Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
நீங்கள் எத்தனையாவது குழந்தை என்பது உங்கள் குணநலனை தீர்மானிக்கிறதா?
எழுதியவர், மோலி கோர்மன்பதவி, ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
குழந்தைகளின் பிறப்பு வரிசை, அதாவது அவர்கள் மூத்தவரா, இளையவரா இல்லை நடுவில் உள்ளவரா என்ற விசயம் அவர்களின் ஆளுமையை வடிவமைக்கிறதா என்ற கேள்வி பல ஆண்டுகளாக குடும்பங்களை மட்டுமல்ல, உளவியலாளர்களையும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. ஆனால் அதற்கான சான்றுகள் நேரடியானவை அல்ல.
இரண்டு குழந்தைகள் உள்ள வீட்டின் மூத்த மகளாக, மூத்த சகோதரிக்கான பண்புகளை நான் அடிக்கடி உணர்கிறேன். பொறுப்பானவள், கடமையுணர்ச்சி உள்ளவள், அனைத்தும் கச்சிதமாக சரியாக இருக்க வேண்டும் என்று விரும்புபவள். என் அம்மாவும் தனது குடும்பத்தின் மூத்த மகள், அவரும் என்னைப் போன்றே இந்தப் பண்புகளைக் கொண்டவர் தான்.
மறுபுறம், எங்களை விட சற்று கவலை குறைந்தவளாக இருக்கும் என் தங்கை. அவளும் நானும் ஒரே வீட்டில் ஒரேவிதமான சூழ்நிலையில் வளர்ந்தாலும், நெருக்கமாக இருந்தாலும், எங்கள் ஆளுமைகள் மிகவும் வேறுபட்டவையாக இருப்பதை பார்க்க முடிகிறது.
இந்த வித்தியாசம், பிறப்பு வரிசையால் ஏற்படுமா என்று நான் யோசித்தேன். வீட்டின் மூத்த குழந்தையாகவோ, இளைய குழந்தையாகவோ அல்லது ஒற்றைக் குழந்தையாகவோ இருப்பது நாம் யார், உலகை எவ்வாறு வழிநடத்துகிறோம் என்பதை வடிவமைக்கிறது என்ற கருத்துக்கு ஏதேனும் அறிவியல் பின்னணி இருக்கிறதா?
நூற்றாண்டு கால மர்மம்
100 ஆண்டுகளுக்கும் மேலாக அறிவியல் சமூகத்தையும் பொதுமக்களையும் கவர்ந்திருந்தாலும், நமது எத்தனையாவது குழந்தை என்பது நமது குணநலன்களை தீர்மானிக்கிறதா என்ற கேள்வி இன்னும் விவாதத்திற்குரியதாகவே உள்ளது.
Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading
அதிகம் படிக்கப்பட்டது
End of அதிகம் படிக்கப்பட்டது
இது தொடர்பான ஆராய்ச்சி வரலாற்று ரீதியாக, சீரற்ற தரவுகளையே தந்துள்ளது. எளிமையாகச் சொன்னால், இது ஏன் என்பதற்கு பல காரணங்கள் இருப்பினும், அதனை அளவிடுவது கடினம். அமெரிக்காவின் டெக்சாஸின் ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தின் உளவியலில் இணைப் பேராசிரியரான ரோடிகா டாமியன், முந்தைய ஆய்வுகள் பெரும்பாலும் சிறிய மாதிரி அளவுகளை உள்ளடக்கியதாக விளக்குகிறார். கூடுதலாக, ஆளுமை சோதனைகள் பெரும்பாலும் சுயமாக அறிவிக்கப்படுவதால், அவை சார்புடையவைகளாக இருக்கலாம்.
ஐந்து காரணிகளைக் கொண்ட ஆளுமை மாதிரி பொதுவான ஆளுமை அமைப்பைத் தீர்மானிக்கப் பயன்படுகிறது. பிறப்பு வரிசையை ஆராயும் உளவியலாளர்கள் பின்வரும் பண்புகளின் அடிப்படையில் உடன்பிறந்தவர்களை அளவிடுகின்றனர் :
வெளிப்படைத்தன்மைநட்புறவு (உடன்பாடு)பொறுப்புணர்வுஉணர்ச்சி நிலைத்தன்மைஅனுபவத்திற்கான திறந்த மனதுபிறப்பு வரிசையே ஆளுமைக்கு காரணமா என்பதை ஆராய்வதை பல ‘குழப்பமான மாறிகள்’ கடினமாக்குகின்றன என்று சமீபத்திய ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன, அதாவது காரணிகள் ஒவ்வொரு நபரையும் ஒரே மாதிரியாக பாதிக்கிறது என்று கூறிவிடமுடியாது. உடன்பிறப்புகளின் மொத்த எண்ணிக்கை ஒரு காரணியாக இருக்கலாம்,
உதாரணமாக ஏழு குழந்தைகள் கொண்ட குடும்பத்துடன் ஒப்பிடும் போது, இரண்டு குழந்தைகள் மட்டுமே உள்ள குடும்பத்தில் ஒட்டுமொத்த இயக்கவியலும் வித்தியாசமாக இருக்கும் என்பது இயல்பானதே. இந்த வெவ்வேறு அளவிலான குடும்பங்களில் மூத்த அல்லது இளைய குழந்தையாக இருப்பது மிகவும் வித்தியாசமான அனுபவமாக இருக்கலாம், எனவே, மூத்த அல்லது இளைய குழந்தையை நேரடியாக ஒப்பிட்டு பார்ப்பது சரியாக இருக்காது.
பட மூலாதாரம், Getty Images
குடும்பத்தின் அளவு மற்றும் எந்தவொரு குடும்பத்திலும் குழந்தையாக இருப்பதன் அனுபவம், குடும்பத்தின் சமூகப் பொருளாதார நிலை (எடுத்துக்காட்டாக, உயர்ந்த சமூகப் பொருளாதார நிலையில் உள்ள பணக்கார குடும்பங்களில் குழந்தைகள் குறைவாக இருக்கின்றன) போன்ற பல காரணிகளுடன் சம்பந்தப்பட்டதாக இருக்கலாம். அதேபோல், ஒரு நபரின் வயது மற்றும் பாலினமும், குடும்பத்திற்குள்ளும் அதற்கு அப்பாலும் அவர்களுக்கு ஏற்படும் அனுபவத்தில் தாக்கத்தை ஏற்படுத்தலாம்.
இந்தச் சூழலில், பிறப்பு வரிசை என்பது நமது ஆளுமைகளில் நிலையான, உலகளாவிய தாக்கங்களையும் ஏற்படுத்துகிறதா என ஆராய்ச்சியாளர்களால் முடிவு செய்ய முடியவில்லை. ஆனால் பிறப்பு வரிசை என்பதை கணக்கில் எடுத்துக் கொள்ளமுடியாது என்பது இதன் பொருளல்ல. சில குடும்பங்கள் அல்லது கலாசாரங்களுக்குள் பிறப்பு வரிசை முக்கியமானதொரு பங்கை வகிக்கக்கூடும்.
“மக்களிடம் இருக்கும் பல நம்பிக்கைகள் காலத்திற்கு பொருந்தாதவை அல்லது ஒருபோதும் பெரிய அளவில் ஆதரிக்கப்படாதவை என நினைக்கிறேன்,” என்று ஜெர்மனியில் உள்ள லீப்ஜிக் பல்கலைக்கழகத்தின் ஆளுமை ஆராய்ச்சியாளரான ஜூலியா ரோஹ்ரர் கூறுகிறார். “உதாரணமாக, ‘மூத்த மகள் சிண்ட்ரோம்’ என்பது ஒரு பெரிய விஷயம். நிச்சயமாக, பெண்கள் பெரும்பாலும் வெவ்வேறு பாத்திரங்களை வகிக்கவேண்டும் என்றும், அதிக கவனிப்பை வழங்கவேண்டும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் மூத்த குழந்தைகள் இளைய உடன்பிறப்புகளை கவனித்துக்கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது,” என்று அவர் கூறுகிறார்.
“சில பெண்களுக்கு, இது அவர்களின் அனுபவத்துடன் சரியாகப் பொருந்தக்கூடும், ஆனால் ஒவ்வொரு குடும்பமும் வித்தியாசமாக இருப்பதால் அனைவருக்கும் இது பொருந்தவேண்டிய அவசியம் இல்லை.” வேறு வார்த்தைகளில் கூறுவதானால், மூத்த மகள்கள் எல்லோரும் பொறுப்பானவர்களாகவும் அக்கறையுள்ளவர்களாகவும் இருக்க மாட்டார்கள். ஆனால் சிலருக்கு, “மூத்த மகள் சிண்ட்ரோம்” என்ற யோசனை உண்மையாகத் தோன்றலாம், ஏனெனில் அவர்கள் தங்கள் இளைய உடன்பிறப்புகளைக் கவனித்துக் கொள்ள வேண்டியிருந்தத அனுபவம் அதை ஒப்புக் கொள்ளச் செய்யும்.
ரோஹ்ரரும் அவரது சகாக்களும், பிரிட்டன், அமெரிக்கா மற்றும் ஜெர்மனியில் நடத்தப்பட்ட ஆய்வுகளின் மூன்று பெரிய தரவுத்தொகுப்புகளை ஆராய்ந்த பிறகு, பிறப்பு வரிசை என்பது, “ஆளுமைப் பண்புகளில் நீடித்த விளைவைக் கொண்டிருக்கவில்லை” என்பதைக் கண்டறிந்துள்ளனர், இந்தத் தரவுத்தொகுப்புகள் ஒவ்வொன்றும் பல ஆயிரம் பேரின் தரவுகளைக் கொண்டுள்ளது. இருப்பினும், பிறப்பு வரிசையின் தாக்கம் ஒரு குறிப்பிட்ட பண்பில் இருப்பதை ஆய்வு முந்தைய கண்டுபிடிப்புகள் உறுதிப்படுத்தின, அந்த பண்பின் பெயர் ‘புத்திசாலித்தனம்’.
புத்திசாலித்தனம் என்பது புரிந்துக் கொள்வதற்கு சிக்கலை ஏற்படுத்தக்கூடிய ஒன்று. அதனை அறிவுத்திறன் தொடர்பான சோதனைகளில் செயல்திறன் மற்றும் சுயமாக உணரப்பட்ட அறிவுத்திறன் ஆகியவற்றின் வடிவத்தில் மட்டுமே புத்திசாலித்தனத்தை இந்த ஆய்வு அளவிடுகிறது.
“முதல் குழந்தைகள், வெளிப்படையாக அளவிடப்பட்ட நுண்ணறிவுத் திறனில் அதிக மதிப்பெண் பெறுவதை நாங்கள் உறுதிப்படுத்தினோம், அதேபோல, அவர்கள், தங்களை புத்திசாலிகள் என்று சொல்வதும் உண்மை என்பதைக் கண்டறிந்தோம்,” என்று ரோஹ்ரரும் அவரது சகாக்களும் ஆய்வில் குறிப்பிட்டுள்ளனர். நுண்ணறிவு சோதனைகளில் செயல்திறன் “முதல் குழந்தைகளுடன் ஒப்பிடும்போது, அடுத்து பிறந்த குழந்தைகளுக்கு குறைவாகவே இருக்கிறது” என்று முந்தைய ஆராய்ச்சி ஆவணப்படுத்தியிருந்தது.
பிறப்பு வரிசை மற்றும் பிற ஆளுமைப் பண்புகளைப் பொறுத்தவரை, ஒருவரின் அனுபவத்தைப் பற்றி சிந்திப்பது அர்த்தமுள்ளதாக இருக்கும் என்று ரோஹ்ரர் கூறுகிறார், உலகளாவிய முறை இல்லாவிட்டாலும் கூட: “இது இதேபோன்ற சூழ்நிலையில் வளர்ந்த மற்றவர்களைக் கண்டறியக்கூடிய ஒரு வழிமுறையை வழங்குகிறது, மேலும் நீங்கள் அனுபவங்களைப் பரிமாறிக்கொள்ளலாம்,” என்று அவர் “மூத்த மகள் சிண்ட்ரோம்” போன்ற சொற்களைப் பற்றி கூறுகிறார். “இந்த அனுபவம் உலகளாவியது என்று கருதாத வரை, உங்கள் அனுபவத்தை அந்த வழியில் வடிவமைப்பதில் எந்தத் தவறும் இல்லை” என்று அவர் கூறுகிறார்.
இந்த கருத்தையே டாமியனும் எதிரொலிக்கிறார், “ஆளுமையில் முறையான வேறுபாடுகளை நாம் காணவில்லை என்றாலும், ஒவ்வொரு குடும்பத்திற்குள்ளும் அல்லது ஒவ்வொரு கலாசாரத்திற்குள்ளும் பிறப்பு வரிசையின் அடிப்படையில் வெவ்வேறு விளைவுகளுக்கு வழிவகுக்கும் சமூக செயல்முறைகள் இல்லை என்று சொல்லிவிடமுடியாது.”
உதாரணமாக, பிரிட்டன் வரலாற்று ரீதியாக (ஆண் குழந்தைகளை விரும்பும்) ‘தலைமகன் உரிமை’ என்ற வகையில், குடும்பச் சொத்து, சொத்து அல்லது பட்டங்களை வாரிசுரிமையாகப் பெறுவதில் மூத்த குழந்தையே முதன்மையானவராக இருக்கும். 2013ஆம் ஆண்டில், அரச வாரிசுரிமைச் சட்டம் (Succession to the Crown Act) திருத்தம் நிறைவேற்றப்பட்டதன் மூலம், முடியாட்சிக்குள் ‘தலைமகன் உரிமை’ முடிவுக்கு வந்தது. அதாவது, பாலினத்தைப் பொருட்படுத்தாமல், மூத்த குழந்தை பெண்ணாக இருந்தாலும் வாரிசுரிமை உண்டு என்று சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டது.
முதல் குழந்தைக்கு குடும்பச் சொத்து பற்றிய சிந்தனை வியக்கத்தக்க வகையில் பரவலாகவும் தொடர்ந்து வந்துள்ளது. ஊடக சாம்ராஜ்யத்தைக் கைப்பற்ற ஒரு குடும்பம் நடத்தும் போராட்டத்தைப் பற்றிய HBO நையாண்டி நகைச்சுவை நாடகமான வாரிசுரிமையில், இறுதிப் பகுதியில் ஒரு கதாபாத்திரம் “நான் தலைமகன்!” என்று கூச்சலிடுவார். பிறப்பின் அடிப்படையில் தனது தந்தையின் தலைமை நிர்வாக அதிகாரி பதவியை ஏற்கும் உரிமை தனக்கு கொடுக்கப்படவேண்டும் என்று அவர் நம்புகிறார். (அவர் உண்மையில் இரண்டாவது மூத்த மகன், ஆனால் இந்தக் கதையை நாம் குறிப்புக்காக சுட்டிக்காட்டுகிறோம்).
“சமூக நடைமுறை என்பது, பிறப்பு வரிசையை அடிப்படையாகக் கொண்டால், பிறப்பு வரிசை உங்கள் வெளிப்பாடுகளில் தாக்கத்தை ஏற்படுத்தும்” என்கிறார் டாமியன்.
முதன்மை மரபுரிமை என்பது மூத்த குழந்தையின் குடும்பச் செல்வம், சொத்து அல்லது பட்டங்களை மரபுரிமையாகப் பெறுவதற்கான பிறப்புரிமையைக் குறிக்கிறது
பட மூலாதாரம், Emmanuel Lafont
வயது வெறும் எண்தானா?
வயது தொடர்பான அனுபவங்கள், பிறப்பு வரிசையால் பாதிக்கப்படும் ஆளுமைப் பண்பு அல்லது நடத்தை என எளிதில் தவறாகப் புரிந்து கொள்ளப்படலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் விளக்குகிறார்கள். மூத்த, “பொறுப்பான” உடன்பிறப்பை உதாரணமாக எடுத்துக் கொள்ளுங்கள், “வயது கூடக்கூட, மக்கள் அதிக பொறுப்புள்ளவர்களாகவும், சுய கட்டுப்பாடு கொண்டவர்களாகவும் மாறுகிறார்கள். எனவே, முதல் குழந்தை எப்போதும் அதற்கு பின்னர் பிறந்த குழந்தையை விட மூத்தவராகவே இருக்கும். பெற்றோர் தங்கள் குழந்தைகள் வளர்வதை கவனிக்கும்போது, முதல் குழந்தை எப்போதும் அதிக பொறுப்புள்ளவராகவே இருக்கும்,” என்கிறார் டாமியன்.
“மற்றொரு விஷயம் என்னவென்றால், வயதாகும் போது ஒருவரின் தன்னுணர்வு அதிகமாகிறது,” என்று அவர் மேலும் கூறுகிறார். “எனவே, இரண்டாவது பிறந்த குழந்தை மிகவும் அன்பானதாகவும், உணர்ச்சி நிலைத்தன்மை குறைவாக இருப்பதாகவும் தோன்றலாம், ஏனென்றால் எல்லாவற்றுக்கும் பயந்து நடுங்கும் 14 வயது குழந்தையை விட 10 வயது குழந்தை மிகவும் மகிழ்ச்சியாகவும், தன்னம்பிக்கையுடனும் இருக்கிறது. ஏனென்றால் இரண்டு குழந்தைகளும் எதிர்கொள்ளும் சவால்கள் வெவ்வேறானவை.”
குழந்தைகளின் நட்பு வட்டங்கள் போன்ற காரணிகளும் ஆளுமைப் பண்பில் முக்கியமான இடம் பிடிப்பவையாகும். குற்றமிழைக்கும் சகாக்களுக்கும் குற்றமிழைக்கும் நடத்தைக்கும் இடையிலான தொடர்பை பல ஆய்வுகள் குறிக்கின்றன. உதாரணமாக, ஒரு குழந்தை தன்னைச் சுற்றியுள்ள மக்களைப் பொறுத்து விதிகளை மீறலாம்.
புத்திசாலி உடன்பிறப்புகள்
மேற்கூறியபடி, பிறப்பு வரிசைக்கும் புத்திசாலித்தனத்திற்கும் இடையிலான தொடர்பு என்பது, பிறப்பு வரிசை ஆராய்ச்சியில் காணப்படும் ஒரு நிலையான கண்டுபிடிப்பு ஆகும். இதில் முதல் குழந்தைகள் இளைய குழந்தைகளை விட அறிவு தொடர்பான பண்புகளில் (புத்திசாலித்தனம்) சராசரியாக சற்று அதிகமாக உள்ளனர். பெரும்பாலும் வாய்மொழி நுண்ணறிவு சோதனை முடிவுகளில் தோன்றும் இது மிகச் சிறிய விளைவையே ஏற்படுத்துகிறது,” என்கிறார் டாமியன்.
“ஒரே சோதனையை வெவ்வேறு நாள் அல்லது மாறுபட்ட மனநிலையில் இருக்கும்போது இரண்டு முறை எடுத்தால், பெறும் மதிப்பெண்களும் வித்தியாசமாகவே இருக்கும். ஏனெனில், அன்று காலையில் என்ன சாப்பிட்டீர்கள், [அல்லது] எவ்வளவு நேரம் தூங்கினீர்கள் என்பது போன்ற கேள்விகளின் அடிப்படையில் மதிப்பெண் கொடுக்கப்படும்போது அது மாறுபடும்.”
வாழ்க்கையின் ஆரம்ப ஆண்டுகளில் அறிவாற்றல் தூண்டுதலாலும் இதனை விளக்கலாம். ஒரு குடும்பத்தில் பெரியவர்கள் அதிகமாகவும், ஒரே குழந்தையும் இருந்தால், அந்தக் குழந்தை அதிகமான வார்த்தைகளை அறிந்துக் கொள்ளவும், பல விசயங்களை சுலபமாக கற்றுக் கொள்ளவும் முடியும் என்பதை டாமியன் சுட்டிக்காட்டுகிறார். ஆனால் ஒரு குடும்பத்தில் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும்போது, அறிவுசார் தூண்டுதலின் அளவுகள் குறையக்கூடும். “எனவே அவர்கள் மரபணு ரீதியாக புத்திசாலிகள் அல்லது அவர்களுக்கு அதிக திறன் உள்ளது என்பது முக்கியமல்ல, அறிவுத்திறன் தேர்வில் அவர்கள் அதிக மதிப்பெண் பெறுவதற்கு, நிறைய வார்த்தைகளை அறிந்திருப்பதன் காரணமாக இருக்கலாம்” என்று அவர் கூறுகிறார்.
“இரண்டு குழந்தைகள் இருக்கும் போது, மூத்த குழந்தைக்கு, இளைய உடன்பிறப்புடன் நேரம் செலவிடுவது மற்றும் அவர்களை கவனிப்பதற்கு நேரம் செலவாவதால், படிப்பதற்கான நேரம் குறையலாம்.” மூத்த குழந்தைகள் இளையவர்களுக்கு சொல்லிக் கொடுக்கும்போது பயிற்சி அளிக்கும்போது அல்லது அவர்களுக்கு விஷயங்களை விளக்கும்போது, அவர்கள் “அதிக அறிவாற்றல் வளங்களை” பயன்படுத்துகிறார்கள் என்ற பரிந்துரைகளும் உள்ளன.
பட மூலாதாரம், Getty Images
சுவாரஸ்யமாக, இந்த நுண்ணறிவு முறைகள் உலகளவில் பிரதிபலிக்கப்படவில்லை. உதாரணமாக, வளரும் நாடுகளின் தரவு வளர்ந்த நாடுகளின் தரவுகளிலிருந்து வேறுபடுகிறது . இந்தோனீசியாவில், நிதி நிலைமை காரணமாக குடும்பத்தில் இறுதியாக பிறந்த குழந்தைகள் தங்கள் மூத்த உடன்பிறப்புகளை விட சிறந்த கல்வி வாய்ப்புகளைப் பெற வாய்ப்புள்ளது. மூத்த குழந்தைகள், குடும்ப வருமானத்திற்கு பங்களிக்கத் தொடங்கும் போது மட்டுமே குழந்தைகளுக்கு கல்வி கற்பது சாத்தியமாகிறது.
டாமியன் மற்றும் அவரது சக ஊழியர்களின் கூற்றுப்படி, பிறப்பு வரிசை என்பது தொழில் வாழ்க்கையிலும் “மிகக் குறைவான விளைவுகளை” ஏற்படுத்துகிறது. கடந்த காலத்தில், மூத்த சகோதரர் அதிக கல்வி அல்லது அறிவியல் தொழிலில் நுழைவார் என்றும், இளைய சகோதரர் அதிக படைப்பாற்றல் மிக்கவராக இருப்பார் என்றும் விஞ்ஞானிகள் மத்தியில் ஒரு கருத்து நிலவியது . ஆனால் டாமியன் இதற்கு நேர்மாறான போக்கைக் கண்டறிந்தார்: 1960ஆம் ஆண்டில் அமெரிக்க உயர்நிலை மாணவர்களின் மாதிரியையும் பின்னர் 60 ஆண்டுகளுக்குப் பிறகு அதே பங்கேற்பாளர்களையும் ஆய்வு செய்த அவரது நீண்டகால ஆய்வில், முதலில் பிறந்தவர்கள் அதிக படைப்பாற்றல் மிக்க தொழில்களில் இருந்தது தெரியவந்தது.
பட மூலாதாரம், Emmanuel Lafont
‘சுயநலமி’ குழந்தைகள்?
பெற்றோருக்கு ஒரே குழந்தையாக இருப்பவர்கள், உடன்பிறந்தவர்களுடன் பிறந்த குழந்தைகளை விட அதிக சுயநலவாதிகள் என்ற ஒரே மாதிரியான கருத்தை எதிர்கொள்கின்றனர். ஏனெனில் அவர்கள் பெற்றோரின் கவனத்திற்காக போட்டியிட வேண்டியதில்லை. இருப்பினும், சமீபத்திய ஆய்வுகள் இந்த நினைப்பு தவறென்று சொல்கின்றன. உடன்பிறந்தவர்கள் இல்லாமல் வளர்வது சுயநலத்தை அதிகரிப்பதற்கு வழிவகுக்காது என்றும் ஆய்வுகள் காட்டுகின்றன. உடன்பிறந்தவர்களுடன் பிறந்த குழந்தைகளுடன் ஒப்பிடும்போது ஒற்றைக் குழந்தைகளின் சமூக நடத்தைகள் பெரிதாகவோ அல்லது பரவலாகவோ இல்லை என்றும், “வயதுக்கு ஏற்ப வளரக்கூடும்” என்றும் பிற ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.
பிறப்பு வரிசை ஆராய்ச்சி பொதுவாக ஒரு குடும்பத்தில் பிறந்த ஒரேயொரு ஒற்றை குழந்தையை கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை, ஏனெனில் அவர்களை உடன்பிறந்தவர்களுடன் வளர்ந்த குழந்தைகளுடன் ஒப்பிடுவது நியாயமாக இருக்காது. இருப்பினும், கனடாவின் ப்ரோக் பல்கலைக்கழகத்தின் உளவியல் பேராசிரியரான மைக்கேல் ஆஷ்டன் மற்றும் கனடாவின் கால்கரி பல்கலைக்கழகத்தின் உளவியல் பேராசிரியரான கிபியோம் லீ ஆகியோரின் 2025 ஆய்வறிக்கையின்படி, உடன்பிறந்தவர்களின் ஆளுமைப் பண்புகளையும் ஒற்றைக் குழந்தைகளையும் ஒப்பிட முடியும்.
அவர்களின் ஆய்வு சில புதிய மற்றும் வித்தியாசமான முடிவுகளை வழங்கியது. ஒரு மாதிரியில் 700,000 பெரியவர்களில், மற்றொரு தனி மாதிரியில் 70,000 க்கும் மேற்பட்டவர்களில் ஆளுமை, பிறப்பு வரிசை மற்றும் உடன்பிறப்புகளின் எண்ணிக்கை ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்பு இந்த ஆய்வில் ஆராயப்பட்டது. நடுவில் மற்றும் கடைசியாகப் பிறந்த குழந்தைகள் “நேர்மை-பணிவு” மற்றும் “ஒப்புக்கொள்ளும் தன்மை” அளவுகோல்களில் முதலில் பிறந்த உடன்பிறப்புகளை விட சராசரியாக உயர்ந்தவர்கள்.
“நேர்மை-பணிவு” என்பது ஒரு நபர் எவ்வளவு நேர்மையானவர் மற்றும் பணிவானவர் என்பதை அளவிடுகிறது, அதாவது, அதிக மதிப்பெண் பெற்ற ஒருவர் மற்றவர்களைக் கையாளவோ, விதிகளை மீறவோ அல்லது உரிமையுடையவராக உணரவோ வாய்ப்பில்லை. குறைந்த மதிப்பெண் பெற்ற ஒருவர் விதிகளை மீற அதிக விருப்பமுள்ளவராக இருக்கலாம் மற்றும் சுய-முக்கியத்துவத்தை அதிகமாக உணரலாம். உடன்பாடு அளவுகோலில், அதிக மதிப்பெண் பெற்ற நபர் மன்னிப்பவராகவும், மற்றவர்களை கையாள்வதில் மென்மையாகவும், சமரசம் செய்யத் தயாராகவும் இருப்பார். அதே நேரத்தில் குறைந்த மதிப்பெண் பெற்ற நபர் வெறுப்புணர்வைக் கொண்டிருக்கலாம், பிடிவாதமாக இருக்கலாம், சட்டென்று கோபப்படுவார், மற்றவர்களை விமர்சிப்பார்.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.”இந்த வேறுபாடுகள் அளவில் மிகச் சிறிதாக இருந்தன, குறிப்பாக ஒரே எண்ணிக்கையிலான குழந்தைகளைக் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்களை ஒப்பிட்டுப் பார்க்கும்போது,” என்று ஆஷ்டன் மற்றும் லீ ஒரு மின்னஞ்சலில் தெரிவித்தனர். “இதற்கு நேர்மாறாக, ஒற்றை குழந்தை குடும்பத்தைச் சேர்ந்த நபர்களுக்கும், ஆறு அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகள் கொண்ட குடும்பத்தைச் சேர்ந்த நபர்களுக்கும் இடையிலான இந்த பரிமாணங்களில் உள்ள வேறுபாடுகள் கணிசமாக மாறுபட்டிருந்தன. அந்த அளவு என்பது, சமூக விஞ்ஞானிகள் ‘சிறிய’ மற்றும் ‘நடுத்தர’ என்று அழைக்கும் அளவுகளுக்கு இடையிலான ஓரிடத்தில் என்று சொல்லலாம்.”
எனவே, பிறப்பு வரிசையின் செல்வாக்கு என்பது வெறும் ‘ஜாம்பி கோட்பாடா?’ அதாவது தவறான ஆனால் மறைய மறுக்கும் ஒரு கருத்தா? ரோஹ்ரர் இதை ஏற்கவில்லை. “நான் அதை ஜாம்பி கோட்பாடு என்று அழைப்பேனா என்று தெரியவில்லை,” என அவர் கூறுகிறார். “அறிவியல் கண்ணோட்டத்தில், இலக்கியம் மிகவும் முன்னேறி வருவதாக நான் நினைக்கிறேன்.”
எனவே, என்றாவது ஒருநாள், மூத்த மகளாக இருப்பதன் அர்த்தம் என்ன என்பதற்கான தெளிவான பதில் நமக்கு கிடைக்கக் கூடும். அதுவரை, என் தங்கையை விட நான் இயல்பாகவே புத்திசாலி என்று நம்பிக் கொள்வேன்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு