Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
ரஷ்யாவிடமிருந்து அதிக எண்ணெய் வாங்கும் சீனாவை டிரம்ப் குறிவைக்காதது ஏன்?
பட மூலாதாரம், Mikhail Svetlov/Getty
படக்குறிப்பு, இந்தியாவும் சீனாவும் ரஷ்யாவின் இரண்டு முக்கிய வர்த்தக பங்காளிகள் (கோப்பு படம்)எழுதியவர், சுமந்த் சிங்பதவி, பிபிசி செய்தியாளர்X, @gaharwar_sumantஒரு மணி நேரத்துக்கு முன்னர்
இந்தியா மீது கூடுதலாக 25 சதவிகித இறக்குமதி வரி (tariff) விதிக்கும் நிர்வாக உத்தரவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டதை அடுத்து, இந்தியா மீதான அமெரிக்க வரி 50 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. இந்தியா மீதான புதிய வரிகள் ஆகஸ்ட் 27 முதல் அமலுக்கு வரும்.
ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதன் மூலம், இந்தியா யுக்ரேனில் ரஷ்யா நடத்தும் போரை ஊக்குவிக்கிறது என்றும், அதனால் தான் கூடுதல் வரி விதிப்பதாக டிரம்ப் கூறுவது ஆதாரமற்றது என இந்தியா கூறியுள்ளது. மேலும், அமெரிக்காவும், பல ஐரோப்பிய நாடுகளும் ரஷ்யாவுடன் வணிகம் செய்து வருவதையும் இந்திய அரசு சுட்டிக்காட்டியுள்ளது.
இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், இந்தியாவைத் தவிர, சீனாவும் ரஷ்யாவின் பெரிய வர்த்தக கூட்டாளியாக இருக்கும் நிலையில், டிரம்ப் இந்தியா மீது சீனாவை விட அதிக சதவிகித இறக்குமதி வரி விதித்துள்ளார்.
புதன்கிழமையன்று (2025, ஆகஸ்ட் 6) வெள்ளை மாளிகையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், பிபிசி செய்தியாளர் ஆன்டனி ஸர்ச்சர் டிரம்பிடம் கேட்ட கேள்வியும் அதற்கு அவர் அளித்த பதிலும் முக்கியமானது.
‘சீனா உட்பட பல நாடுகள் ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்கும் நிலையில், ஏன் இந்தியா மட்டும் குறிவைக்கப்படுகிறது?’ என்ற பிபிசி செய்தியாளரின் கேள்விக்கு பதிலளித்த டிரம்ப் , “8 மணி நேரம் மட்டுமே ஆகிறது. அடுத்து என்ன நடக்கிறது என்று பார்ப்போம். நீங்கள் பார்க்க வேண்டியது இன்னும் நிறைய உள்ளது. மேலும் பல கூடுதல் தடைகளையும் காணலாம்” என்றார்.
Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading
அதிகம் படிக்கப்பட்டது
End of அதிகம் படிக்கப்பட்டது
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, டிரம்ப் இந்தியா மீது 50 சதவிகித இறக்குமதி வரியை விதித்துள்ளார், அதே நேரத்தில் அது சீனா மீது 30 சதவிகிதமாக உள்ளது (கோப்புப்படம்)’சீனா மீது கூடுதல் வரிகளை விதிக்கும் திட்டம் அமெரிக்காவிடம் இருக்கிறதா?’ என்று டிரம்பிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அமெரிக்க அதிபர், “அதுவும் நடக்கலாம். அடுத்து நாங்கள் என்ன நடவடிக்கைகள் எடுக்கிறோம் என்பதைப் பொறுத்தது அது” என்றார்.
சமீபத்தில், வர்த்தக ஒப்பந்தத்துக்கான ஆகஸ்ட் 1 காலக்கெடு முடிவடைந்ததை அடுத்து, 90க்கும் மேற்பட்ட நாடுகள் மீது புதிய வரிகளை விதிப்பதாக டொனால்ட் டிரம்ப் அறிவித்திருந்தார்.
டிரம்ப் அதிக சதவிகித வரிகளை விதித்துள்ள நாடுகளில் பிரிக்ஸ் நாடுகளும் அடங்கும். புதிய பட்டியலின்படி , டிரம்ப் பிரேசிலுக்கு 50 சதவிகித வரியை விதித்துள்ளார். இது தவிர, தென்னாப்பிரிக்கா மற்றும் சீனா மீது 30 சதவிகித வரி விதிக்கப்பட்டது.
இந்தியாவை விட சீனா ரஷ்யாவின் பெரிய வர்த்தக கூட்டாளியாக இருந்தாலும், ஏன் சீனாவைவிட இந்தியாவுக்கு அதிக அளவு வரியை டிரம்ப் விதித்திருக்கிறார் என்பதற்கான காரணங்களை நிபுணர்களிடம் இருந்து தெரிந்துக் கொள்வோம்.
பட மூலாதாரம், Getty Images
அமெரிக்கா ஏன் சீனாவை விட இந்தியா மீது அதிக வரிகளை விதித்தது?
ப்ளூம்பெர்க்கின் மூத்த உலகளாவிய விவகார ஆய்வாளர் கரிஷ்மா வாஸ்வானி, பிபிசி இந்திக்கு அளித்த பேட்டியில், வரி விஷயத்தில் சீனா மிகவும் புத்திசாலித்தனமாக செயல்பட்டதாகக் கூறினார்.
“டிரம்ப் விதித்த வரிகள் மீதான சீனாவின் ராஜதந்திரம் மிகவும் முதிர்ச்சியடைந்துள்ளது. வளர்ச்சியடையாத வர்த்தக கூட்டாளி நாடுகளில் சிலவற்றுக்கு சீனா வரிகளை பூஜ்ஜியமாக்கியுள்ளது. மேலும், ஜப்பான் மற்றும் தென் கொரியாவிலிருந்து பொருட்களுக்கான சீரான தேவை போன்ற நடவடிக்கைகளை எடுத்து, சீனா ஒரு அனுபவம் வாய்ந்த நாடு என்பதை நிரூபித்துள்ளது” என்று கரிஷ்மா கூறுகிறார்.
“அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் தங்கள் வணிகத் தேவைகளை எவ்வாறு பூர்த்தி செய்துக் கொள்வது என்பது தெரியும். இருந்தபோதிலும், பல சுற்று பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு தொடர்ந்து வரிகளைக் குறைப்பது சீனாவின் நிலைப்பாடு எவ்வளவு வலுவானது என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது” என்று அவர் கூறுகிறார்.
அமெரிக்காவை தளமாகக் கொண்ட தெற்காசிய ஆய்வாளர் மைக்கேல் குகல்மேன், இந்தியா மீதான அமெரிக்காவின் அதிக வரி மற்றும் சீனா மீதான குறைந்த வரிகள் பற்றி பேசுகையில், சீனா அமெரிக்காவை கோபப்படுத்தவில்லை என்று கூறுகிறார்.
“சண்டை நிறுத்தத்தில் தனது பங்கை குறிப்பிட்டு அமெரிக்க அதிபர் டிரம்ப் பெருமை சேர்ப்பதைத் தடுக்க சீனா எதுவும் செய்யவில்லை. எந்த சீனத் தலைவரும் தொலைபேசியில் நீண்ட நேரம் டிரம்புடன் பேசி, எது சரி, எது தவறு என்பதை அவருக்குச் சொல்லவில்லை. ஆனால் இந்தியாவைப் பொறுத்தவரை இதுதான் நடந்துள்ளது” என்று குகல்மேன் கூறுகிறார் .
இந்தியா-பாகிஸ்தான் சண்டை நிறுத்தம் குறித்த டிரம்பின் கூற்றை இந்தியா மறுத்து வருவதாகவும், இந்த விவகாரம் குறித்து பலமுறை அறிக்கைகளை வெளியிட்டு வந்ததையும் குகல்மேன் சுட்டிக்காட்டுகிறார்.
“எனவே, வர்த்தகம் மற்றும் வரி பிரச்னையில் இந்தியா மற்றும் இந்திய அரசாங்கத்தின் மீது அதிபர் டிரம்ப் அதிக கோபத்தை வெளிப்படுத்தியதற்கு இதுவே காரணமாக இருக்கலாம் என்று நினைக்கிறேன்,” என்று அவர் கூறுகிறார்.
இதை டிரம்பின் ‘இரட்டை நிலை’ என்று அழைக்கும் குகல்மேன், “இது நிச்சயமாக இரட்டை நிலைப்பாடு மற்றும் பாசாங்குத்தனமானது” என கூறுகிறார்.
பட மூலாதாரம், Getty Images
இந்தியாவின் முன்னாள் வெளியுறவு செயலாளர் கன்வல் சிபலும், டிரம்பின் அணுகுமுறையைப் பற்றி கேள்வி எழுப்புகிறார்.
“இந்தியாவை ‘வரிகளின் மன்னன்’ என்று டிரம்ப் தொடர்ந்து குறிவைக்கலாம், வரிகளை விதிக்கப் போவதாக மிரட்டலாம், காஷ்மீர் பிரச்னையில் மத்தியஸ்தம் செய்ய விருப்பம் தெரிவிக்கலாம், ஆனால் எது சரி, எது தவறு என்று கூட அவரிடம் மோதி சொல்லக்கூடாதா?” என்று கன்வல் சிபல் கூறுகிறார் .
“அமெரிக்காவை ஒவ்வொரு நாளும் விமர்சிக்கும் சீனாவின் செய்தித் தொடர்பாளர், அவரை அவமானப்படுத்துகிறார், வெளிப்படையாக சவால் விடுகிறார். இருந்தபோதிலும், சீனா மீது வரி விதிப்பதை டிரம்ப் தாமதப்படுத்துகிறார்” என்று அவர் கூறுகிறார்.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.ரஷ்யாவுடன் எந்த நாடு எவ்வளவு வர்த்தகம் செய்கிறது?
யுக்ரேன் போருக்காக ரஷ்யாவை விமர்சித்தாலும், அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் ரஷ்யாவுடனும் வணிகம் செய்துள்ளன என்று பின்லாந்தை தளமாகக் கொண்ட சிந்தனைக் குழுவான ”Center for Research on Energy and Clean Air’ (CREA) கூறுகிறது.
ரஷ்யாவிடம் இருந்து எரிசக்திக்காக எண்ணெய் வாங்கும் இந்தியாவை டிரம்ப் குறிவைக்கும் நிலையில், CREAஇன் அறிக்கை ஐரோப்பிய நாடுகளே ரஷ்யாவிடம் இருந்து அதிக எரிசக்தியை இறக்குமதி செய்வதாகக் காட்டுகிறது.
CREAவின் அறிக்கையின் படி, 2025 ஏப்ரல் மாதத்தில் ரஷ்யாவிலிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு 3.32 பில்லியன் கன மீட்டர் எரிவாயு ஏற்றுமதி செய்யப்பட்டது, அதே நேரத்தில் 2025 ஜூன் மாதத்தில் 3.01 பில்லியன் கன மீட்டர் எரிவாயு ஏற்றுமதி செய்யப்பட்டது.
பட மூலாதாரம், Getty Images
CREAவின் கூற்றுப்படி, இந்தியாவும் சீனாவும் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் பிரதான நாடுகள் என்றால், எரிவாயுவை அதிகம் வாங்குவது ஐரோப்பிய ஒன்றியம் தான்.
நிலக்கரி: 2022 டிசம்பர் 5 மற்றும் 2025 ஜூன் மாதத்துக்கு இடையில், ரஷ்யாவின் மொத்த நிலக்கரி ஏற்றுமதியில் சீனா 44 சதவிகிதத்தை வாங்கியது. அதே காலக்கட்டத்தில் இந்தியா 19 சதவிகிதத்தையும், துருக்கி 11 சதவிகிதத்தையும், தென் கொரியா ஒன்பது சதவிகிதத்தையும், தைவான் நான்கு சதவிகிதத்தையும் வாங்கியது.
கச்சா எண்ணெய்: ரஷ்யாவின் மொத்த கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் சீனா 47 சதவிகிதத்தை வாங்கியது. எண்ணெய் கொள்முதலில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. மொத்த எண்ணெயில் இந்தியா 38 சதவிகிதத்தை வாங்கியது, ஐரோப்பிய ஒன்றியமும், துருக்கியும் 6-6 சதவீத எண்ணெயை வாங்கியுள்ளன.
திரவநிலை இயற்கை எரிவாயு (LNG): ரஷ்யா உற்பத்தி செய்யும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவை அதிகம் வாங்குவது ஐரோப்பிய ஒன்றியம் தான். ரஷ்யாவின் LNG ஏற்றுமதியில் 51 சதவிகிதத்தை ஐரோப்பிய ஒன்றியம் வாங்கினால், அதற்கு அடுத்த இடத்தில் சீனா 13% மற்றும் பிரேசில் 12% பங்கு எல்.என்.ஜியை வாங்குகின்றன.
குழாய் எரிவாயு: ரஷ்யாவிடமிருந்து குழாய்கள் மூலம் அதிக எரிவாயுவை வாங்கியதும் ஐரோப்பிய ஒன்றியம் தான். ரஷ்யாவின் மொத்த குழாய் எரிவாயு ஏற்றுமதியில் 37 சதவிகிதத்தை ஐரோப்பிய ஒன்றியம் வாங்கியது என்றால், சீனா 30 சதவிகிதத்தையும் துருக்கி 27 சதவிகிதத்தையும் வாங்கியுள்ளன.
பட மூலாதாரம், Win McNamee/Getty Images
படக்குறிப்பு, இந்தியாவுக்கு 50% வரி விதித்த டிரம்ப்டிரம்பின் கோபத்துக்கு காரணம் வர்த்தக ஒப்பந்தமா?
ஒரு காலத்தில் மோதியுடன் அன்பாக கைகுலுக்கிய டிரம்ப், இப்போது அவருக்கு எதிராகத் திரும்பியது ஏன்?
கடந்த காலத்தைப் பார்த்தால், அதன் அறிகுறிகள் ஏற்கெனவே தோன்றத் தொடங்கிவிட்டன. பரஸ்பர உறவுகளை விட தனிப்பட்ட ‘கெமிஸ்ட்ரி’க்கு முன்னுரிமை கொடுக்கப்படக்கூடாது என்று இராஜதந்திர நிபுணர்கள் முன்னரே எச்சரித்திருந்தனர்.
மோதிக்கும் டிரம்புக்கும் இடையிலான நட்பைப் பற்றிய ஊடகச் செய்திகள் நன்றாகத் தோன்றலாம், ஆனால் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவின் சிக்கல்களை அது வெளிக்காட்டவில்லை. அதுமட்டுமல்ல, அரசியலில் தனிப்பட்ட உறவுகள் வேலை செய்யாது.
பட மூலாதாரம், ANDREW CABALLERO-REYNOLDS/AFP via Getty
படக்குறிப்பு, இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான பல சுற்று பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகும், வர்த்தக ஒப்பந்தம் எட்டப்படவில்லை (கோப்பு படம்)டிரம்பின் அரசியலில் உணர்ச்சிகள் ஒரு பொருட்டல்ல. எண்ணெய் அல்லது வர்த்தகப் பிரச்னையில் டிரம்புடன் இந்தியா உடன்படவில்லை என்றும், அதனால்தான் இதெல்லாம் நடக்கிறது என்றும் நிபுணர்கள் நம்புகின்றனர்.
இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக பல சுற்று பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்ட போதிலும், இதுவரை ஒப்பந்தம் இறுதிகட்டத்தை எட்டப்படவில்லை. விவசாயம் மற்றும் பால் துறையில் அமெரிக்காவுக்கு இந்தியா சலுகைகளை வழங்காததே இதற்குக் காரணம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
பிபிசியின் ‘தி லென்ஸ்’ என்ற நிகழ்ச்சியில் பேராசிரியர் ஷான் ரே, “விவசாயம் மற்றும் பால்வளத் துறையை இந்தியா திறக்க வேண்டும் என்று அமெரிக்கா விரும்புகிறது. நாம் இங்கிலாந்துடன் ஒரு ஒப்பந்தத்திலும் கையெழுத்திட்டுள்ளோம், ஆனால் இந்தத் துறைகளைத் திறக்கவில்லை” என்று கூறினார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு