“இந்து” எனும் பெயரைக் கொடுத்த இஸ்லாமிய ஆட்சி மொழி : இந்தியா-பாரசீக தொடர்பு குறித்த சுவாரஸ்ய தகவல்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பண்டைய பாரசீக கையெழுத்துப் பிரதிகளின் படம்.எழுதியவர், அவதார் சிங்பதவி, பிபிசிஒரு மணி நேரத்துக்கு முன்னர்

“இஸ்லாமிய நாகரிகத்துக்கு முந்தைய, அதாவது 1,500 ஆண்டுகளுக்கு முன்பான காலகட்டம் இரானியர் ஒருவருக்கு எந்த அர்த்தத்தையும் வழங்காவிட்டாலோ அல்லது கபீர் மற்றும் அக்பர் குறித்து இந்தியர் ஒருவர் பெருமைப்படவில்லை என்றாலோ, அது கடந்த காலத்தின் தவறு அல்ல, மாறாக நிகழ் காலத்தின் தவறு.”

‘எ ஷேர்ட் ஹெரிட்டேஜ்: தி க்ரோத் ஆஃப் சிவிலைசேஷன்ஸ் இந்தியா அன்ட் இரான்’ எனும் தன் புத்தகத்தில், இரானிய வரலாற்று வரைவியல் அறிஞரை மேற்கோளிட்டு இந்திய வரலாற்று எழுத்தாளர் இர்ஃபான் ஹபீப் கூறியுள்ள வார்த்தைகள் இவை.

எட்டு நூற்றாண்டுகளாக இஸ்லாமிய ஆட்சியின் கீழ் இருந்த பாரசீக மொழி மற்றும் நாகரிகம், பஞ்சாப் மற்றும் இந்தியாவின் மொழிகள், கலாசாரம் மற்றும் கட்டடக்கலை மீது ஆழ்ந்த தாக்கத்தைக் கொண்டுள்ளதை இன்றும் காணலாம்.

‘ஐந்து ஆறுகளின் நிலம்’ எனும் அர்த்தத்தைக் கொண்ட பஞ்சாப் என்பதே பாரசீக மொழி வழங்கிய அன்பளிப்பு தான். மேலும், “இந்து” என்ற பாரசீக வார்த்தையிலிருந்தே “ஹிந்தோஸ்தான்” என்ற பெயர் வந்தது, அதுவே சிந்து நதிக்கும் பெயரிடப்பட்டது.

மற்ற மக்கள் மற்றும் கலாசாரங்களுடன் பல நூற்றாண்டுகளாக இருந்த நல்லுறவின் மூலமாகவே, இந்திய நாகரிகம் வளர்ந்ததாக நம்பப்படுகிறது என, ‘இந்தியா இன் தி பெர்சியன் ஏஜ்’ எனும் தன் புத்தகத்தில் அமெரிக்க வரலாற்று ஆய்வாளர் ரிச்சர்ட் எம். ஈட்டன் எழுதியுள்ளார்.

Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

End of அதிகம் படிக்கப்பட்டது

அவர் எழுதுகையில், “11ம் நூற்றாண்டிலிருந்து பாரசீக வரலாற்று நூல்கள் மற்றும் பாரசீக மொழி பேசும் மக்கள் பரவி, மேற்கு, மத்திய மற்றும் தெற்காசியாவில் ஒரு நெருங்கிய வட்டத்தை உருவாக்கினர்.

இந்திய துணைக் கண்டத்தை பாரசீக மொழி அடைந்தது எப்படி?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பண்டைய பாரசீக நூல்கள் பல்வேறு விளக்கப்படங்களால் அலங்கரிக்கப்பட்டன.இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி வருவதற்கு நூற்றாண்டுகள் முன்பாகவே, இந்திய துணைக் கண்டத்தில் டெல்லி சுல்தானகம் மற்றும் முகலாய பேரரசு அழியாத தடத்தை விட்டுச் சென்றது. போரின் மூலம் அடைந்த வெற்றிகள் மூலமாக மட்டுமல்லாமல், கவிதைகள், காதல் கதைகள், கட்டடக்கலை மற்றும் உணவுகள் மூலமாகவும் அந்த தடம் ஏற்பட்டது.

டெல்லி சுல்தானகம் (1206 முதல் 1526 வரை), முகலாய காலம் (1526 முதல் 1857 வரை) மற்றும் பஞ்சாபில் பேரரசர் ரஞ்சித் சிங் (1799 முதல் 1849 வரை) ஆகியோரின் காலகட்டத்தில் அலுவல்பூர்வ பணிகளுக்கான மொழியாக பாரசீக மொழி இருந்தது.

பத்தாம் நூற்றாண்டின் இறுதியில் மற்றும் 11ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் துருக்கிய பேரரசின் வருகையின்போது பாரசீக மொழியின் தாக்கம் தொடங்கியதாக, சண்டிகரில் உள்ள பஞ்சாப் பல்கலைக்கழகத்தின் வரலாற்று துறையின் ஓய்வுபெற்ற பேரரசர் சுரிந்தர் சிங் விளக்குகிறார்.

சுரிந்தர் சிங் கூறுகையில், “பாரசீக மொழியின் பரவல் நிகழ்ந்த காலகட்டம் குறித்து நாம் பேசினால், அது 11ம் நூற்றாண்டு முதல் 18ம் நூற்றாண்டின் இடைப்பட்ட காலகட்டம் வரையிலான, துருக்கியர்கள் மற்றும் முகலாயர்களின் ஆட்சிக்காலத்தில் இருக்கும். துருக்கியர்கள், ஆப்கானியர்கள் மற்றும் முகலாயர்கள் அனைவரும் இன ரீதியாக வித்தியாசமானவர்களாக இருந்தாலும், கலாசார ரீதியாக அவர்கள் அனைவரும் பாரசீக மக்களே ஆவர்,” என்றார்.

“அந்த சமயங்களில் அங்கிருந்து கவிஞர்கள், அறிஞர்கள், சூஃபிக்கள், வணிகர்களும் இங்கு வந்தனர். இம்மக்கள் பெருமளவில் இங்கு இடம்பெயர்ந்தனர். இவர்கள், ஆப்கானிஸ்தான், மத்திய ஆசியா மற்றும் பாரசீகத்திலிருந்து வந்தனர். அவர்களில் பெரும்பாலானோர் இந்தியாவில் தங்கள் வேலைகளை அமைத்துக்கொண்டனர், அமைதியை விரும்புபவர்களாக அவர்கள் இருந்தனர்.” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஈட்டன் எழுதுகையில், “கைவினைஞர்கள், கூலிப்படை வீரர்கள், சூஃபி ஷேக்குகள், அடிமைகள், கவிஞர்கள், அறிஞர்கள், ராஜீய நிபுணர்கள், குடியேறிகள், யாத்ரீகர்கள், வணிகர்கள் ஆகியோர் கடல் மற்றும் தரை வழியாக பயணித்து இங்கு வந்தனர். அவர்கள், பாரசீக உலகத்தின் நோக்கத்தை விரிவுபடுத்தினர்.” என குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவை தாக்குவதற்கு ஆட்கள் வருவதற்கு நீண்ட காலம் முன்பாகவே, வணிகர்களின் இடம்பெயர்வு இருந்ததாக கூறும் வரலாற்று பேராசிரியர் சுமல் சித்து, கலாசாரம் மற்றும் மொழி பரிமாற்றத்தில் வணிகம் முக்கிய ஆதாரமாக இருப்பதாக கூறுகிறார்.

பட மூலாதாரம், Getty Images

பாரசீக உலகம் என்பது என்ன?

இரான் (பெர்சியா – இங்குதான் பாரசீக கலாசாரம் பிறந்தது), மத்திய ஆசியா (தற்போதைய உஸ்பெகிஸ்தான், தஜிகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான்), இந்தியா, பாகிஸ்தான் மற்றும் ஓட்டோமான் பேரரசு ஆகியவையே பாரசீக உலகம்.

அதாவது, வரலாற்று ரீதியாக பாரசீக மொழி, கலாசாரம் , கலை மற்றும் நிர்வாகத்தின் தாக்கத்தைக் கொண்ட பகுதிகள் இவை.

மத மற்றும் கலாசார சமூகங்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தி, அரசியல் கலாசாரத்தை ஊக்குவிக்கும் பொருட்டு, 1582ல் பாரசீக மொழியை அக்பர் அதிகாரபூர்வ மொழியாக அறிவித்ததையடுத்து, இதில் முக்கிய மாற்றம் நேர்ந்ததாக எழுதியுள்ளார் ஈட்டன்.

“சில தலைமுறைகள் காலத்திலேயே, பாரசீக மொழியை பேசும் அல்லது படிக்கும் மக்களுக்கான முக்கிய மையமாக இந்தியா உருவெடுத்தது,” என அவர் எழுதியுள்ளார்.

ஈட்டன் தன்னுடைய புத்தகத்தில், “1700க்குள் பாரசீக இலக்கியத்துக்கான உலகின் முன்னணி மையமாக இந்தியா இருந்திருக்கக்கூடும். இரானைவிட ஏழு மடங்கு அதிகமாக மக்கள் இந்தியாவில் பாரசீக மொழி பேசியதாக கணக்கிடப்பட்டது,” என எழுதியுள்ளார்.

இலக்கியம் மற்றும் மொழிகள் மீதான தாக்கம்

பட மூலாதாரம், Punit Barnala/BBC

படக்குறிப்பு, சூஃபி கவிஞர் புல்லேஷாபஞ்சாபி மற்றும் இந்திய இலக்கியங்களில் பாரசீக மொழி குறிப்பிடத்தக்க தாக்கத்தை செலுத்தியது, குறிப்பாக முகலாய ஆட்சிக்காலத்தில், இடைக்காலத்தில் அது பெரிதும் உணரப்பட்டது. இன்று இந்தியில் பொதுவாக புழக்கத்தில் உள்ள பல வார்த்தைகள், இந்தியாவில் பாரசீக மொழியின் தாக்கத்தை பிரதிபலிக்கின்றன.

இரானிய பிரதேசத்தை சேர்ந்த இந்த மொழியின் வழியாக, காதல் கதைகள் இந்திய துணைக் கண்டத்தை அடைந்தன. ஷிரி ஃபர்ஹாத், லைலா-மஜ்னு மற்றும் யூசுஃப்-ஸுலைக் ஆகியோரின் காதல் கதைகளை இந்தியர்கள் படிக்க ஆரம்பித்தனர்.

இதனிடையே, இந்திய சூஃபி கவிஞர்கள் மத்தியிலும் பாரசீக அறிஞர்கள் மற்றும் கவிஞர்கள் தாக்கத்தை செலுத்தியதாக கூறப்படுகிறது.

பஞ்சாபி மொழி முன்னாள் பேராசிரியரான சுக்தேவ் சிங் சிர்சா கூறுகையில், “ஒரு தேசம் மற்றொரு தேசத்தை ஆளும்போது, அதன் மீது அரசியல் ரீதியாக மட்டுமல்லாமல் அதன் கலாசாரம் மற்றும் வாழ்வியல் முறைகளின் மீது தாக்கத்தை செலுத்துகிறது. நீண்ட காலத்துக்கு பாரசீகம் நம் பிரதேசத்தின் அதிகாரபூர்வ மொழியாக இருந்தது, எனவே, அம்மொழி இலக்கியம் நம் மீது தாக்கம் செலுத்தியிருப்பது இயல்பு,” என்று தெரிவித்தார்.

பட மூலாதாரம், Punit Barnala/BBC

இந்தியா மற்றும் பாகிஸ்தான் பிரிவினைக்கு முன்பாக, பஞ்சாபி மொழியில் நிறைய சூஃபி கவிஞர்கள் இருந்தனர். குறிப்பாக, சுல்தான் பாஹு, வாரிஸ் ஷா, புல்லேஷா மற்றும் பாபா ஃபரித் போன்றோர், ஆண் – பெண் இடையேயான காதல் மற்றும் மனிதர்கள் – கடவுளுக்கு இடையேயான காதல் குறித்து எழுதியுள்ளனர்.

வாரிஸ் ஷா எழுதிய ஹீர்-ராஞ்சே காதல் கதை, பஞ்சாபி இலக்கியத்தின் தலைசிறந்த படைப்பாக கருதப்படுகிறது. பாரசீக சூஃபி சொற்களஞ்சியம் மற்றும் ஆன்மீக யோசனைகள் ஆகியவை புலே ஷாவின் (Bulleh Shah) சூஃபி கவிதைகளிலும் (Kafis), சுல்தான் பாஹுவின் சிஹ்ர்ஃபிஸ்களிலும் (Sihrfis) தெளிவாக தெரிகின்றன.

சுமைல் சித்து கூறுகையில், “பஞ்சாபி கதைகள் பாரசீக கதைகளின் கட்டமைப்பை அடிப்படையாகக் கொண்டது. பாரசீக கவிஞர் ஃபிர்தௌசியின் ஷாநாமாவை (Shahnama) படிக்கும்போது, கவிஞர் ஆவதற்கு ரூமி மற்றும் ஷேய்க் சாதி (Sheikh Saadi) ஆகியோரின் கவிதைகள் பாடத்திட்டம் போன்று இருப்பதைக் காட்டுகிறது.” என்றார்.

சுரிந்தர் சிங் கூறுகையில், “சிந்து நதி முதல் பிரம்மபுத்திரா வரையிலான பகுதிகளில் உள்ள உள்ளூர் மொழிகளுடன் பாரசீகம் ஒன்றோடொன்று தொடர்புகொள்கிறது. சீக்கிய குரு கிராந்த் சாஹிப்பின் கீர்த்தனைகள் பல மொழிகளில் உள்ளன, அவற்றில் பல பாரசீக வார்த்தைகள் அடங்கியுள்ளன.” என்கிறார்.

பேரரசர் ரஞ்சித் சிங்கின் ஆட்சிக் காலத்தில் பாரசீகம் அதிகாரபூர்வ மொழியாக இருந்தது. சீக்கியர்களின் பத்தாவது குருவாக இருந்த பாரசீக கவிஞரும் அறிஞருமான கோபிந்த் சிங், முகலாயர்களுக்கு எதிராக சண்டையிட்டு, 1705ல் முகலாய அரசர் ஔரங்கசீப்புக்கு பாரசீக மொழியில் ‘ஸாஃபர்நாமா’ என அறியப்படும் கடிதம் எழுதியுள்ளார்.

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.பாரசீக மொழியில் எழுதத் தொடங்கிய இந்து எழுத்தாளர் யார்?

இந்த காலகட்டத்தில் அமீர் குஸ்ரௌ மற்றும் அபுல் ஃபஸ்ல் போன்ற சிறந்த பாரசீக கவிஞர்கள் இருந்தபோதிலும், இந்து மதத்தைச் சேர்ந்த பலரும் கூட பாரசீக மொழியில் சிறந்து விளங்கினர்.

அவர்களுள் பாய் நாந்த் லால், சந்திரபான் பிரஹ்மன், சுஜன் ராய் பந்தாரி மற்றும் அனந்ற்றாம் முக்லிஸ் ஆகியோர் பெரிதும் அறியப்படுகின்றனர்.

பேராசிரியர் சுரிந்தர் சிங் கூறுகையில், “முகலாய அரசவைகளில் பணியாற்றிய இந்துக்கள் பாரசீக மொழியில் சமய நூல்களை எழுதியுள்ளனர், கவிதைகளை எழுதியுள்ளனர்.” என்றார்.

இந்திய கட்டடக் கலை மீதான தாக்கம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, டெல்லி ஜமா மசூதிபாரசீக கட்டடக் கலை அதன் வடிவம், கட்டமைப்பு மற்றும் அலங்காரம் என, இந்திய துணைக் கண்டத்தில் பெரும் அடையாளத்தை விட்டுச் சென்றுள்ளது.

பாரசீக கலையின் தாக்கத்தால் கட்டப்பட்ட பெரிய குவிமாடங்கள், மெல்லிய மினாராக்கள் ஆகியவை இந்திய கட்டடக்கலையில் பிரபலமானது. ஹுமாயூன் கல்லறை, தாஜ் மஹால் மற்றும் காஷ்மீரின் ஷாலிமார் தோட்டங்கள் ஆகியவற்றை குறிப்பிடத்தக்க உதாரணங்களாக கூறலாம்.

பேராசிரியர் சுக்தேவ் சிங் கூறுகையில், “பஞ்சாபில் காணப்படும் குருத்வாராக்கள் மற்றும் மசூதிகளில் காணப்படும் கல்லறைகள் (தாஜ் மஹால் உட்பட) பலவும் பாரசீக கட்டடக்கலையை பின்பற்றி கட்டப்பட்டவையே. மசூதியில் உள்ள பச்சைக் கொடிகளும் இந்த நாகரிகத்திலிருந்து கிடைத்த அன்பளிப்பே.” என்றார்.

சுரிந்தர் சிங் கூறுகையில், “தாஜ் மஹால் மற்றும் டெல்லியின் ஜமா மஸ்ஜித் ஆகியவை ஆட்சியாளர்களால் கட்டப்பட்டவை. ஆனால், பஞ்சாபில் உள்ள நூர் மஹால் மற்றும் துராஹே போன்ற சாலைகளின் அருகே உள்ள விடுதிகளும் இதே போன்று கட்டப்பட்டுள்ளன. மேலும் பலவித ஓவியங்கள், ஓவியர்கள் மற்றும் பொறியாளர்களும் இந்தியாவுக்கு வந்தனர்.” என கூறினார்.

இந்திய உணவின் மீது பாரசீக தாக்கம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, தினசரி உணவான பிரியாணி, முகலாய ரசனையின் தேர்ச்சியைப் பிரதிபலிக்கிறது.பாரசீக கலாசாரம் இந்திய உணவுகளில் குறிப்பாக முகலாய உணவுகளில் தாக்கம் செலுத்தியது. முகலாய மன்னர்கள் பாரசீக உணவுகள் மற்றும் சமைக்கும் நுட்பங்களை இந்தியாவில் பிரபலப்படுத்தினர், உள்ளூர் பொருட்களுடன் முகலாய உணவுகள் உருவாக்கப்பட்டன.

பிரியாணி, புலாவ், கெபாப், காய்ந்த பழங்கள் மற்றும் மசாலா பொருட்களும் இவற்றில் அடக்கம். எனினும், பல சடங்குகள் மற்றும் வழக்கங்கள் இரு கலாசாரங்களிலும் ஒன்றாகவே இருந்தன.

சண்டிகரில் உள்ள பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் பாரசீக பேராசிரியரான ஸுல்ஃபிகர் அலி, டெஹ்ரான் பல்கலைக்கழகத்தில் அம்மொழியில் முனைவர் பட்டம் பெற்றவர். அவர் கூறுகையில், “வரலாற்றுரீதியாக, இரு கலாசாரங்களில் உள்ளவர்களும் ஆரிய சமூகத்தைச் சேர்ந்தவர்கள். அதனால், இந்தியர்கள் மற்றும் இரானியர்களின் கலாசாரம் மற்றும் மொழி ஒரேமாதிரியாக இருக்கும்.” என்றார்.

“உணவு மற்றும் திருமண சடங்குகள் ஒரே போன்று இருக்கும். பாடல்கள் இங்கும் பாடப்படுகின்றன, அங்கேயும் பாடப்படுகின்றன. ஒருகாலத்தில் இரு நாடுகளில் உள்ளவர்களும் தங்கள் திருமணங்களின் போது மருதாணி பூசினர். ஆனால், தற்போது இரானில் உள்ள பெண்கள் திருமணங்களின் போது மருதாணி பூசிக்கொள்வதில்லை.”

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, 1971 ஆம் ஆண்டு தெஹ்ரானில் கட்டப்பட்ட இந்தக் கட்டடம், இரானிய பாரம்பரியத்தை பிரதிபலிக்கிறது.இரானியர்களும் இந்தியாவிடமிருந்து கற்றுக்கொண்டனரா?

இந்திய மொழிகள் மற்றும் கலாசாரமும் இரான் உட்பட மத்திய ஆசியாவில் உள்ள மற்ற நாகரிகங்கள் மத்தியில் தாக்கம் செலுத்தியுள்ளன. பாரசீக மொழி சமஸ்கிருதத்துடன் தொடர்பை வளர்த்துக்கொண்டது.

பல்வேறு பகுதிகளுக்கு பயணித்த ஒரே மொழி சமஸ்கிருதம் மட்டுமல்ல என ஈட்டன் எழுதியுள்ளார். “”சமஸ்கிருத நூல்களின் பரவலும் அவற்றைச் சுமந்த மக்களும் பகிரப்பட்ட மரபுகள் மற்றும் பாணிகளின் வலையமைப்பை உருவாக்கினர். அழகியல், அரசியல், அரச நல்லொழுக்கம், கல்வி மற்றும் இறையாண்மை ஆகியவற்றின் உலகளாவிய தன்மை குறித்து இவை ஒத்த கூறுக்களை கொண்டுள்ளன.” என்றார்.

ஸுல்ஃபிகர் கூறுகையில், “இந்தியா மற்றும் இரான் இடையே சமஸ்கிருதம் ஒருகாலத்தில் பாலமாக திகழ்ந்தது. சமஸ்கிருதத்தில் இருந்து பல விஷயங்கள் பராசீகத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது, அவை பாரசீக இலக்கியத்தில் பாடத்திட்டமாக கற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது.” என்றார்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு