தாய் நாட்டிற்காக தங்கள் உயிரை தியாகம் செய்த அனைத்து இலங்கையர்களையும் நினைவுகூரும் வகையில், இராணுவத்தின் 542 வது காலாட்  படை பிரிவு ஏற்பாடு செய்த தேசிய மர நடுகை நிகழ்வு நேற்று திங்கட்கிழமை (14.07.25)  மன்னார் மடு திருத்தல வளாகத்தில் இடம் பெற்றது.

குறித்த  நிகழ்வில் மன்னார் மறைமாவட்ட  ஆயர் மேதகு   டாக்டர். ஏ. ஞானப்பிரகாசம் ஆண்டகை,  மன்னார் மாவட்ட செயலாளர்   கே. கனகேஸ்வரன் மற்றும் 54 வது காலாட்படை பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் ஏ.எம்.சி. அபேகோன் , மற்றும் 542 வது காலாட்படை பிரிகேடியர்  தளபதி பிரிகேடியர் சந்தன அசுர சிங்க  மற்றும் பிராந்திய வன அதிகாரி   வீரகோன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மடு பகுதியின் சூழலையும், சுற்றுச் சூழலின் அழகையும் மரம் நடுதல் கணிசமாக மேம்படுத்தும்  நோக்கத்துடன்   தேர்ந்தெடுக்கப்பட்ட   500 மரக்கன்றுகள்  நடப்பட்டன.

54 வது காலாட்படை பிரிவின் கட்டளைத் தளபதியின் வழிகாட்டுதல் மற்றும் அறிவுறுத்தலின் பேரில் 542 வது காலாட்படை படைப்பிரிவின் கட்டளை தளபதி மற்றும் 4 வது கஜபா காலாட்படை படைப்பிரிவின் கட்டளை தளபதி ஆகியோரின் நெருக்கமான மேற்பார்வையின் கீழ் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த நிகழ்வில் சிவில் விவகார அதிகாரி 542 வது காலாட்படை படைப்பிரிவின் ஒருங்கிணைப்பில் இராணுவத்தினர்  பங்கேற்றனர்.