முத்து ஐயன்கட்டு குளப்பகுதியில் இடம்பெற்ற படுகொலை மூலம் மீண்டும் இராணுவத்தினரின் அராஜகம் வெளிபட்டிருப்பதாக குரல் அற்றவர்களின் குரல் அமைப்பின் செயல்பாட்டாளர் முருகையா கோமகன் தெரிவித்துள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை (10) யாழ்ப்பாணம் – அராலியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழர் தாயகப் பகுதிகளில் தொடர்ச்சியாக ஆக்கிரமிப்புக்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. யுத்த காலத்தில் எவ்வாறு இராணுவ மயமாக்கப்பட்டிருந்ததோ அதே இராணுவ மயமாக்கல் தொடர்ச்சியாக தாயக பிரதேசங்களில் நிலவுகிறது. 

தென்பகுதியில் இவ்வாறான இராணுவ எண்ணிக்கையோ அல்லது இராணுவ செயல்பாடுகளோ காணப்படுவதில்லை. ஆனால் எமது பிரதேசங்களிலேயே இது காணப்படுகின்றது.

எனவே உடனடியாக இந்த இராணுவமயமாக்கலை நிறுத்த வேண்டும். தமிழர் தாயகங்களில் உள்ள இராணுவத்தினரை தென்பகுதிகளுக்கு அனுப்பினால் தமிழர் தாயகங்களில் உள்ள இராணுவ மயமாக்கலை குறைக்கலாம்.

மீண்டும் இராணுவத்தினருடைய அடக்குமுறையானது முத்து ஐயன்கட்டு குளத்தடியில் மேற்கொள்ளப்பட்ட குடும்பஸ்தரின் படுகொலை மூலம் வெளிப்பட்டு நிற்கின்றது. எனவே இராணுவத்தினரின் இவ்வாறான அராஜகங்கள் உடனடியாக கட்டுப்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.