மன்னார் நகர பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பேசாலை வடக்கு கிராம அலுவலர் பிரிவில் கனிம மணல் அகழ்வதற்கு அனுமதி வழங்குவதற்கு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு  அறிக்கை தயாரிப்பதற்கு நீர் பரிசோதனை செய்வதற்கு நீர் வளங்கள் சபை அதிகாரிகள் கொழும்பிலிருந்து இன்றைய தினம் (15) சென்றிருந்த நிலையில்   மக்களின் எதிர்ப்பால் ஆய்வு செய்ய முடியாமல் மீண்டும் திரும்பி சென்று உள்ளனர்.

ஏற்கனவே இவ்வாறான ஆய்வுகள் இரண்டு தடவைகள் மேற்கொள்ளப்பட்ட போதும் மக்களின் போராட்டத்தினால் தடுத்து நிறுத்தப்பட்டது.

மன்னாரில் இவ்வாறான திட்டங்களை முன்னெடுப்பது தொடர்பில் விசேட கலந்துரையாடல் நடத்தப்பட்ட பின்னரே இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என அரசாங்கம் ஏற்கனவே தெரிவித்திருந்த நிலையில்   இவ்வாறு ஆய்வு பணிகளை மேற்கொள்ளக் கூடாது என தீர்மானிக்கப்பட்டு இருந்தது.

கடந்த   மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்தில் எவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்ள கூடாது என்றும் அவ்வாறு மேற்கொண்டால் அது மாவட்ட அபிவிருத்திக் குழுவின் அனுமதியுடன் மேற்கொள்ளப்பட வேண்டும்.என்றும் தீர்மானிக்கப்பட்டது.

 இவை எல்லாவற்றையும் மீறி கனிம மண் அகழ்விற்கு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை வழங்குவதற்கு ஒவ்வொரு திணைக்களங்களும் இவ்வாறான ஆய்வுகள் மேற்கொள்வதற்காக களப் பயணம்    மேற்கொள்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.