பட மூலாதாரம், Sippy Films

படக்குறிப்பு, ஷோலேவில் அமிதாப் பச்சன் (வலது) மற்றும் தர்மேந்திரா (இடது) உட்பட முக்கிய நட்சத்திரங்கள் இடம்பெற்றிருந்தனர். எழுதியவர், சுதா ஜி திலக்பதவி, 44 நிமிடங்களுக்கு முன்னர்

இந்திய திரையரங்குகளில் முதன்முதலில் வெளியாகி ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு, இதுவரை தயாரிக்கப்பட்டதிலேயே சிறந்த இந்தி மொழி திரைப்படமாக கருதப்படும் ஷோலே (தணல்) – ஒரு பிரமாண்டமான மறுவருகையை பெறுகிறது.

திரைப்பட ஆர்வலர்களுக்கு ஒரு முக்கிய நிகழ்வாக, ரமேஷ் சிப்பியின் 1975-ஆம் ஆண்டு படைப்பான இந்த மாபெரும் திரைப்படத்தின் முழுமையாக மறுசீரமைக்கப்பட்ட தணிக்கை செய்யப்படாத பதிப்பு, இத்தாலியில் உள்ள போலோக்னாவில் நடைபெறும் இல் சினிமா ரிட்ரோவாடோ திரைப்பட விழாவில் வெள்ளிக்கிழமை ஒளிபரப்பட்டடது.

இந்த பதிப்பில், தணிக்கைக் குழுவின் ஆட்சேபனையால் மாற்றப்பட்ட படத்தின் அசல் முடிவு மற்றும் நீக்கப்பட்ட காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

சலீம்-ஜாவேத் என்ற இரண்டு எழுத்தாளர்களால் உருவாக்கப்பட்டு, அமிதாப் பச்சன், தர்மேந்திரா, ஹேமா மாலினி, ஜெயா பதூரி, சஞ்சீவ் குமார் மற்றும் மறக்க முடியாத கப்பார் சிங் கதாபாத்திரத்தில் அம்ஜத் கான் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களை கொண்ட ஷோலே, மேற்கத்திய மற்றும் சாமுராய் கிளாசிக் திரைப்படங்களிலிருந்து திரை கற்பனைகளை பெற்றிருக்கிறது. இருப்பினும், இது தனித்துவம் மிக்க இந்திய படைப்பாகவே இருக்கிறது.

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.204 நிமிடம் ஓடும் இந்த திரைப்படம், ராம்கர் என்ற கற்பனையான கிராமத்தில் நடக்கும் நன்மை – தீமைக்கு இடையே நடக்கும் போராட்டம் பற்றிய கதை. இதில், கொடூர கொள்ளையனான கப்பார் சிங்கை (இந்திய திரை உலகில் மிகவும் புகழ்பெற்ற வில்லன் கதாப்பாத்திரங்களில் ஒன்று) வீழ்த்த ஜெய் மற்றும் வீரு (பச்சன் மற்றும் தர்மேந்திரா) என்ற இரு சிறு குற்றவாளிகளை முன்னாள் ஜெயிலர் தாக்கூர் பணியமர்த்துகிறார்.

Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

End of அதிகம் படிக்கப்பட்டது

முதலில் வெளியிடப்பட்டபோது, மும்பையில் 1500 பேர் அமர்ந்து பார்க்கக்கூடிய மினர்வா திரையரங்கில் ஷோலே திரைப்படம் ஐந்து வருடங்கள் தொடர்ந்து இடைவிடாது ஓடி சாதனை படைத்தது.

பின்னர் இது பிபிசி இந்தியாவின் ஆன்லைன் வாக்கெடுப்பில் “நூற்றாண்டின் சிறந்த திரைப்படமாக” தேர்வு செய்யப்பட்டதுடன், பிரிட்டிஷ் ஃபிலிம் இன்ஸ்டிடியூட் நடத்திய வாக்கெடுப்பில் இந்தியாவின் மிகச் சிறந்த திரைப்படமாக தேர்வானது.

ஆர்.டி. பர்மனின் பாடல்கள் மற்றும் உடனடியாக நினைவுக்கு வரும் இந்த திரைப்படத்தின் வசனங்களின் இசைத்தட்டுகள் மற்றும் கேசட்டுகள் மில்லியன் கணக்கில் விற்பனையாகின.

பட மூலாதாரம், Sippy Films

படக்குறிப்பு, கப்பார் சிங் என்ற மறக்கமுடியாத கொடூர கொள்ளைக்காரன் கதாபாத்திரத்தில் அம்ஜத் கான் (இடது) நடித்தார். இந்தத் திரைப்படம் ஒரு கலாசார நிகழ்வாகவும் உள்ளது. இத்திரைப்படத்தின் வசனங்கள் திருமணங்களில் மேற்கோள் காட்டப்படுகின்றன, அரசியல் உரைகளில் குறிப்பிடப்படுகின்றன, மற்றும் விளம்பரங்களில் நகைச்சுவையாகப் பயன்படுத்தப்படுகின்றன.

“ஷோலே உலகின் எட்டாவது அதிசயம்,” என அதில் ஒரு சிறு நகர மோசடிக்காரராக பச்சனுடன் இணைந்து நடித்த தர்மேந்திர அண்மையில் தெரிவித்திருந்தார்.

திரைப்படத்தை பதிவு செய்தது ஒரு “மறக்கமுடியாத அனுபவம்,” எனும் பச்சன், “இருப்பினும் அந்த நேரத்தில் இது இந்திய திரையுலகில் ஒரு திருப்புமுனையாக இருக்கும் என எனக்குத் தெரியாது,” என தெரிவித்தார்.

பிலிம் ஹெரிடேஜ் ஃபவுண்டேஷனின் ஷிவேந்திர சிங் துங்கர்பூரின் கூற்றுப்படி, அசல் முடிவு மற்றும் வெளியிடப்படாத நீக்கப்பட்ட காட்சிகளை கொண்டிருக்கும் இந்தப் புதிய மறுசீரமைப்புதான் ‘ஷோலே’யின் மிகவும் உண்மையான பதிப்பு.

அசல் பதிப்பில், கப்பார் சிங்கை தாக்கூர் கூர்மையான ஆணிகள் பதிக்கப்பட்ட காலணிகளால் நசுக்கி கொல்கிறார்.

ஆனால், தணிக்கைக் குழு இதற்கு ஆட்சேபனை தெரிவித்தது. ஒரு முன்னாள் காவல் அதிகாரி சட்டத்தை தனது கைகளில் எடுத்துக்கொள்வது என்ற கருத்தை அவர்கள் ஏற்கவில்லை.

படத்தில் அற்புதமாக படம்பிடித்து இடம்பெற்ற வன்முறையும் அதிகப்படியானது என அவர்கள் கருதினர்.

நாட்டில் அப்போதைய காங்கிரஸ் அரசு, மக்கள் உரிமைகளை இடைநிறுத்தம் செய்த நெருக்கடி நிலை அமலில் இருந்தபோது வெளியானதால் இந்தப் படம் அசாதாரணமாக கடுமையான தணிக்கைகளை எதிர்கொள்ள நேரிட்டது.

பட மூலாதாரம், Sippy Films

படக்குறிப்பு, மேற்கத்திய மற்றும் சாமுராய் திரைப்படங்களிலிருந்து ஷோலே ஊக்கம் பெற்றிருக்கிறது, இருப்பினும் தனித்தன்மை வாய்ந்த இந்திய படைப்பாக இருக்கிறதுஅவர்களுடன் பேசி தீர்வு காணும் முயற்சிகள் தோல்வியடைந்த பின்னர், திரைப்படத்தின் முடிவை மாற்றி படமாக்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளானர் சிப்பி.

திரைப்படத்தின் நட்சத்திரங்களும், தொழில்நுட்ப குழுவினரும் – தென்னிந்தியாவில் ராம்கர் என்ற கற்பனை கிரமமாக மாறியிருந்த ராமநகரத்தின் கரடுமுரடாக மலைகளுக்கு அவசரமாக அழைத்துச் செல்லப்பட்டனர். கப்பர் சிங் கொல்லப்படாமல் கைது செய்யப்படுவதான மென்மையாக்கப்பட்ட புதிய முடிவுடன் திரைப்படம் ஒருவழியாக சென்சார் அனுமதியை பெற்றது.

இந்த காவியத்தை மறுசீரமைக்கும் மூன்றாண்டு பயணம் எளிதானதாக இல்லை. அசல் 70 எம்எம் பதிவுகள் அழிந்துவிட்டன, கேமாரா நெகடிவ்கள் மிகவும் சேதமடைந்த நிலையில் இருந்தன.

ஆனால் 2022-ல், இந்த திரைப்படத்தை மறுசீரமைக்கும் முன்மொழிவுடன் ரமேஷ் சிப்பியின் மகன் ஷெஷாத் சிப்பி மும்பையை சேர்ந்த ஃபிலிம் ஹெரிடேஜ் பவுண்டேசனை அனுகினார்.

பட மூலாதாரம், Sippy Films

படக்குறிப்பு, இதயமுள்ள ஒரு தைரியமான பசந்தி எனும் குதிரை வண்டி ஓட்டுனராக ஹேமா மாலினி (வலது) திரையை பிராகசிக்கச் செய்கிறார்மும்பையில் ஒரு கிடங்கில் திரைப்படம் தொடர்புடைய பல பொருட்கள் சேமிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். ஒரு சூதாட்டம் போல் தோன்றிய இது இறுதியில் ஒரு அற்புதமாக மாறியது, பெயரிடப்பட்ட பெட்டிகளுக்குள் 35 எம் எம் எம் கேமரா மற்றும் ஒலி நெகடிவ்கள் இருந்தன.

உற்சாகம் அத்துடன் நிற்கவில்லை.

திரைப்படத்தின் கூடுதல் ரீல்கள் பிரிட்டனில் இருப்பது குறித்து ஃபவுண்டேஷனுக்கு சிப்பி பிலிம்ஸ் தெரிவித்தது. பிரிட்டிஷ் ஃபிலிம் இன்ஸ்டிடியூட்டின் ஆதரவுடன் காப்பக்கத்தில் இருந்தவற்றை அந்தக் குழு அணுகியது. இவை இத்தாலியின் போலோக்னாவில் உள்ள உலகின் சிறந்த திரைப்பட மறுசீரமைப்பு நிறுவனங்களில் ஒன்றான எல்’இம்மாஜின் ரிட்ரோவாடாவுக்கு அனுப்பப்பட்டன.

அசல் 70மிமீ பிரிண்டுகள் இழந்துவிட்ட நிலையிலும், கடுமையாக சேதமடைந்த நெகட்டிவ்களுடனும், மும்பை மற்றும் பிரிட்டனில் இருந்து பெறப்பட்ட பகுதிகளுடன், பிரிட்டிஷ் பிலிம் இன்ஸ்டிடியூட் மற்றும் இத்தாலியின் எல்’இம்மாஜின் ரிட்ரோவாடாவுடன் இணைந்து, ஆவண காப்பாளர்கள் கவனமாக ஒன்றிணைத்தனர். இந்த முயற்சியில், படத்தைப் படமாக்க பயன்படுத்தப்பட்ட அசல் கேமராவும் கூட கண்டறியப்பட்டது.

ஷோலே முதலில் திரையரங்குகளில் வெளியான போது மோசமான வரவேற்பே இருந்தது என்பது சுவாரஸியமான தகவல். ஆரம்ப விமர்சனங்கள் கடுமையாக இருந்தன, பாக்ஸ் ஆபிஸ் நிலையற்றதாக இருந்தது, 70மிமீ பிரிண்ட் சுங்க சோதனையால் தாமதமானது.

இந்தியா டுடே இதழ் இந்தப் படத்தை “அணைந்த தணல்” என்று அழைத்தது. ஃபிலிம்ஃபேர் இதழின் பிக்ரம் சிங், “இந்தியச் சூழலில் மேற்கத்திய பாணியை ஒட்ட முயலும் தோல்வியடைந்த முயற்சி”என்பதுதான் இந்த திரைப்படத்தின் முக்கிய பிரச்னை என்று எழுதினார்.

“இந்தப் படம் ஒரு மேற்கத்திய பாணி நகல் – இங்கும் இல்லை, அங்கும் இல்லை.”

பட மூலாதாரம், Sippy Films

படக்குறிப்பு, ஷோலே ஐந்து வருடங்களுக்கு மேல் திரையிடப்பட்ட மும்பையின் மினர்வா திரையரங்கின் வெளியே காணப்பட்ட நீண்ட வரிசை. ஆரம்பத் திரையிடல்களில், பார்வையாளர்கள் மௌனமாக உட்கார்ந்திருந்தனர் – சிரிப்பு இல்லை, கண்ணீர் இல்லை, கைதட்டல் இல்லை.

“வெறும் மௌனம்,” என்று திரைப்பட எழுத்தாளர் அனுபமா சோப்ரா தனது ‘ஷோலே: தி மேக்கிங் ஆஃப் எ கிளாசிக்’ என்ற புத்தகத்தில் எழுதுகிறார்.

வார இறுதியை எட்டியபோது திரையரங்கங்கள் நிரம்பின, ஆனால் பார்வையாளர்களின் கருத்து இன்னும் நிச்சயமற்றதாக இருந்தது – பதற்றம் உருவாகியது.

அடுத்த சில வாரங்களில், பார்வையாளர்கள் படத்தை ஏற்றுக்கொண்டனர், மற்றும் வாய்மொழியாக தகவல் பரவியது.

“காட்சிகள் பிரமாண்டமாக இருந்தன, ஒலி ஒரு அதிசயமாக இருந்தது… மூன்றாவது வாரத்தை எட்டியபோது, பார்வையாளர்கள் வசனங்களை திரும்பச் சொல்லத் தொடங்கினர். இதன் பொருள், சிலராவது படத்தை இரண்டாவது முறையாகப் பார்க்க வந்தனர் என்பதுதான்,” என்று சோப்ரா எழுதுகிறார்.

ஷோலே திரையிடப்பட்ட ஒரு மாதத்திற்குப் பிறகு, பாலிடோர் 48 நிமிட வசன ஒலிதட்டை வெளியிட்டது – பின்னர் நிலைமை மாறியது. படத்தின் கதாபாத்திரங்கள் புகழ்பெற்றன, கப்பார் சிங் – “உண்மையாக அச்சுறுத்தும், ஆனால் பரவலாக பிரபலமான” வில்லன் – ஒரு கலாச்சார நிகழ்வாக உருவானார். வெளிநாட்டு விமர்சகர்கள் இதை இந்தியாவின் முதல் “கறி வெஸ்டர்ன்” படம் என்று அழைத்தனர்.

ஷோலே மும்பையின் மினர்வா திரையங்கில் 3 வருடம் வழக்கமான காட்சிகளிலும், இரண்டு ஆண்டுகள் மேட்னி காட்சிகளிலும் திரையிடப்பட்டது. அதன் 240ஆவது வாரத்தில் கூட அரங்குகள் நிறைந்தன. ஷோலே பாகிஸ்தான் திரையரங்குகளை 2015 ஏப்ரலில் எட்டியது, 40 ஆண்டுகள் ஆகியிருந்தாலும் 10 ஆண்டுகளுக்கு முந்தைய -2002ஆம் ஆண்டு வெளியான ஷாருக் கான் நடித்த வெற்றிப்படம் தேவதாஸ் உட்பட பெரும்பாலான இந்திய திரைப்படங்களைவிட சிறப்பான வெற்றி பெற்றது.

திரைப்பட வினியோகஸ்தர் ஷியாம் ஷ்ராஃப் சோப்ராவிடம் கூறியதைப் போல “பிரிட்டீஷ் சாம்ராஜ்யத்தை பற்றி சொல்வதைப் போல், சூரியன் ஷோலேவின் மீது அஸ்தமிப்பது இல்லை,”

அரை நூற்றாண்டுக்கு பிறகும் ஷோலே பார்வையாளர்களை கவர்வது ஏன்? அமிதாப் பச்சன் ஒரு எளிமையான ஆனால் ஆழமான பதிலை தருகிறார், “தீமையின் மீது நன்மையின் வெற்றி.. அதைவிட முக்கியமானது மூன்று மணி நேரத்தில் கவித்துவமான நீதி! உங்களுக்கும் எனக்கும் இது ஒரு ஆயுள்காலத்தில் கிடைக்காது,” என நேர்காணல் எடுத்த ஒருவரிடம் அவர் தெரிவித்தார்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு