திருகோணமiலையின் சம்பூர் மனித எலும்பு எச்சங்கள் கண்டெடுக்கப்பட்ட இடத்தில் தொடர்ந்து அகழ்வு செய்வதா? இல்லையா? என்பதை தீர்மானிக்க எதிர்வரும் ஆகஸ்ட் 6 ந் திகதி விசேட கூட்டம் ஒன்றை நடத்த வேண்டும் என்று மூதூர் நீதிவான் நீதிமன்றம் இன்று புதன்கிழமை (30) தீர்மானித்துள்ளது.

தொல்பொருள் திணைக்களம்,தடயவியல் பிரிவினர்,சட்ட வைத்திய அதிகாரி,புவிச்சரிதவியல் மற்றும் சுரங்கங்கள் பணியகம், குற்றவியல் பிரிவினர், தேசிய நிலக் கண்ணிவெடி அகற்றும் நிறுவனத்தினர்,என்பனவற்றின் அலுவலர்கள் நீதிவான்; ஒன்று கூடி ஆராய்வது என்றும், அதன் பின்னர் எடுக்கப்படும் தீர்மானத்திற்கு அமைய இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும்   தீர்மானிக்கப்பட்டது.

கண்டெடுக்கப்பட்டுள்ள எலும்பு எச்சங்கள் மிகவும் பழமையானவை.அதனால் தீர்மானம் ஒன்றிற்கு வருவதாயின் அகழ்வுடன தொடர்புடைய சகல தரப்புகளுடனும் இணைந்து கலந்துரையாட வேண்டிய நிலை உள்ளதால் அதற்கான நடவடிக்கை எடுப்பது என்று நீதிமன்று தீர்மானித்தது.

சம்பூர் பிரதேசத்தில் மிதிவெடி அகற்றும் பிரிவினர் ஜூலை 19 ஆம்  திகதி அகழ்வில் ஈடுபட்ட போது மனித மண்டையோடு மற்றும் எலும்பு எச்சங்கள் என்பன வெளிவந்தன. இதனை அடுத்து மூதூர் நீதிமன்ற உத்தரவின்படி அகழ்வு வேலைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.