யாழ்ப்பாணத்தில் 15 வயது சிறுமியொருவரை விடுதி ஒன்றில் 17 நாட்கள் தடுத்து வைத்து , துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.  வட்டுக்கோட்டை  காவல்துறைப்பிரிவுக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமியை காணவில்லை என கடந்த 17 நாட்களுக்கு முன்னர் சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர்.

முறைப்பாட்டின் பிரகாரம் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்த வந்த நிலையில் , சிறுமி நல்லூர் பகுதியில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளார் எனும் தகவல் கிடைத்து , அங்கு விரைந்த  காவல்துறையினர்  சிறுமியை மீட்டு , ஆரம்ப விசாரணைகளை மேற்கொண்டதுடன் ,  வைத்திய பரிசோதனைக்காக வைத்திய சாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுத்தனர்.

ஆரம்ப கட்ட விசாரணையில் ,சிறுமியை இளைஞன் ஒருவர் காதலித்து வந்ததாகவும் , அவரே சிறுமியை வீட்டில் இருந்து அழைத்துச் சென்று 17 நாட்களும் விடுதியில் தங்கி இருந்ததாகவும் தெரியவந்துள்ளது.

அதேவேளை , விடுதியின் உரிமையாளரும் ,  சிறுமியுடன் தவறாக நடந்து கொண்டதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இந்நிலையில் சிறுமியின் காதலன் என கூறப்படும் இளைஞனை காவல்துறையினர்  கைது செய்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.