பலாலி இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்திற்கு 35 வருடங்களின் பின்னர், கட்டுப்பாடுகள் இன்றி வழிபட நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை இராணுவத்தினர் அனுமதித்திருந்த நிலையில் இன்றைய தினம் சனிக்கிழமை மீள ஆலயத்திற்கு செல்ல அனுமதி மறுத்துள்ளனர்.

உள்நாட்டு யுத்தம் காரணமாக கடந்த 1990ஆம் ஆண்டு ஜூன் மாதம் 15ஆம் திகதி பலாலியில் இருந்து மக்கள் வெளியேறி இருந்தனர். அதனை தொடர்ந்து அப்பகுதி இராணுவ உயர் பாதுகாப்பு வலயமாக காணப்பட்டது. 

கடந்த 35 வருட காலமாக உயர் பாதுகாப்பு வலயத்தினுள் உள்ள ஆலயத்திற்கு கடந்த 06 மாத காலத்திற்கு முதலே சுதந்திரமாக சென்று வழிபட அனுமதி வழங்கப்படும் என இராணுவத்தினர் அறிவித்து இருந்த போதிலும் , இதுவரை காலமும் கடுமையான கட்டுப்பாடுகளுடன் , விசேட தினங்களில் மாத்திரம் ஆலயத்திற்கு செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில், ஆலயத்திற்கு மாத்திரம் செல்வதற்கு என உயர் பாதுகாப்பு வலயத்தினுள் பிரத்தியோக பாதை அமைக்கப்பட்டு , குறித்த பாதை ஊடாக நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை முதல் மக்கள் ஆலயத்திற்கு மாத்திரம் சென்று வழிபாட்டு திரும்ப இராணுவத்தினர் அனுமதி வழங்கி இருந்தனர்.

இந்நிலையில் இன்றைய தினம் சனிக்கிழமை ஆலயத்திற்கு செல்லும் பிரத்தியோக பாதை இராணுவத்தினர் மூடி முட்கம்பி வேலி அமைத்திருந்ததுடன், இரு இராணுவத்தினர் கடமையிலும் ஈடுபடுத்தபட்டிருந்தனர்.

ஆலயத்திற்கு இன்றைய தினம் சனிக்கிழமை வழிபட சென்ற மக்கள் இராணுவத்தினர் ஆலயத்திற்கு செல்ல அனுமதிக்காததால் முட்கம்பி முன்பாக தேங்காய் உடைத்து கற்பூரம் கொளுத்தி பூப்போட்டு வழிப்பட்டனர்.