அழகான பெண்களின் புகைப்படங்களைக் காட்சிப்படுத்தி, ஆபாசக் கதைகளைப் பரப்பி  யூடியூப் சனல் நடத்திய  கடுவெல பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு ஐந்து ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கப்பட்ட ஆறு மாத சிறைத்தண்டனையை கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி ஜெயதுங்க இன்று  வியாழக்கிழமை (31) விதித்துள்ளார்.

குற்றப் புலனாய்வுத் துறையின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் பிரதிவாதியாக  காணப்பட்ட  திமுத்து சாமர (டோபியா) என்ற நபருக்கே இவ்வாறு  ஐந்து ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கப்பட்ட ஆறு மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கொழும்புப் பகுதியில் உள்ள பாடசாலை ஆசிரியர் ஒருவர் அளித்த  முறைப்பாட்டின் அடிப்படையில், கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவு இந்த வழக்கைத் தாக்கல் செய்துள்ளது. ஆபாசக் கதைகளை ஒளிபரப்பும் யூடியூப் சனலில் தனது புகைப்படம் ஒளிபரப்பப்படுவதாக ஆசிரியை அளித்த முறைப்பாட்டின்  அடிப்படையில் மூன்று குற்றச்சாட்டுகளின் கீழ் இந்த வழக்குத் தொடரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது