கும்பமேளாவில் குவிந்த குப்பை எங்கே சென்றது தெரியுமா? பிபிசி ஆய்வில் தெரியவந்த உண்மை காணொளிக் குறிப்பு, கும்பமேளாவில் குவிந்த குப்பை- ஜி பி எஸ் டிராக் செய்தபோது தெரிய வந்தது என்ன?கும்பமேளாவில் குவிந்த குப்பை எங்கே சென்றது தெரியுமா? பிபிசி ஆய்வில் தெரியவந்த உண்மை

23 நிமிடங்களுக்கு முன்னர்

கும்பமேளா உலகின் மிகப்பெரிய திருவிழா ஆகும். 4,000 ஹெக்டேரில் இந்த விழா 45 நாட்கள் நடைபெற்றது, இதில் 66 கோடி பக்தர்கள் கலந்து கொண்டனர். சுகாதாரத்திற்காக 15,000 பணியாளர்கள் மற்றும் 1,50,000 கழிவறைகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இருப்பினும், 30,000 டன் கழிவுகள் குவிந்தன, இது 6,500 ஆசிய யானைகளின் எடைக்கு சமம். கும்பமேளாவின் தூய்மை பணிகள் கின்னஸ் சாதனையை பெற்றிருந்தாலும், அந்த கழிவுகள் எப்படிக் கையாளப்பட்டன என்று அறிய ஜிபிஎஸ் டிராக்கர்களை பயன்படுத்தினோம்.

ஜிபிஎஸ் டிராக்கர் ஒன்று டயப்பரிலும், மற்றொன்று பிளாஸ்டிக் கழிவுகளில் வைக்கப்பட்டன. டயப்பர்கள் 500 ஆண்டுகள் வரை அழியாமல் இருக்கும், பிளாஸ்டிக் கழிவுகள் 20-500 ஆண்டுகள் சுற்றுச்சூழலில் இருக்கும். கழிவுகள் சேகரிப்பாளர்கள் மூலம் அகற்றப்பட்டதாகவும், அதிகாரிகள் அவை பஸ்வார் குப்பைக் கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் கூறினர்.

ஆனால், பஸ்வார் கிடங்கில் தரம் பிரிக்கப்படாத கழிவுகள் இருந்தன. மேலும், ஜிபிஎஸ் டிராக்கர் வைத்த டயப்பரும் அங்கேதான் இருந்தது. அரசு அறிவியல் முறையில் கழிவுகளை அகற்றுவதாக கூறினாலும், உண்மையில் அவை ஒரே இடத்தில் நீண்டகாலம் குவிக்கப்பட்டிருந்தன.

– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு