மன்னார் – மதவாச்சி பிரதான வீதி, முருங்கன் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காற்றாலை மின் கோபுர பாகங்களுடன் காணப்பட்ட வாகனங்கள் இன்றைய தினம் புதன்கிழமை அதிகாலை 2.30 மணியளவில் மக்களின் எதிர்ப்புகளுக்கு மத்தியில் நூற்றுக்கணக்கான பொலிஸாரின் பாதுகாப்புடன் மன்னார் நகரை சென்றடைந்தது.

குறித்த காற்றாலை மின் கோபுரங்களுக்கான பாகங்களை மன்னார் நகருக்குள் எடுத்து வரக்கூடாது என்ற கோரிக்கையை முன்வைத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் மன்னார் தள்ளாடி சந்தியில் மக்கள் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

அதனைத்தொடர்ந்து கடந்த திங்கள் மற்றும் செவ்வாய் ஆகிய தினங்களில் மன்னார் பிரஜைகள் குழுவின் ஏற்பாட்டில் மக்கள் போராட்டத்தை முன்னெடுத்து வந்த நிலையில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை (5) காலை மன்னார் பஜார் பகுதியில் உள்ள வர்த்தக நிலையங்களை மூடி போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இந்நிலையில் நேற்றைய தினம் இரவு மக்கள் போராட்ட களத்தில் இருந்து சென்ற நிலையில் இன்றைய தினம் அதிகாலை 2.30 மணியளவில் நூற்றுக்கணக்கான பொலிஸார் மற்றும் கலகம் அடக்கும் பொலிஸாரின் பாதுகாப்புடன் காற்றாலை மின் கோபுரங்களை ஏற்றிய வாகனம் மன்னாரை நோக்கிச் சென்றது.