சரோஜா தேவி: குடும்பத்தால் வெறுக்கப்பட்ட 4வது பெண் குழந்தை – சினிமாவில் சாதித்த கதை

16 நிமிடங்களுக்கு முன்னர்

”பரதக்கலை, வாய்ப்பாட்டு, மேடை நாடகம் என்பன போன்ற கூடுதல் முகவரிகள் ஏதுமில்லை. நடிப்பில் வழிகாட்டுவதற்குப் போதிய பின்புலமும் இல்லை. ஆனாலும் தென்னகத் திரையுலகின் உச்சாணிக் கொம்பைத் தொட்டவர் சரோஜா தேவி. அதற்கு இரண்டு முக்கியமான காரணங்கள், கலையின் மீதான பக்தியும், சலியாத உழைப்பும். எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினி என்ற தமிழ்ச்சினிமாவின் மூவேந்தர்களும் கொண்டாடி மகிழ்ந்த ஒரே அபூர்வத்தாரகை. பொற்காலத் தமிழ் சினிமாவின் வசூல் மகாத்மியமும் அவரே”

சரோஜா தேவியின் வாழ்க்கை வரலாற்றை எழுதியுள்ள பா.தீனதயாளன் அதில் குறிப்பிட்டுள்ள வார்த்தைகள் இவை. இவர்தான் நடிகையர் திலகம் சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றையும் எழுதியவர்.

”திரையுலகில் என்னுடைய துரித வளர்ச்சிக்குக் காரணம் எம்ஜிஆர் என்ற மூன்றெழுத்து மந்திரம்” என்று சரோஜா தேவி, தன்னுடைய கட்டுரையில் பதிவு செய்திருந்தார்.

ஆனால் அத்தகைய பெருமை பெற்ற எம்ஜிஆரின் படங்கள் அதிகமாக விலை பேசப்பட்டதற்கும் சரோஜா தேவி முக்கியக் காரணமாக இருந்தார் என்று பா.தீனதயாளளன் பதிவு செய்கிறார்.

மன்னாதி மன்னன் படச்சுவரொட்டிகளில் சரோஜா தேவியின் ஸ்டில் இல்லாததால் விநியோகஸ்தர்கள், படப்பெட்டியைத் தூக்க மறுத்துப் பின் வாங்கினார்கள் என்ற சரோஜா தேவியின் முக்கியத்துவத்துக்கான அளவுகோல் என்றும் தீனதயாளன் குறிப்பிடுகிறார்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு