வவுனியாவில் உள்ள தனியார் கல்வி நிலைய வாளகத்தில் உள்ள கிணற்றில் இருந்து உயர்தரத்தில் கல்வி கற்கும் மாணவி ஒருவர் இன்றைய தினம் திங்கட்கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரி உயர்தர வர்த்தகப் பிரிவில் கல்வி பயிலும், கோமரசன்குளம் பகுதியைச் சேர்ந்த மாணவியே சடலமாக மீட்கப்பட்டவராவார்.  

இச் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

வவுனியா, வைரவபுளியங்குளம் பகுதியில் உள்ள தனியார் கல்வி நிலையம் ஒன்றில் உயர்தர வர்த்தகப் பிரிவு மாணவர்களுக்கு காலையில் இருந்து மதியம் 12 மணிவரை வகுப்பு நடைபெற்றுள்ளது. 

குறித்த கல்வி நிலையத்தில் உயர்தர வர்த்தகப்பிரிவில் கல்வி கற்ற மாணவி நீண்ட நேரமாகியும் வீடு வந்து சேராமையால் பெற்றோர் மற்றும் உறவினர்கள் குறித்த மாணவியை தேடியுள்ளனர்.

இதன்போது, குறித்த மாணவியின் புத்தகப்பை, துவிச்சக்கர வண்டி என்பன மாணவி கல்வி பயின்ற தனியார் கல்வி நிலையத்தில் காணப்பட்டதுடன், அக் கல்வி நிலைய வளாகத்தில் இருந்த கிணற்றின் அருகே மாணவியின் செருப்பும் காணப்பட்டுள்ளது.

இதனையடுத்து, பெற்றோர் மற்றும் கல்வி நிலைய நிர்வாகத்தினர் வவுனியா பொலிசாருக்கு தெரியப்படுத்தியதையடுத்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிசார், விசாரணைகளை மேற்கொண்டதுடன், கிணற்றில் தேடுதல் மேற்கொண்டனர் அதன் போது, மாணவி கிணறில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். 

மாணவியின் சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக வவுனியா வைத்திய சாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், வவுனியா பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.