்கு நன்றாக ரத்த ஓட்டம் இருப்பதால், ஆரம்ப நாட்களில் கரு வளர ‘வளமான இடமாக’ அது செயல்படுகிறது. ஆனால் சிறிது காலத்திற்குப் பிறகு தாய்க்கும் குழந்தைக்கும் ஆபத்தான சூழ்நிலை ஏற்படுகிறது. அப்போது, அறுவை சிகிச்சையைத் தவிர வேறு வழியில்லை,” என்றார் மம்தா.

இந்தியாவில் இதுவரை எத்தனை பேர் இந்தச் சிக்கலை எதிர்கொண்டுள்ளனர்?

படக்குறிப்பு, இதனைப் புரிந்துகொள்ள, பாட்னா எய்ம்ஸில் மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவத் துறைப் பேராசிரியர் மருத்துவர் மோனிகா அனந்திடம் பேசினோம்.உலகம் முழுவதும், சராசரியாக 1% பேருக்கு மட்டுமே இதுபோன்ற ‘உள்-கல்லீரல்’ கர்ப்பம் ஏற்படுகிறது. இந்த வகை கர்ப்பத்தில், கரு கருப்பையில் இருக்காது என்கிறார் மருத்துவர் மோனிகா.

“ஒரு மதிப்பீட்டின்படி, 70 முதல் 80 லட்சம் கர்ப்பங்களில் ஒன்று ‘உள் கல்லீரல்’ கர்ப்பமாக இருக்கலாம்” எனத் தெரியவருகிறது, என்றும் அவர் கூறினார்.

இதற்கு முன்பு, உலகம் முழுவதும் 45 இன்ட்ராஹெபடிக் கர்ப்பங்கள் பதிவாகியுள்ளதாகவும், அவற்றில் 3 கர்ப்பங்கள் இந்தியாவைச் சேர்ந்தவை மருத்துவர் மோனிகா குறிப்பிட்டார்.

முதல் சம்பவம் 2012 ஆம் ஆண்டு டெல்லியில் உள்ள லேடி ஹார்டிங்கே மருத்துவக் கல்லூரியில் பதிவாகியது.

பின்னர் 2022 ஆம் ஆண்டில், மூன்றாவது சம்பவம் கோவா மருத்துவக் கல்லூரியிலும் , 2023 ஆம் ஆண்டில் பாட்னா எய்ம்ஸிலும் கண்டறியப்பட்டது.

பாட்னா எய்ம்ஸ் மருத்துவமனையில் பதிவான கல்லீரலில் கரு வளர்ந்த பெண்ணுக்கு மருத்துவர் மோனிகா ஆனந்த் மற்றும் அவரது குழுவினர் சிகிச்சை அளித்தனர்.

அவரது குழுவினர் மருந்தின் (மெத்தோட்ரெக்ஸேட்) உதவியுடன் பெண்ணுக்கு சிகிச்சை அளித்தனர். பின்னர் அவர்கள் ஒரு வருடம் முழுவதும் நோயாளியை தொடர்ந்து கண்காணித்தனர்.

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.பின்னர், மருத்துவர் மோனிகா அந்த அரிதான நிகழ்வை ஆவணப்படுத்தினார்.

இது இந்தியாவின் மூன்றாவது இன்ட்ராஹெபடிக் எக்டோபிக் கர்ப்பமாக பப்மெட் (PubMed) இல் வெளியிடப்பட்டது . அமெரிக்காவின் முன்னணி மருத்துவ ஆராய்ச்சி தரவுத்தளம் தான் பப்மெட் .

மருத்துவர் பருல் தஹியா மற்றும் மருத்துவர் கே.கே. குப்தா ஆகியோர் தங்கள் குழுவும் சர்வேஷ் விஷயத்தை ஆவணப்படுத்தத் தொடங்கியுள்ளதாகக் கூறுகிறார்கள்.

விரைவில் அது முடிக்கப்பட்டு ஒரு நம்பிக்கைக்குரிய மருத்துவ இதழில் வெளியிட அனுப்பப்படும்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு