இலங்கைக்கு கடத்த  சரக்கு வாகனத்தில் தக்காளி பெட்டிகளுக்கு பின்புறம் 7 மூட்டைகளில் பதுக்கி வைத்து கொண்டுவரப்பட்ட 240 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டதோடு,ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் பகுதியை  சேர்ந்த வாகன  ஓட்டுநர் ஒருவர்  கடந்த சில தினங்களுக்கு முன்பு திருச்சியில் இருந்து ஆந்திரா மாநிலத்திற்கு முருங்கைக்காய் உள்ளிட்ட காய்கறி பொருட்களை ஏற்றிச் சென்று சரக்குகளை ஆந்திரா வில் இறக்கிய பின்பு அவரது சொந்த ஊரான  தென்காசி மாவட்டம், ஆலங்குளம் பகுதிக்கு வந்துள்ளார்.

பின்னர் இரு தினங்கள் அங்கு இருந்துவிட்டு, தூத்துக்குடி மாவட்டம் வேம்பார் கடற்கரை நோக்கி நேற்று புதன்கிழமை (30.07.25)    வந்துள்ளார்.

அப்போது வேம்பார் கடற்கரை அருகே சந்தேகத்திற்கிடமான வாகனம் நின்று கொண்டதை பார்த்த காவற்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அப்போது முன்னுக்குப் பின் முரணான தகவலை கூறியுள்ளார்.

தொடர்ந்து, மாவட்ட போதை பொருட்கள் கடத்தல் தடுப்பு நுண்ணறிவு பிரிவு காவற்துறையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.பின்னர் வாகனத்தை சோதனையிட்ட போது  வாகனத்தில் தக்காளி கூடை களுக்கு பின்புறம் மூட்டை மூட்டையாக கஞ்சா இருப்பது தெரியவந்தது.

மேலும், 50 லட்ச ரூபாய் மதிப்பிலான 240 கிலோ கஞ்சாவை காவற்துறையினர் பறிமுதல் செய்தனர்.

இதன் சர்வதேச மதிப்பு 1 கோடி ரூபாய் இருக்கும் என கூறப்படுகிறது. இது தொடர்பாக வாகனத்தை ஓட்டி வந்த நாஞ்சில் ராஜ்-டம் விசாரணை மேற்கொண்ட போது படகு மூலம்   இலங்கைக்கு கடத்த முயன்றது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து துணை காவல் கண்காணிப்பாளர் சுரேஷ் தலைமையிலான காவற்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.