யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் உள்ள இரண்டு மனித புதைகுழிகளில் இருந்தும் இன்றைய தினம் வியாழக்கிழமை 03 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 09 மனித எலும்புக்கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் கடந்த 04 நாட்களாக முன்னெடுக்கப்பட்டு அகழ்வு பணியில், 23 மனித எலும்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அவற்றில் நேற்றைய தினம் இரண்டும் இன்றைய தினம் 09 ஆகவும்  11 எலும்புக்கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.

செம்மணி பகுதியில் “தடயவியல் அகழ்வாய்வுத்தளம் இல – 01” மற்றும்  “தடயவியல் அகழ்வாய்வுத்தளம் இல – 02” என நீதிமன்றினால் அடையாளப்படுத்தப்பட்ட மனித புதைகுழிகளில் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இரண்டாம் கட்ட பணிகளுக்காக 45 நாட்கள் நீதிமன்றினால் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது இரண்டாம் பகுதி அகழ்வு பணிகள் இன்றைய தினம் 19ஆவது நாளாக முன்னெடுக்கப்பட்டது

அதன் போது இரண்டு மனித புதைகுழிகளில் இருந்தும் இன்றைய தினம் வியாழக்கிழமை 03 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இரண்டாம் கட்டத்தின் இரண்டாம் பகுதி கடந்த 04 நாட்களாக முன்னெடுக்கப்படும் அகழ்வு பணியில் , இன்றைய தினத்துடன் 23 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றில் , 11 எலும்பு கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.

செம்மணி மனித புதைகுழியில் அகழ்வு பணிகள் இதுவரையில் கட்டம் கட்டமாக 28 நாட்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அதன் போது, இன்றைய தினம் அகழ்ந்து எடுக்கப்பட்ட 09 எலும்பு கூட்டு தொகுதியுடனுமாக 76 எலும்பு கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதுடன், இதுவரையில் 88 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதேவேளை இன்றைய தினம் எலும்பு கூட்டு தொகுதிக்கு மேலதிகமாக சிறிய கண்ணாடி போத்தல் ஒன்றும் , இரும்பு துகள்கள் சிலவும் சான்று பொருட்களாக மீட்கப்பட்டுள்ளது. அவை சான்று பொருட்களாக அடையாளப்படுத்தப்பட்டு , நீதிமன்ற கட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளன.

அதேநேரம் குழந்தைகளில் பால் போச்சி போன்றதான போத்தல் , ஆடைகளை ஒத்த துணி , சிறுவர்களின் காலணிகள் என நம்பப்படும் பொருட்கள் போன்ற சான்று பொருட்கள்  கடந்த தினங்களில் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அவை எதிர்வரும் நாட்களில் அகழ்ந்து எடுக்கப்படவுள்ளன