“அணு குண்டுக்கான யுரேனிய செறிவூட்டலை சிலமாதங்களில் இரான் தொடங்கலாம்” – எச்சரிக்கும் ஐ.நா.வின் அணுசக்தி அமைப்பு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஐஏஇஏ உடன் வேலை செய்ய இரான் மறுத்துள்ள போதிலும் அந்நாட்டுடன் தன்னால் பேச்சுவார்த்தை நடத்த முடியும் என்கிற நம்பிக்கையுள்ளது என க்ரோஸ்ஸி தெரிவித்துள்ளார்.எழுதியவர், ஸ்டூவர்ட் லாவ்பதவி, பிபிசி நியூஸ்11 நிமிடங்களுக்கு முன்னர்

இரான் சில மாதங்களில் அணுகுண்டு தயாரிப்பதற்கான யுரேனியத்தைச் செறிவூட்டும் திறனைக் கொண்டுள்ளது என ஐ.நா அணுசக்தி கண்காணிப்பகத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச அணுசக்தி முகமையின் (ஐஏஇஏ) தலைவர் ரஃபேல் க்ரோஸ்ஸி கடந்த வாரம் மூன்று இரானிய நிலைகள் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல் தீவிரமான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளதே தவிர முழுமையான பாதிப்புகளை ஏற்படுத்தவில்லை எனத் தெரிவித்தார். இது இரானின் அணுசக்தி மையங்கள் “முழுமையாக அழிக்கப்பட்டன” என்கிற டிரம்ப்பின் கூற்றுக்கு முரணாக உள்ளது.

“அனைத்தும் மறைந்துவிட்டன என்றும் அங்கு எதுவுமே இல்லை எனவும் யாருமே வெளிப்படையாக கூற முடியாது” என சனிக்கிழமையன்று க்ரோஸ்ஸி தெரிவித்தார்.

இரான் அணு ஆயுத தயாரிப்பை நெருங்கிவிட்டது எனக்கூறி கடந்த ஜூன் 13ம் தேதி அந்நாட்டின் அணுசக்தி மற்றும் ராணுவ நிலைகளை இஸ்ரேல் தாக்கியது. அதன் பின்னர் இந்த மோதலில் இணைந்த அமெரிக்கா ஃபோர்டோ, நதான்ஸ் மற்றும் இஸ்ஃபஷான் ஆகிய இரானின் அணுசக்தி நிலைகள் மீது குண்டுகளை வீசியது.

அப்போதிலிருந்து பாதிப்பின் உண்மையான அளவு என்னவென்பது பற்றி தெளிவு இல்லை. “இன்னும் சில மாதங்களில் இரான் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை தயாரிக்கக்கூடும்” என க்ரோஸ்ஸி சனியன்று சிபிஎஸ் நியூஸிடம் (பிபிசியின் அமெரிக்க ஊடக கூட்டாளி) தெரிவித்தார்.

Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

End of அதிகம் படிக்கப்பட்டது

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஃபோர்டோஇரான் தற்போதும் தொழில்துறை மற்றும் தொழில்நுட்ப திறன்களைக் கொண்டுள்ளது. எனவே அவர்கள் விரும்பினால், அவர்களால் மீண்டும் தொடங்க முடியும் என அவர் தெரிவித்தார்

இரானின் அணுசக்தி திறன்கள் தொடரக்கூடும் என கூறும் முதல் அமைப்பு ஐஏஇஏ அல்ல. இந்த வாரத்தின் தொடக்கத்தில் கசிந்த பெண்டகனின் முதல்கட்ட ஆய்வு, அமெரிக்க தாக்குதல்கள் இரானின் அணுசக்தி திட்டத்தை சில மாதங்கள் மட்டுமே பின் தள்ளி வைத்துள்ளது எனத் தெரிவித்துள்ளது.

இது சாத்தியமானது தான். எனினும், எதிர்கால உளவு அறிக்கைகள் இந்த நிலைகளுக்கு ஏற்பட்டுள்ள வேறு விதமான பாதிப்புகள் பற்றிய கூடுதல் தகவல்களை உள்ளடக்கலாம்.

இதற்கு ஆக்ரோஷமாக பதிலளித்த டிரம்ப் இரானின் அணுசக்தி நிலைகள் ‘முழுமையாக அழிக்கப்பட்டன’ என்றும் ஊடகங்கள் வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான ராணுவத் தாக்குதலை மட்டுப்படுத்த முயற்சிக்கின்றன என்றும் குற்றம்சாட்டினார்.

இப்போதைக்கு இரானும் இஸ்ரேலும் போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளன.

ஆனால் இரான் கவலையளிக்கக்கூடிய அளவிற்கு யுரேனியத்தை செறிவூட்டுகிறது என உளவுத்துறை கண்டறிந்தால் மீண்டும் அந்நாட்டின் மீது குண்டுவீசுவதைப் பற்றி நிச்சயம் யோசிப்பேன் என டிரம்ப் தெரிவித்துள்ளார்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இஸ்ஃபஹான்இஸ்ரேல் போர்நிறுத்தத்திற்குக் கட்டுப்படும் என இரானுக்கு நம்பிக்கை இல்லை என அந்நாட்டின் பாதுகாப்பு படைகளின் தலைமை தளபதி அப்தொல்ல்ர்ஹீம் மௌசவி ஞாயிறு அன்று தெரிவித்துள்ளார்.

“நாங்கள் போரைத் தொடங்கவில்லை, ஆனால் எங்களின் முழு சக்தியையும் பயன்படுத்தி தாக்குதல் நடத்தியவருக்கு பதிலடி கொடுத்துள்ளோம். எதிரி போர்நிறுத்தம் உள்ளிட்ட தனது உத்திரவாதங்களுக்குக் கட்டுப்படுவார் என தனக்கு சந்தேகம் இருப்பதால், மீண்டும் தாக்கினால் முழு படைபலத்துடன் பதிலடி கொடுக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்” என அவர் கூறியதாக இரான் அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இரான் மறுபுறம் பாதிப்புகள் பற்றி முரண்பாடான தகவல்களை வெளியிட்டுள்ளது.

வியாழன் அன்று நிகழ்த்திய உரையில் இரான் அதிஉயர் தலைவர் ஆயதுல்லா அலி காமனெயி அமெரிக்க தாக்குதல்கள் எதையுமே சாதிக்கவில்லை எனக் கூறியிருந்தார். ஆனால் இரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அகாக்சி “அதிகமான மற்றும் தீவிரமான” பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது எனக் கூறியுள்ளார்.

ஐஏஇஏ உடன் இரான் ஏற்கெனவே நலிவடைந்த உறவைக் கொண்டுள்ளது. கடந்த புதன்கிழமை அணுசக்தி கண்காணிப்பகமான ஐஏஇஏ இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா பக்கம் சாய்வதாக குற்றம்சாட்டி அதனுடனான ஒத்துழைப்பை ரத்து செய்யும் மசோதா இரான் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பிறகு நிலைமை மோசமடைந்துள்ளது.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, அப்பாஸ் அகாக்சிபாதிக்கப்பட்ட இடங்களை ஆய்வு செய்ய வேண்டும் என்கிற ஐஏஇஏவின் கோரிக்கையை இரான் நிராகரித்துள்ளது. “பாதுகாப்பு என்கிற போர்வையில் குண்டு வீசப்பட்ட இடங்களுக்கு செல்ல வேண்டும் என க்ரோஸ்ஸி வலியுறுத்துவது அர்த்தமற்றது மற்றும் தவறான நோக்கம் இருப்பதற்கான சாத்தியமும் உள்ளது” என வெள்ளியன்று எக்ஸ் பதிவில் அராக்சி தெரிவித்துள்ளார்.

கடந்த மாதம் இரான் 20 ஆண்டுகளில் முதல் முறையாக தனது உத்திரவாதங்களை மீறியுள்ளது என ஐஏஇஏ கண்டறிந்த நிலையில் இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இரானைத் தாக்கியது.

இரான் தனது அணுசக்தி திட்டம் அமைதியானது என்றும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கானது என்றும் தொடர்ந்து தெரிவித்து வருகிறது.

ஐஏஇஏ உடன் வேலை செய்ய இரான் மறுத்துள்ள போதிலும் அந்நாட்டுடன் தன்னால் பேச்சுவார்த்தை நடத்த முடியும் என்கிற நம்பிக்கையுள்ளது என க்ரோஸ்ஸி தெரிவித்துள்ளார்.

“நான் இரானுடன் அமர்ந்து இதை என்னவென்று பார்க்க வேண்டும். ஏனென்றால் இறுதியில் ராணுவ தாக்குதல்களுக்குப் பிறகு நீடித்த தீர்வு வேண்டும், அவை ராஜாங்க ரீதியான ஒன்றாகத் தான் இருக்க முடியும்” என அவர் தெரிவித்துள்ளார்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.2015ம் ஆண்டு உலக நாடுகளுடன் மேற்கொண்ட ஒப்பந்தத்தின்படி இரான் 3.67% (வணிக அனுமின் நிலையங்களை இயக்குவதற்கான எரிவாயுவிற்கு தேவையான அளவு) என்கிற அளவிற்கு அதிகமாக யுரேனியத்தை செறிவூட்ட அனுமதி இல்லை. அது போக ஃபோர்டோ ஆலையில் 15 ஆண்டுகளுக்கு எந்த விதமான செறிவூட்டல் பணிகள் மேற்கொள்ள அனுமதியில்லை.

எனினும் டிரம்ப் 2018ம் ஆண்டு தனது முதல் ஆட்சிக் காலத்தில் இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்து அமெரிக்க பொருளாதாரத் தடைகளை மீண்டும் அமல்படுத்தினார்.

இதற்குப் பதிலடியாக இரான் செறிவூட்டல் தொடர்பான கட்டுப்பாடுகளை மீறியது. ஃபோர்டோ ஆலையில் 2021-ல் இருந்து செறிவூட்டலைத் தொடங்கியது, ஒன்பது அணுகுண்டுகளைத் தயாரிக்க தேவையான 60% செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை இரான் குவித்துள்ளது என ஐஏஇஏ தெரிவித்துள்ளது.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு