வலி வடக்கு பலாலி இராஜேஸ்வரி அம்மன் ஆலயம் எதிர்வரும் செவ்வாய்க்கிழமைக்குள் மக்கள் சுதந்திரமாக சென்று வழிபட அனுமதிக்கப்படுவார்கள் என யாழ்ப்பாண மாவட்டநாடாளுமன்ற உறுப்பினர் கருணைநாதன் இளங்குமரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் சனிக்கிழமை (28.06.25) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே இதனை தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

பலாலி இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்திற்கு மக்கள் சுதந்திரமாக சென்று வழிபட அனுமதியளிக்கப்படும்.

குறித்த ஆலயத்திற்கு சென்று விடுவிப்பதற்கான நடவடிக்கையை எடுத்திருந்தேன். அது நல்லெண்ண சமிக்ஞையாக யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் எடுக்கப்பட்ட முடிவாகும். அதனூடாக அதை கொழும்பு இராணுவ தலைமையகத்துக்கும் அறிவிக்கப்பட்டு தற்காலிகமாக விடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இது தொடர்பில் இராணுவத்திடம் கேட்ட போது, உத்தியோகபூர்வமாக கொழும்பில் உள்ள இராணுவத் தலைமையகத்தில் இருந்து எழுத்து மூலம் அனுமதி வரவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

எதிர்வரும் செவ்வாய்க்கிழமைக்குள் எழுத்து மூலமாக ஆவணம் கிடைத்ததும் உத்தியோகபூர்வமாக விடுவிக்கப்படும் – என மேலும் தெரிவித்தார்.

பலாலி இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்திற்கு செல்ல மீண்டும் தடை!

பலாலி இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்திற்கு 35 வருடங்களின் பின்னர், கட்டுப்பாடுகள் இன்றி வழிபட நேற்று முன்தினம் (27.06.25) வெள்ளிக்கிழமை இராணுவத்தினர் அனுமதித்திருந்த நிலையில் நேற்றைய தினம் சனிக்கிழமை (28.06.25) மீள ஆலயத்திற்கு செல்ல அனுமதி மறுத்துள்ளனர்.

உள்நாட்டு யுத்தம் காரணமாக கடந்த 1990ஆம் ஆண்டு ஜூன் மாதம் 15ஆம் திகதி பலாலியில் இருந்து மக்கள் வெளியேறி இருந்தனர். அதனை தொடர்ந்து அப்பகுதி இராணுவ உயர் பாதுகாப்பு வலயமாக காணப்பட்டது.

கடந்த 35 வருட காலமாக உயர் பாதுகாப்பு வலயத்தினுள் உள்ள ஆலயத்திற்கு கடந்த 06 மாத காலத்திற்கு முதலே சுதந்திரமாக சென்று வழிபட அனுமதி வழங்கப்படும் என இராணுவத்தினர் அறிவித்து இருந்த போதிலும் , இதுவரை காலமும் கடுமையான கட்டுப்பாடுகளுடன் , விசேட தினங்களில் மாத்திரம் ஆலயத்திற்கு செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், ஆலயத்திற்கு மாத்திரம் செல்வதற்கு என உயர் பாதுகாப்பு வலயத்தினுள் பிரத்தியோக பாதை அமைக்கப்பட்டு , குறித்த பாதை ஊடாக நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை முதல் மக்கள் ஆலயத்திற்கு மாத்திரம் சென்று வழிபாட்டு திரும்ப இராணுவத்தினர் அனுமதி வழங்கி இருந்தனர்.

இந்நிலையில் இன்றைய தினம் சனிக்கிழமை ஆலயத்திற்கு செல்லும் பிரத்தியோக பாதையில் இராணுவத்தினர் மூடி முட்கம்பி வேலி அமைத்திருந்ததுடன், இரு இராணுவத்தினர் கடமையிலும் ஈடுபடுத்தபட்டிருந்தனர்.

ஆலயத்திற்கு இன்றைய தினம் சனிக்கிழமை வழிபட சென்ற மக்கள் இராணுவத்தினர் ஆலயத்திற்கு செல்ல அனுமதிக்காததால் முட்கம்பி முன்பாக தேங்காய் உடைத்து கற்பூரம் கொளுத்தி பூப்போட்டு வழிப்பட்டனர்.