நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சை உபகரணங்களை அதிக விலைக்கு விற்பனை செய்து ஊழல் செய்ததாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் மஹேஷி விஜேரத் மற்றும்  ஊழல் குற்றச்சாட்டில்  கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் முன்னாள் தலைவர் நிஷாந்த விக்ரமசிங்க ஆகியோரை பிணையில் விடுவிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகள் மற்றும் பிரதிவாதிகள் தரப்பு சட்டத்தரணிகளின் வாதங்களை பரிசீலித்த பின்னர், பிரதான நீதவான் தனுஜா லக்மாலி ஜயதுங்க,  மஹேஷி விஜேரத்தை  50,000 ரூபாய் ரொக்கப் பிணையிலும், தலா 5 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள இரண்டு சரீரப் பிணையிலும் விடுவிக்க உத்தரவிட்டார்.   அத்துடன் , சந்தேக நபர் ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலைக்குள் நுழைவதற்கும், வெளிநாடு பயணிப்பதற்கும் தடை விதித்து நீதிவான் உத்தரவிட்டார்.

அத்துடன்  ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் முன்னாள் தலைவர் நிஷாந்த விக்ரமசிங்கவை   50,000 ரூபாய் ரொக்கப் பிணையிலும் தலா 5 மில்லியன் ரூபாய் பெறுமதியான மூன்று சரீரப் பிணைகளிலும் விடுவிக்க உத்தரவிட்ட நீதவான், சந்தேக நபருக்கு வௌிநாட்டுப் பயணத் தடையும் விதித்து உத்தரவிட்டார்.