திருகோணமலையிலுள்ள இலங்கை கடற்படையின் வதைமுகாமிற்கு பொறுப்பாக இருந்திருந்த  இலங்கை கடற்படையின் முன்னாள் தளபதி அட்மிரல் (ஓய்வு) நிசாந்த உலுகேதென்னவை ஒகஸ்ட் 13 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் அவர் மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 

கடற்படை புலனாய்வு பணிப்பாளராக அவர் இருந்த காலத்தில், பொத்துஹெரவைச் சேர்ந்த ஒரு இளைஞர் காணாமல் போனமை தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

அட்மிரல் நிசாந்த உலுகேதென்ன, ஜூலை 2020 முதல் டிசம்பர் 2022 வரை இலங்கை கடற்படையின் 24வது தளபதியாகப் பணியாற்றியிருந்தார்.

கடத்தப்பட்ட சிங்கள இளைஞன் திருகோணமலையிலுள்ள இலங்கை கடற்படையின் வதைமுகாமின் சுவர்களில் கரியினால் எழுதியிருந்த குறிப்பின் அடிப்படையில் நிசாந்த உலுகெதென்ன கைதாகியிருந்தார்.அதே சித்திரவதை கூடத்தில் நூற்றுக்கணக்கான தமிழ் இளைஞர்கள் தடுத்து வைக்கபட்டு படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.

இதனிடையே இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரொட்ரிகோவுக்கு நாளை (1) முதல் ஒரு வருட சேவை நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் பரிந்துரையின் பேரில் சேவை நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.