Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
“தெளிவில்லாத கோடுகள், தேய்ந்து போன விமான டயர்கள்” : டிஜிசிஏ அறிக்கை பற்றி விமானிகள் என்ன சொல்கிறார்கள்?
பட மூலாதாரம், Getty Images
எழுதியவர், இஷாத்ரிதா லாஹிரிபதவி, பிபிசி நிருபர்46 நிமிடங்களுக்கு முன்னர்
ஜூன் 26, 2025 அன்று சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) டெல்லி மற்றும் மும்பை உட்பட நாட்டில் உள்ள பல்வேறு முக்கிய விமான நிலையங்களை ஆய்வு செய்ததாகக் கூறி அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
ஜூன் 12 அன்று ஆமதாபாத்தில் நடத்த விமான விபத்திற்குப் பிறகு இந்தத் தணிக்கை தொடங்கியது.
அந்த அறிக்கையில் எந்த விமான நிலையம் அல்லது விமான நிறுவனத்தின் பெயரும் குறிப்பிடப்படவில்லை என்றாலும் இந்திய விமான நிலையங்களில் ஏற்பட்டுள்ள பாதுகாப்பு விதிகளில் ஏற்பட்டுள்ள தவறுகள் மற்றும் மீறல்கள் அதில் குறிப்பிடப்பட்டுள்ளன.
ஆமதாபாத் விமான விபத்துக்குப் பிறகு விமானத் துறையில் ஆய்வு மற்றும் விசாரணைக்கான தேவைகள் அதிகரித்துள்ளன.
கடந்த சில தினங்களுக்கு முன்பு ஏர் இந்தியா நிறுவனம் விமான நேரம் மற்றும் பணியாளர்களின் வேலை நேரம் தொடர்பான விதிகளைத் தொடர்ந்து மீறியதாகக் கூறி நடவடிக்கை எடுத்துள்ளது.
Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading
அதிகம் படிக்கப்பட்டது
End of அதிகம் படிக்கப்பட்டது
இதற்காக மூன்று அதிகாரிகளை பணியில் இருந்து நீக்குமாறு ஏர் இந்தியாவிடம் டிஜிசிஏ கூறியுள்ளது.
இதனைத் தொடர்ந்து, ஏர் இந்தியா நிறுவனம் அதன் ஒருங்கிணைந்த இயக்கங்கள் கட்டுப்பாட்டு மையம் (ஐஒசிசி) இனி அதன் தலைமை இயக்க அதிகாரியின் (சிஒஒ) நேரடி கட்டுப்பாட்டில் இருக்கும் எனத் தெரிவித்துள்ளது.
ஐஒசிசி என்பது ஒரு விமான நிறுவனத்தின் முக்கிய அங்கம் ஆகும். இது பாதுகாப்பு மற்றும் விமானங்களின் தடையில்லா இயக்கம் ஆகியவற்றை உறுதி செய்யும். ஒரு விமான நிறுவனத்தில் இந்த மையம் தான் நிகழ் நேர திட்டமிடல், கண்காணிப்பு மற்றும் இயக்கம் தொடர்பான அனைத்து அம்சங்களையும் நிர்வகிப்பதற்கு பொறுப்பானது ஆகும்.
இவை விமானங்கள், விமானிகள் மற்றும் விமானப் பணியாளர்கள் மற்றும் அவர்களின் ரோஸ்டர்கள் தொடர்பான விவகாரங்களைக் கண்காணிக்கும் நிறுவனத்தின் இயக்கங்கள் துறையின் கீழ் வருகிறது.
டிஜிசிஏவின் சமீபத்திய நடவடிக்கைகளைத் தொடர்ந்து அதன் அறிக்கையைப் புரிந்து கொள்ள பிபிசி பல தொழிற்சார் விமானிகள் மற்றும் வான்வழி வல்லுநர்களிடம் பேசியது.
டிஜிசிஏ அறிக்கையில் என்ன உள்ளது?
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, விமானத்தின் அமைப்பில் கண்டறியப்பட்ட குறைகள் லாக் புக்கில் பதிவு செய்யப்படவில்லை என டிஜிசிஏ தெரிவித்துள்ளது.விமான தொடர்புடைய பல முக்கிய விஷயங்கள் தணிக்கையில் சோதனை செய்யப்பட்டதாக டிஜிசிஏ தெரிவித்துள்ளது.
இவை விமானங்களின் இயக்கம், பாதுகாப்பு, தொடர்பு அமைப்புகள் மற்றும் விமான புறப்பாடுக்கு முன்பாக விமானியின் மருத்துவ பரிசோதனை ஆகியவற்றை உள்ளடக்கும்.
இதில் தெளிவில்லாத விமான ஓடுதளத்தில் கோடுகள் தொடங்கி மூன்று ஆண்டுகளாக தரவுகளை சரியாகப் பதிவேற்றாதது வரை டிஜிசிஏ பல குறைகளைக் கண்டறிந்துள்ளது.
அதில் ஒரு விமானம் தேய்ந்த டயர்கள் இருந்ததால் புறப்படுவதற்கு முன்பாக ரத்து செய்யப்பட்டது.
ஏற்கெனவே கண்டறியப்பட்ட குறைகள் விமானங்களில் தொடர்ந்து அடையாளம் காணப்பட்டதாக இந்த ஆவணம் பதிவு செய்துள்ளது. மோசமான கண்காணிப்பு மற்றும் குறைகளைக் களைவதில் போதாமை ஆகியவை குறிப்பிட்டு காட்டப்பட்டுள்ளது.
“பராமரிப்பின் போது விமான பராமரிப்பு பொறியாளர் (ஏஎம்இ) விமான பராமரிப்பு கையேட்டின் படி (ஏஎம்எம்) போதிஒய பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகளை எடுக்கவில்லை. சில இடங்களில் பழுது வேலைகளில் ஏம்இ ஈடுபடுத்தப்படவே இல்லை. விமானத்தின் அமைப்பில் கண்டறியப்பட்ட குறைகள் லாக் புக்கில் பதிவு செய்யப்படவில்லை” என டிஜிசிஏ தெரிவித்துள்ளது.
ஓடுதளத்தில் காணப்படும் விலங்குகள்
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, ஓடுதளத்தின் நடுவில் உள்ள கோடு விமானம் தரையிறங்க உதவியாக இருக்கிறது.வெவ்வேறு விமான நிறுவனங்களுக்கு பணியாற்றும் மூன்று விமானிகளிடம் டிஜிசிஏ அறிக்கையை பிபிசி பகிர்ந்தது.
அனைத்து விமானிகளும் அவர்கள் வேலை செய்யும் நிறுவனங்களின் ஊடக கொள்கைக்கு கட்டுப்பட்டவர்கள். இதனால் பெயரைக் குறிப்பிடாமல் அவர்கள் பிபிசியிடம் பேசினர்.
நேரத்திற்குள் பயணத்தை முடிக்க வேண்டும் மற்றும் அடுத்த பயணத்திற்கு தயாராவதற்கு வழங்கப்படும் குறுகிய நேரம் (டர்ன் அரௌண்ட்) போன்றவை தான் ஏஎம்இயிடம் இருந்து வரும் தொழில்நுட்ப சிக்கல்களை முறையாக கையாள்வதை கடினமாக்குகிறது என ஒரு விமானி தெரிவிக்கிறார்.
மேலும் அவர், “பொறியாளர் கடைசி நேரத்தில் ஒரு குறையை கண்டுபிடிக்கிறார் என்றால் விமானம் பறப்பதற்கு பாதுகாப்பானதா இல்லையா என்பதை முடிவு செய்வது கடினமாகிறது.” என்றார்.
குறைவான டர்ன் அரௌண்ட் நேரத்தால் பராமரிப்புக்கு போதிய நேரம் இருப்பதில்லை என விமானி தெரிவிக்கிறார். இத்தகைய சூழலில் பொறியாளர் பராமரிப்பு விதிகளை கடைசி நேரத்தில் செயல்படுத்த வேண்டியதாகிறது.
பயணம் பாதிக்கப்பட்டுவிடக்கூடாது என்பதற்காக விமானத்தின் எந்த சாதனங்கள் அல்லது பகுதிகள் இல்லாமல் பறக்கலாம் என்பதை இந்தக் கையேடு சொல்கிறது
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.”ஒரு சிக்கலான அமைப்பு மோசமானால் அதனால் என்னென்ன விளைவுகள் ஏற்படும் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். உதாரத்திற்கு பேக்அப் அமைப்பும் பழுதானால் என்ன செய்வது? இது வான்வெளி மற்றும் வானிலையின் நிலையையும் பொருத்தது. நேர அழுத்தமும் சூழ்நிலையை எங்களுக்கு மேலும் கடினமாக்குகிறது. எங்களால் அனைத்திற்கும் கவனம் செலுத்த முடியாது.” என்று பிபிசியிடம் தெரிவித்தார்
மற்றுமொரு விமானி அந்த அறிக்கையில் எழுப்பப்பட்ட ஓடுதளத்தில் தெளிவற்ற கோடு தொடர்பான பிரச்சனையே மீண்டும் எழுப்பினார். அவரின் பத்து ஆண்டு கால அனுபவத்தில் ஓடுதளங்களில், அதிலும் குறிப்பான இரண்டாம் நிலை நகரங்களில் வேறு பல பிரச்னைகளைச் சந்தித்ததாகவும் கூறுகிறார்.
“இந்த விஷயங்கள் பற்றி பல வருடங்களாக நாம் அறிந்திருந்தோம். ஓடுதளத்தின் மத்திய கோடு விளக்குகள் சரியாக வேலை செய்வதில்லை. நாங்கள் ஓடுதளத்திற்கு வெளியே சென்றால் மரங்கள் மற்றும் புற்களால் அந்த குறியீடுகள் தெளிவாகத் தெரிவதில்லை. புற்கள் சரியான நேரத்தில் வெட்டப்படுவதில்லை” என அந்த விமானி கூறுகிறார்.
மேலும் அவர், “விமான ஓடுதளத்தில் பள்ளங்கள் உள்ள விமான நிலையங்களுக்கு நான் சென்றுள்ளேன். விலங்குகளும் அங்கு உலாவி வரும், சமயங்களில் மயில், மான், மாடு கூட உலாவக் கண்டுள்ளேன்” என்றார்.
விமானிகளும் விமானப் பணியாளர்களும் ஓய்வெடுக்க நேரம் கிடைப்பதில்லை என மூன்றாவது விமானி கவலை தெரிவித்துள்ளார். சில சமயங்களில் அவர்கள் ஒரே நாளில் ஐந்து செக்டார்கள் பறக்க வேண்டும் எனச் சொல்லப்படுகிறது என்று அவர் தெரிவித்தார். ஒரு செக்டார் என்றார் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு பறப்பதைக் குறிக்கும். திரும்பிச் செல்வது ரிட்டர்ன் செக்டார் என்று அழைக்கப்படுகிறது.
“நீங்கள் மாலை 4 மணிக்கு பயணத்தைத் தொடங்குகிறீர்கள் என கற்பனை செய்து கொள்ளுங்கள், ஆனால் விமானி மற்றும் விமான பணிக்குழு காலை 4 மணியில் இருந்து வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் ஏன் சிரிக்க மறுக்கிறார்கள் என நீங்கள் யோசிக்கலாம், ஆனால் அவர்கள் மிகவும் சோர்வாக இருந்திருக்கக்கூடும்” என அவர் தெரிவித்தார்.
சோதனைகள் முறையாக செய்யப்பட வேண்டும்
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, எல்லை தொடர்பான தரவுகள் சில விமான நிலையங்களில் கடந்த மூன்று ஆண்டுகளாக பதிவேற்றம் செய்யப்படவில்லை என டிஜிசிஏ தெரிவித்துள்ளதுடிஜிசிஏ முறையாக பரிசோதனைகளை நடத்த வேண்டும் என வான்வெளி வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
ஒவ்வொரு விமான நிலையத்தைச் சுற்றியும் அப்ஸ்ட்ரக்ஷன் லிமிட் என ஒன்று உள்ளது. இந்த எல்லைக்கு உள்ளாக எந்த விதமான கட்டுமானம் மற்றும் இதர பணிகளை மேற்கொள்ள அனுமதி பெறப்பட வேண்டும்.
இவை விமான நிலையங்களைச் சுற்றி அமைந்துள்ள பகுதிகள் ஆகும். விமானம் புறப்பட்டுச் செல்லவும் பாதுகாப்பாக தரையிறங்குவதற்கு விமானங்களில் தடங்கலற்ற இயக்கத்தை உறுதி செய்ய இந்தப் பகுதி தெளிவாக இருக்க வேண்டும்.
இந்த எல்லை தொடர்பான தரவுகள் சில விமான நிலையங்களில் கடந்த மூன்று ஆண்டுகளாக பதிவேற்றம் செய்யப்படவில்லை என டிஜிசிஏ தெரிவித்துள்ளது. விமான நிலையங்களைச் சுற்றி பல புதிய கட்டடங்கள் கட்டப்பட்டுள்ள நிலையில் எந்த சர்வேயும் மேற்கொள்ளப்படவில்லை.
“இவை ஒரு நாளில் நடக்காது. பரிசோதனைகள் முறையாக மேற்கொள்ளப்பட வேண்டும். ஒரு வாரத்தில் விமான நிலையத்திற்கு அருகே ஒரு கட்டடம் கட்டப்பட்டுள்ளது. அப்போது டிஜிசிஏ எங்கு சென்றது?” எனக் கேட்கிறார் விமானத் துறை வல்லுநர் சஞ்சய் லஜர்.
ஓடுதளங்களைச் சுற்றி உள்ள கட்டடங்கள் பற்றி நீண்ட காலமாக விமானிகள் புகார் அளித்து வருகிறார்கள் எனக் கூறுகிறார் முன்னாள் விமானியும் வல்லுநருமான கேப்டன் எம்.ஆர்.வாடியா
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, விமான விபத்தில் சுமார் 279 பேர் கொல்லப்பட்டனர்.”ஓடுதளத்தின் மத்தியக் கோடு தெளிவாக இருக்க வேண்டும், குறிப்பாக ஜம்போ ஜெட் போன்ற விமானங்கள் புறப்படுகின்றபோது. இந்தக் கோடுகள் சட்டப்பூர்வமாகப் பின்பற்ற வேண்டிய வழிகாட்டும் கோடுகள்” என்றார்.
இந்த அறிக்கை மங்கலான ஓடுதளங்கள் மற்றும் தேய்ந்து போன டயர்களைவிடவும் பல தீவிரமான குறைகளைக் கண்டறிந்துள்ளதாக முன்னாள் விமானி மோகன் ரங்கநாதன் தெரிவிக்கிறார்.
சில விமானங்களின் விமானிகளுக்கு அவர்கள் வழக்கமாக பறக்கும் விமானத்தை விட வேறு விமானத்தின் சிமுலேட்டரில் தான் பயிற்சி அளிக்கப்படுகிறது என டிஜிசிஏ தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
“விமானத்துடன் ஒத்துப்போகாத சிமுலேட்டரைப் பயன்படுத்துவது தான் மிகவும் மோசமான தவறு. சிமுலேட்டரில் நடத்தப்பட்ட அனைத்து பயிற்சி அமர்வுகளும் செல்லாதவை என்பதே இதன் அர்த்தம். அந்த சிமுலேட்டரில் நீங்கள் பயிற்சியும் பெற முடியாது திறனை சோதனை செய்யவும் முடியாது. எனவே இந்த சிமுலேட்டரில் பயிற்சி பெற்ற அனைத்து விமானிகளின் உரிமமும் தொழில்நுட்ப ரீதியாகப் பார்த்தால் செல்லாதது ஆகிவிடும்.” எனக் கூறுகிறார் வாடியா.
ஏர் இந்தியா விபத்து
குஜராத்தில் ஜூன் 12 அன்று ஆமதாபாத் செல்லவிருந்த ஏர் இந்தியாவின் ஏஐ-171 விபத்துக்குள்ளானது.
ஆமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட அந்த விமானத்தில் 242 பேர் பயணித்தனர்.
புறப்பட்ட சில வினாடிகளிலே விமானம் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஒருவர் மட்டுமே உயிர் பிழைத்தார். அதே வேளையில் விமானம் கட்டடத்தில் மோதியதில் பலர் உயிரிழந்தனர். கடந்த பத்தாண்டில் உலகம் முழுவதும் நடைபெற்ற விபத்துக்களில் மோசமான விபத்தாக இது மாறிப்போனது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு