வடமராட்சி கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்டு வரும் இந்திய மீனவர்களால் தமது வலைகள் அறுக்கப்பட்டுகிறது என பருத்தித்துறை மீனவர்கள் கவலை தெரிவித்துள்னர். 

பருத்தித்துறை கடற்பரப்பில் கடந்த சில தினங்களாக எல்லை தாண்டி இந்திய மீனவர்கள் இழுவைமடி படகுகளின் மீன்பிடி அதிகரித்துள்ளது. 

இதனால் நாளாந்தம் எமது வலைகள் அறுத்தழிக்கப்பட்டு வருகிறது. இதனால் பல இலட்சம் ரூபா பெறுமதியான வலைகள் இழுவைப்படகுகளால் அறுத்தழிக்கப்படுவதுடன் வலைகள் காணாமல் போகின்றது. 

அத்துடன் உள்ளூரில் சட்டவிரோத மீன்பிடியான சுருக்குவலைத் தொழில் நடவடிக்கையால் எமது வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி வருகிறது.

இதனைக் கட்டுப்படுத்த மீன்பிடி அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்திய மீனவர்களின் அத்துமீறலையும் தடுத்து நிறுத்த வேண்டும் என கடற்றொழிலாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.